You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான நிர்வாண படங்கள் - 'பெரும் பிழை' என சாடும் வழக்கறிஞர்கள்
- எழுதியவர், பெக்கி டேல் மற்றும் மாட் மர்பி
- பதவி, பிபிசி வெரிஃபை
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தணிக்கை செய்யப்படாத நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன.
இந்த கோப்புகளை தணிக்கை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட அவை இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன.
இதனால் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஈடுசெய்ய முடியாத" தீங்கு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறிய கோப்புகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று எப்ஸ்டீன் கோப்புகளின் ஒரு பகுதியாக சுமார் 40 புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, வார இறுதியில் முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வெளிப்படையாக பேசியது.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் படங்கள் முறையாகத் தணிக்கை செய்யப்படும் வரை அந்த வலைதளத்தை தடை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இந்த பிரச்னையை விரைந்து சரிசெய்ய நீதித்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக நியூயார்க் நீதிபதி செவ்வாயன்று தெரிவித்தார்.
"தொழில்நுட்பம் அல்லது மனிதப் பிழையின்" காரணமாக இந்தக் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, இதுகுறித்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை நீதித்துறை தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் இது சார்ந்த புதிய புகார்களை ஆய்வு செய்து வருவதாகவும், கூடுதல் தணிக்கை தேவைப்படும் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்த்து வருவதாகவும் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம், முழுமையாக தணிக்கை செய்யப்படாத கோப்புகளை ஆய்வு செய்து திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) கூறிய போதிலும் கூட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணத்தக்க படங்கள் புதன்கிழமை அன்றும் இணையத்தில் கிடைப்பதை பிபிசி வெரிஃபை கண்டறிந்தது.
இது குறித்து நீதித்துறையை அணுகிய பிபிசி, தணிக்கை செய்யப்படாத கோப்புகளின் பெயர்களையும் வழங்கியதுடன், இது பற்றிய கருத்தை கேட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பிராட் எட்வர்ட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஏற்பட்டுள்ள சேதம் ஈடுசெய்ய முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையின் மிகக் கொடூரமான தருணங்களில் ஒன்றை மீண்டும் பொதுமக்கள் முன் கொண்டுவந்துள்ளது," என்று எப்ஸ்டீனின் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஆஷ்லி ரூப்ரைட் பிபிசியிடம் கூறினார்.
பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த நான்கு படங்களில், முகம் மற்றும் உடல் தணிக்கை செய்யப்படாத நிலையில் முழுமையாக ஆடை அணியாத இளம்பெண்கள் காணப்பட்டனர்.
சமூக பிரபலங்கள் பலருடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த ஆதாரங்களுக்காக, வெளியிடப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோப்புகளில் தேடியபோது இவை கண்டறியப்பட்டன.
சிலரது புகைப்படங்கள் ஒரு சில ஆவணங்களில் தணிக்கை செய்யப்பட்டும், வேறு சிலவற்றில் தணிக்கை செய்யப்படாமலும் உள்ளன.
ஒரு கோப்பில் ஒரே படத்தின் இரண்டு பதிப்புகள் உள்ளன. அதில் ஒரு பதிப்பில் முகம் கருப்பு நிறக் கட்டத்தால் மறைக்கப்பட்டும், மற்றொன்றில் முகம் முழுமையாகத் தெரியுமாறும் உள்ளது.
மற்றொரு வீடியோவில், ஒரு பெண் தன் ஆடையை கழற்றி தனது மார்பகத்தை கேமராவிற்குக் காட்டுவதைப் போல் உள்ளது.
கிறிஸ்துமஸ் சமயத்தில் எப்ஸ்டீன் கோப்புகளின் சமீபத்திய தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, பாலியல் ரீதியான புகைப்படங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டக்கூடிய தகவல்களைத் தணிக்கை செய்யும் பணியை நீதித்துறை (DoJ) அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
அமெரிக்க காங்கிரஸ் விதித்த காலக்கெடுவுக்கு முன்னதாக, பேசிய துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான பணிகளுக்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால், கோப்புகள் சரியான நேரத்தில் வெளியிடப்படாது என்று கூறினார்.
"நாங்கள் வெளியிடப்போகும் ஒவ்வொரு துண்டு காகிதத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர், அவர்களின் பெயர், அடையாளம், அவர்களின் கதை என, பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்தும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறோம்," என்று அவர் அப்போது தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, வெளியிடப்பட்ட கோப்புகளில் உள்ள மருத்துவத் தகவல்கள் மற்றும் சட்ட அறிக்கைகள் மூலமாகவும் பலரது அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது.
கருவின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் தொடர்பான இரண்டு வீடியோக்களில் ஒருவரின் பெயர் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட நேரம், தேதி மற்றும் அது எடுக்கப்பட்ட இடம் எனக் கருதப்படும் விபரங்களுடன், கருவின் வளர்ச்சிக் காலமும் தெளிவாகத் தெரிந்தது.
மற்றொரு ஆவணத்தில், எப்ஸ்டீனிடம் விசாரணை நடத்தப்பட்ட வீடியோ பதிவில், ஒரு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடுவது இடம்பெற்றுள்ளது.
இந்தக் கோப்புகளில் அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களைப் போதுமான அளவில் பாதுகாக்கத் தவறியதற்காக, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நீதித்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
"பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எங்களுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் ஒருபோதும் பொதுவெளியில் வராதவர்கள், பொதுமக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் இப்போது பொதுப் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன," என்று வழக்கறிஞர்களில் ஒருவரான பிராட் எட்வர்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"இது உண்மையில் மிகப்பெரும் பிழை."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு