சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கைவரிசை: இந்திய சரக்குக் கப்பல் கடத்தல்
பகுதியளவு தன்னாட்சி பெற்ற புன்ட்லாண்ட் பிரதேசத்தின் தொலைதூர கடற்பரப்பில் வைத்து இந்திய சரக்குக் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP
சோமாலிய கடற்கரையை நோக்கி இந்த சரக்குக் கப்பல் சென்று கொண்டிருந்ததது என்று தகவல் வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த கப்பலில் இருக்கும் ஊழியர்கள் அல்லது அது கொண்டு செல்லப்பட்ட இடம் பற்றிய விவரங்கள் ஏதுமில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னால், மொகதிஷு நோக்கி சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று கடற்கொள்ளையரால் பிடிக்கப்பட்டு, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக தோன்றுகிறது.
காணொளி: ஆப்ரிக்க நாடுகளின் புது ஒப்பந்தம் கடற்கொள்ளையை தடுக்குமா?
அந்த கடத்தல் சம்பவம் சோமாலிய கடற்பரப்பில் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்பட்ட முதல் கடத்தலாகும்.
"சோமாலிய கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பற்றி அறிய வந்துள்ளோம்" என்று புன்ட்லாண்டின் முன்னாள் இயக்குநர் அப்டிரிஸாக் முகமட் டிர்ரிர் ராய்டஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
ஹோபையோ துறைமுக நகரின் தெற்கில் 50 கிலோமீட்டரில் இந்த கடத்தல் நடைபெற்றதாக தனியார் நடத்தி வரும் டேனிலெ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
வழக்கமாக பிணைத்தொகை பெற்றுகொள்வதற்காக சோமாலிய கடற்கரையில் நிகழும் கடற்கொள்ளை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவில் குறைந்திருந்தது.
சர்வதேச அளவிலான ராணுவ ரோந்து மற்றும் உள்ளூர் மீன்பிடி சமூகங்களின் உதவியால்தான் இந்த கடற்கொள்ளைகள் குறைந்திருந்தன.
2011 ஆம் ஆண்டு இந்த கடற்கொள்ளை நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது 237 கடத்தல்கள் நடைபெற்றன. கடற்கொள்ளையால் ஏற்பட்ட ஓராண்டு நஷ்டம் 8 பில்லியன் டாலரென மதிப்பிடப்பட்டது.
கடல் கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த தமிழரின் அனுபவங்கள்
ஒரு தசாப்த காலத்திற்கு முன்னால். சோமாலிய கடற்கரையோர மீனவர்கள் பலரையும் கடற்கொள்ளையராக உருவாக்கிய அம்சங்கள் இன்னும் அப்படியே நிலவுவதாக பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்கு காட்நர் கூறியிருக்கிறார்.
சோமாலியா இப்போது பஞ்சத்தின் விளம்பில் உள்ளது. இளைஞர்களுக்கு ஒரு சில வேலைவாய்ப்புக்களே இருப்பதால் ஏழ்மை தலைவிரித்தாடுகிறது.
ஆசிய ஆழ்கடல் மீன்பிடிப்போரால் மீன்களின் இனவிருத்தி அழிக்கப்படுவதற்கு உள்ளூர் மக்களிடம் தணியாத எதிர்ப்பும் இருந்து வருகிறது.
காணொளி: பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்



































