கிராமத்தை விட நகரங்களில் இரவில் ஏன் அதிக வெப்பம்? ஆபத்தும், தீர்வும் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கோடை காலங்களில் இருக்கும் மிகப்பெரிய கவலை, 'பகல் நேரத்தில் அடிக்கும் கடுமையான வெயிலை எப்படிச் சமாளிப்பது?' என்பதே.
அந்தக் கடுமையான வெயிலைச் சமாளித்து, பொழுது சாய்கையில் வீட்டை அடைந்துவிட்டால் போதும் என்ற மனநிலை தான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும்.
ஆனால், வெப்பத்தின் பாதிப்பு இரவு நேரங்களிலும் அதிகமாக இருக்கிறது. அதிலும், கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் இரவில் அதீத வெப்பநிலை நிலவுகிறது என்றும், அதனால் சில உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம் என்பதையும் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நகர்ப்புற வெப்பத் தீவு
'நகர்ப்புற வெப்பத் தீவு' (Urban heat island) விளைவு என்பது, சுற்றியுள்ள கிராமப்புறங்களை விட நகரங்கள் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் ஒரு நிகழ்வாகும்.
'2050-ஆம் ஆண்டில் மனிதகுலத்தில் கிட்டத்தட்ட 70% பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்பதால், 'நகர்ப்புற வெப்பத் தீவு' விளைவுகளைத் தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது மிகவும் அவசியம்' என அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.
நகரங்கள் வளரும்போது, சாலைகள் மற்றும் கட்டடங்கள் போன்ற புதிய கட்டுமானங்கள், மரங்கள், குளங்கள் மற்றும் மண் போன்ற இயற்கை மேற்பரப்புகளுக்கு மாற்றாக அமைகின்றன. இது, நகர்ப்புற காலநிலையிலும் அதற்கேற்ற மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில், காடுகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற இயற்கை நிலப்பரப்புகளை விட, இந்த சாலைகள் மற்றும் கட்டடங்கள் சூரியனின் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சிக் கொண்டு, சூரியன் மறைந்த பிறகு அதை வெளியிடுகின்றன. இதனால் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கிறது.
சூரியனின் வெப்பம் மட்டுமல்லாது, மக்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கார்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை, வெளிப்படுத்தும் ஆற்றல் பொதுவாக வெப்ப வடிவில் வெளியேறுகிறது.
ஓர் இடத்தில் அதிகமான மக்கள் இருந்தால், அது அதிகப்படியான வெப்பத்திற்கு வழிவகுக்கும். நகர்ப்புறங்களில் வெப்பநிலை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.
இதனால் சூரியன் மறைந்த பின்னரும், நகரங்களில் நீண்ட நேரத்திற்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
'சென்னையில், கோடைக்காலத்தின் இரவுகளில் நிலப்பரப்பு வெப்பநிலை (LST) 25 டிகிரி செல்சியஸ் முதல் கிட்டத்தட்ட 30 வரை இருக்கிறது, குறிப்பாக கட்டடங்கள் அதிகமுள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகம் உள்ளது' என்று திருச்சி என்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் 2001 முதல் 2022 வரையிலான செயற்கைக்கோள் தரவுகளைக் கொண்டு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம், சென்னையில் தாவரங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் சுமார் 23.5 டிகிரி செல்சியஸ் என்ற ஓரளவு குளிர்ச்சியான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
அந்த ஆய்வில், அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர் மற்றும் மாதவரம் போன்ற அடர்த்தியான கட்டடங்கள் நிறைந்த பகுதிகள் அதிக வெப்பநிலையை பதிவு செய்துள்ளதும், கிண்டி தேசியப் பூங்கா, அடையாறு ஆறு மற்றும் கடற்கரை ஓரப் பகுதிகள் நகரின் வெப்பத்தைத் தணிக்கும் பகுதிகளாக எஞ்சியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
உடல்நலக் குறைவுகள் என்ன?
மனித உடலின் இயற்கையான சுழற்சியின் (சர்க்காடியன் ரிதம்) ஒரு பகுதியாக, உடலின் மைய வெப்பநிலை மாலையிலும் உறக்கத்தின் போதும் இயற்கையாகவே குறைகிறது (பொதுவாக சுமார் 0.5–1 டிகிரி செல்சியஸ்).
இவ்வாறு உடலின் வெப்பநிலை குறைவது, இரவில் உறக்கம் வருவதற்கும் அது சீராக தொடர்வதற்கும் உதவுகிறது, உடலின் வளர்சிதை மாற்றத் தேவைகளைக் குறைக்கிறது, இதயம் மற்றும் பிற அமைப்புகள் புத்துணர்வு பெற அனுமதிக்கிறது.
உறக்கத்தின் போது, வாசோடைலேஷன் (Vasodilation- தோலுக்கு அருகிலுள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்தல்) மற்றும் வியர்த்தல் போன்ற வழிமுறைகள் மூலம் உடல் வெப்பத்தை மிகவும் திறம்பட வெளியேற்றுகிறது.
ஆனால், இரவில் நகர்புறங்களின் வெப்பம் அதிகரிக்கும்போது உடலின் இந்த இயற்கையான செயல்முறை பாதிக்கப்படுகிறது.
அத்தகைய வெப்பநிலை உயர்ந்த சூழலில், தன்னைத்தானே குளிர்விக்க உடல் முயற்சிக்கும்போது ஏற்படும் சிரமம், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக, அதீத வெப்பம், நாள்பட்ட நோய்களால் (இதய, மனநல, சுவாச மற்றும் நீரிழிவு தொடர்பான நோய்கள்) ஏற்படும் உடல்நல அபாயங்களை மோசமாக்கி, கடுமையான சிறுநீரகப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
'நகர்ப்புற வெப்பத் தீவுகள்' குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், முதியவர்கள், குழந்தைகள், வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் தெரிவிக்கிறது.
அதேபோல, இரவில் உயரும் வெப்பநிலையால் இதய நோய்கள் கொண்டவர்கள் அதிக ஆபத்திற்கு உள்ளாகின்றனர் என்றும், வெப்பம் தொடர்பான மரணங்களுக்கு இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பதும் ஒரு காரணம் என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆனால், "போதுமான தூக்கம் இல்லாதது, இதயத்திற்கு ஆபத்தானது தான் என்றாலும், கோடைகாலத்தில் மட்டுமே இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என்று சொல்லிவிட முடியாது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யா துர்காதேவி.
இருப்பினும், "இதய நோயாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் வெயில் கடுமையாக இருக்கும் சமயத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தாங்கள் தூங்கும் அறைகளில் ஜன்னல்களைத் திறந்துவிட்டு போதுமான காற்று வசதி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்கிறார் அவர்.

'வெயில் மட்டுமே வெப்பமில்லை'
"மாலை 6 மணிக்கு பிறகு அதிகரிக்கும் வெப்பம் குறித்து நம்மில் பலர் கவலைப்படுவதில்லை. காரணம் வெயிலை மட்டும் தான் நாம் வெப்பமாக நினைக்கிறோம்" என்கிறார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் மருத்துவத் துறை தலைவர் எஸ். சந்திரசேகர்.
"காலையில் மட்டுமல்லாது மாலை வேளையிலும் அதிகமான நீர் அருந்துவது அவசியம்" என்று அறிவுறுத்தும் அவர், "மாலை நேரங்களில் காஃபின் (Caffeine) பானங்கள் அல்லது மது அருந்துவது, சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. இதனால், இரவில் உங்கள் உடல் வியர்த்து குளிர்ச்சியடைவது கடினமாகிறது" என்றும் அவர் கூறுகிறார்.
சிலர் கோடைகாலங்களில், இரவில் பீர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளதைக் குறிப்பிடும் அவர், "அது நிச்சயம் மிகவும் தவறான பழக்கம். எந்தவகையான மதுவையும் கோடைகாலங்களில் தவிர்ப்பது நல்லது. பீர் என்பது உடலுக்கு நிச்சயமாக குளிர்ச்சி இல்லை" என்கிறார்.
இரவில் வெப்பநிலை உயர்வது காரணமாக, மக்களின் தூக்கம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது, அது பசியின்மை, எடை இழப்பு அல்லது ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, இறுதியில் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், சமூகத்திலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
"வெப்பம் நிச்சயம் தூக்கத்தை பாதிக்கும், அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் அனைவரது வீட்டிலும் ஏ.சி வசதி இருக்காது எனும்போது, தூக்கம் பாதிக்கப்படுவது மனநலத்தையும் ஓரளவு பாதிக்கும். அதுவே சமூகத்திலும் எதிரொலிக்கிறது" என்கிறார் கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
ஏற்கனவே மனநலப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் பகல் நேரங்களில் வெயிலைத் தவிர்ப்பது மட்டுமல்லாது, இரவிலும் குளிர்ச்சியான, காற்றோட்டம் உடைய அறைகளில் உறங்குவது சிறந்தது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
தீர்வு என்ன?
பொதுவாக இரவு நேரங்களில், உட்புற வெப்பநிலையை விட வெளிப்புற வெப்பநிலை குறைவாக இருக்கும். எனவே இருட்டிய பிறகு, ஜன்னல்களைத் திறந்து வைத்து, இரவு நேரக் காற்றைப் பயன்படுத்தி உங்கள் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
அதேபோல, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்கும்போது மட்டுமே மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும், வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்குக் மேல் இருந்தால், விசிறிகள் அறையின் வெப்பநிலையை அதிகரிக்கவே செய்யும்.
இரவில் ஏ.சி கருவியைப் பயன்படுத்தினால், வெப்பநிலையை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வைத்து, ஒரு மின்விசிறியை இயக்குவது, அறையை குளிர்ச்சியாக (23 டிகிரி செல்சியஸ் போன்று) உணர வைக்கும். மேலும், மின்சாரக் கட்டணத்தில் 70% வரை சேமிக்கவும் இது உதவும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
அதேசமயம், 'நகர்ப்புற வெப்பத் தீவு' என்ற மிகப்பெரிய அளவிலான சிக்கலுக்கு தனிமனித முயற்சிகள் மட்டுமே போதுமானது அல்ல.
நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை எதிர்த்துப் போராடுவதற்கான மிக எளிதான வழி, நகரங்களில் அதிக மரங்களை வளர்ப்பதாகும் என அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் தெரிவிக்கிறது.
நகரங்களில் பூங்கா நிலங்களை விரிவுபடுத்துவது, சாலைகளில் மரங்களை நடுவது மற்றும் தாவரங்கள் செழித்து வளர ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட 'பசுமை கூரைகளை' (green roofs) நிறுவுவது, கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளை வெப்பத்தை வெளியேற்றும் வகையில் காற்றோட்டம் உடைய வகையில் வடிவமைப்பது போன்ற தீர்வுகளை அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































