ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகளில் இரான் போரில் சேர வாய்ப்புள்ள நாடுகள் எவை?

    • எழுதியவர், அஹ்மென் கவாஜா, குளோபல் ஜர்னலிசம் குழு
    • எழுதியவர், குளோபல் ஸ்டோரி போட்காஸ்ட்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்குமா என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

இந்தப் போர் இரானை மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக், பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, ஓமன், அஜர்பைஜான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, சைப்ரஸ், சிரியா, கத்தார் மற்றும் லெபனான் உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்துள்ளது.

இந்த மோதல் பிராந்திய அளவில் இருந்து முழுமையான உலகப் போராக மாறக்கூடுமா என்று இப்போது பலர் யோசித்து வருகிறார்கள்.

ஒரு போர் எப்போது உலகப் போராக மாறுகிறது?

"போர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்படுகின்றன என்றும், போருக்குச் செல்பவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள்" என்று பிபிசியின் 'குளோபல் ஸ்டோரி' பாட்காஸ்ட்டில் பேசிய பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் மார்கரெட் மேக்மில்லன் கூறுகிறார்.

"உண்மையில், கடந்த காலப் போர்களைப் பற்றி நீங்கள் பார்த்தால், முதல் உலகப் போர் இறுதியில் வெடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவற்றில் தற்செயலான சம்பவங்கள், எதிரியை தவறாக மதிப்பிட்டது போன்றவை இருந்தன. சில நேரங்களில் இதை ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் சண்டையைப் போல புரிந்துகொள்ளலாம்''

ஆஸ்திரிய - ஹங்கேரி பேரரசர் பிரான்ஸ் ஜோசப்பின் உறவினர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதே, 1914-ல் முதல் உலகப் போரைத் தூண்டிய தொடர் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தது'' என்கிறார் மேக்மில்லன்.

சில வாரங்களுக்குள், பல கூட்டணிகள் ஐரோப்பாவை மோதலுக்குள் இழுத்தது.

ஆஸ்திரிய - ஹங்கேரி செர்பியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, ஜெர்மனி ஆஸ்திரியாவை ஆதரித்தது, ரஷ்யா செர்பியாவிற்கு ஆதரவாகத் திரண்டது, பிரான்ஸ் ரஷ்யாவை ஆதரித்தது மற்றும் பிரிட்டன் ''மரியாதை மற்றும் உத்தி'' ஆகிய இரண்டின் பெயரால் போரில் இறங்கியது.

அதன்பின் நடந்தது ஓர் உலகளாவிய பேரழிவாக மாறியது என்கிறார் மார்கரெட் மேக்மில்லன்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் ஜோ மயோலோ, உலகப் போரை அனைத்துப் பெரும் சக்திகளும் ஈடுபடும் ஒரு முழுமையான போர் என்று வரையறுக்கிறார்.

"முதலாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய பேரரசு சக்திகள். இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருந்தன," என்று அவர் பிபிசியிடம் விவரித்தார்.

மத்திய கிழக்கின் இன்றைய பதற்றங்களை பலர் பெரும்பாலும் பிராந்திய அளவிலான ஒன்றாகவே விவரிக்கிறார்கள்.

ஆனால் ஒரு விரிவான மோதல் அதிகரிப்பதற்கான சூழல்கள் நிலவுகின்றனவா?

பிப்ரவரி மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவிட்டதாக நம்புவதாகவும், ரஷ்யாவை பின்வாங்கச் செய்வதற்கு தீவிர ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிப்பதே ஒரே தீர்வு என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஆபத்து என்ன?

அப்படியென்றால், மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான தற்போதைய ஆபத்து என்ன?

"இந்த மோதலைத் தீவிரப்படுத்தக்கூடிய நாடு அநேகமாக இரான் அல்லது ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற இரானின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என மேக்மில்லன் கூறுகிறார்.

கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைப்பது அல்லது ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது போன்ற இரானின் சாத்தியமான நடவடிக்கைகள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். இது எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பதோடு வல்லரசு நாடுகளையும் உள்ளே இழுக்கக்கூடும் என்று மேக்மில்லன் குறிப்பிடுகிறார்.

மேலும், அமெரிக்காவின் தலையீடும் இதில் உள்ள ஆபத்தை அதிகரிக்கிறது. மற்ற நாடுகள் நேரடியாக இதில் ஈடுபடாவிட்டாலும், பொருளாதார ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் மற்றொரு ஆபத்தும் இருப்பதாக அவர் கூறுகிறார். அதாவது ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் மற்ற இடங்களில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்பது அவரது கூற்று.

உதாரணமாக, மேற்கத்திய நாடுகள் திசைதிருப்பப்பட்டிருப்பதை தைவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக சீனா கருதலாம் அல்லது உலகின் கவனம் வேறு எங்கோ இருக்கும்போது ரஷ்யா யுக்ரேனில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம்.

"ஒரு பிராந்தியத்திற்கு வெளியே மோதல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்போதும் உள்ளன. ஏனெனில் தங்களைத் தடுக்கக்கூடியவர்கள் இந்த மோதலில் ஈடுபடுவதைப் பார்த்து, பிராந்தியத்திற்கு வெளியே உள்ள மற்றவர்கள் இதில் தங்களுக்குரிய வாய்ப்புகளைக் காண்பார்கள்" என்கிறார் மேக்மில்லன்.

எந்தெந்த நாடுகள் இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளது?

பேராசிரியர் மயோலோ இந்த மோதல் பிராந்திய அளவிலேயே இருக்கும் என்றும், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளை இது உள்ளே இழுக்கும் என்றும் நம்புகிறார்.

ஆனால் சீனா மற்றும் ரஷ்யா இந்தப் போருக்குள் இழுக்கப்படும் என்று அவர் கருதவில்லை.

"உலகில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதற்காகச் சீனா உடனடியாகத் தைவானை தாக்கும் என்பது முற்றிலும் அர்த்தமற்றது. ஆனால் நாம் உலகப் போரைப் பற்றி, அதாவது மூன்றாம் உலகப் போரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இதில் நேரடியாக ஈடுபட எந்த விருப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐரோப்பாவிற்கு அதற்கான நாட்டம் இன்னும் குறைவாகவே இருக்கும்" என்றும் பேராசிரியர் மயோலோ குறிப்பிட்டார்.

சீனாவிடம் வேறு திட்டங்கள் இருப்பதாக அவர் நம்புகிறார்.

"உங்கள் எதிரி ஒரு மிகப்பெரிய உத்தி தவறைச் செய்யும்போது, அவர்களைத் தடுக்காமல் அப்படியே அதைத் தொடர விடுவீர்கள்" என்கிறார் அவர்.

எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டாலும், சீனாவுக்கு அது சிறிய இழப்பு மட்டுமே என்று கூறிய மயோலோ,"அமெரிக்கா மத்திய கிழக்கில் மூழ்கிக் கிடப்பது சீனாவிற்கு மிகப்பெரிய நலன்களை வழங்கக்கூடும்''என்கிறார் அவர்

தலைவர்களின் பங்கு

பெருமை, கௌரவ உணர்வு அல்லது எதிரிகள் மீதான பயம் ஆகியவற்றால் போர்கள் தூண்டப்படுவதை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது என்று மேக்மில்லன் கூறுகிறார்.

தனிப்பட்ட தலைவர்கள் நிகழ்வுகளின் போக்கை மாற்றியமைக்க முடியும் என்பதையும் வரலாறு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸ் பிரதமர் [ஜார்ஜஸ்] க்ளெமென்சோ, போர் தொடுப்பதை விட அமைதியை ஏற்படுத்துவது கடினமானது என்று கூறினார்."

மேக்மில்லனின் கூற்றுப்படி, மக்களால் பெரிய இழப்புகளோ அல்லது தியாகங்களோ செய்யப்படும்போது, தலைவர்கள் "போரை நிறுத்தாமல் தொடர்ந்து, வெற்றி பெற வேண்டும்" என்று முடிவு செய்கிறார்கள் என்ற வாதம் பெரும்பாலும் முன்வைக்கப்படுகிறது.

தலைவர்களுக்குப் பெருமை என்பது ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறும் அவர், புதினை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார்.

"யுக்ரேனை ஆக்கிரமிக்க முயன்றதன் மூலம் அவர் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிட்டார்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்யா ஒட்டுமொத்தமாக 12.5 லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. இது குறைவான மதிப்பீடாகவே கருதப்படுகிறது.

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அல்லது பின்வாங்க மறுக்கும் தலைவர்கள் மோதல்களை நீடிக்கச் செய்யவும் ஆழப்படுத்தவும் முயல்வார்கள் என்று மேக்மில்லன் கூறுகிறார்.

கடந்த காலத்தில், ஹிட்லர் போன்றவர்கள் தோல்வி தவிர்க்க முடியாதது என்று தெரிந்தும் கூட, சித்தாந்தம், பெருமை அல்லது மாயையினால் தூண்டப்பட்டுத் தொடர்ந்து போரிட்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இத்தகைய முடிவுகள் சிறிய அளவிலான மோதல்களைப் பேரழிவை ஏற்படுத்தும் போர்களாக விரிவுபடுத்தக்கூடும்.

பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள்

பதற்றத்தைக் குறைக்க ராஜீய நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று மேக்மில்லன் கூறுகிறார்.

"நீங்கள் எதிர்த் தரப்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்... மேலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் போர் மூலமாக தாங்கள் எட்டக்கூடிய இலக்குகளை அடைந்துவிட்டதை உணர வேண்டும்.'' என்கிறார் மயோலோ

மேலும் போர் தொடர்வது என்பது, யாருக்கும் அவர்கள் "விரும்பிய பலனைத் தராது" என்று அவர் விளக்குகிறார்.

"தடைகளை நீக்குவது, சில பாதுகாப்பு ஒப்பந்தம், உலக அரசியலில் இரானின் இடம் குறித்த புரிதல்கள் போன்றவற்றில் சில உடன்பாடு எட்டப்பட வேண்டும்''

மத்தியஸ்தம் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட சக்திகள் போரை நிறுத்தி பின்னர் அதை ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்ற முடியும் என்று மயோலோ கூறுகிறார்.

இந்த செய்தி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் பாட்காஸ்ட்டான 'தி குளோபல் ஸ்டோரி'-யின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது.

தொகுப்பு: அலெக்ஸாண்ட்ரா ஃபுஷே