கந்துவட்டி தொல்லை: தீக்குளித்த நான்காவது நபரும் பலி
திருநெல்வேலியில் திங்களன்று கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த இசக்கிமுத்து குடும்பத்தினரில், இன்று(புதன்கிழமை அக் 25) இசக்கிமுத்துவும் இறந்துவிட்டாதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இசக்கிமுத்துவின் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் திங்கள்கிழமை இறந்துவிட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிக்சை பிரிவில் இருந்த இசக்கிமுத்து இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று இசக்கிமுத்துவின் குடும்பம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த காட்சி தமிழக காட்சி ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பானது.
இந்த சம்பவத்திற்கு பிறகு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் கந்துவட்டி தொடர்பான புகார்களை விசாரிக்க உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் கந்துவட்டி தொடர்பான புகார்களை விசாரிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் கந்துவட்டி தொடர்பான புகார்களை அளிக்க திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பலரும் உதவி எண்ணை நாடியுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இந்த சமயத்தில் இசக்கிமுத்துவின் தம்பி கோபி, தனது அண்ணன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை முறையாக நடத்தப்படாததுதான் தீக்குளிப்பு சம்பவத்திற்கு இட்டுச்சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இறந்த இசக்கிமுத்துவின் உடலை வாங்க மறுத்து அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

''திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து அண்ணன், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் எதிர்பாராதவிதமாக தீக்குளித்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அரூண் ஆகியோர் என் அண்ணன் வீடு வாங்கியுள்ளதாகவும், எல்லோரிடமும் கடன்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். இசக்கிமுத்துவுக்கு வீடு இல்லை. அவர்கள் சொல்லும் அந்த வீட்டின் பத்திரத்தை தரும்வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்,'' என்று போராட்டத்தில் ஈடுபட்ட கோபி தெரிவித்தார்.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அரூண் ஆகியோரிடம் கருத்துகேட்டபோது தீக்குளிப்பு சம்பவத்திற்கு இசக்கிமுத்துவை தூண்டியது யார் என்பது விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினர்.
விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் முழுமையான தகவல்களை அளிக்கமுடியும் என்று கூறினார்.
முதல்கட்டமாக இசக்கிமுத்து குடும்பத்திற்கு கடன் கொடுத்த முத்துலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இசக்கிமுத்துவிற்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் அவரிடம் இருந்து கடன் வாங்கியவர்கள் என பலரிடம் விசாரணை நடந்துவருகிறது என்றும் தெரிவித்தனர்.
WWE-ல் இந்தியர்கள்: ஆண் பிரிவில் தி கிரேட் காலி, பெண் பிரிவில் கவிதா!
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

































