“ஆஸ்கர் விருது கெடச்ச இந்த நேரத்துல கூட ரகு இல்லையே!” – நெகிழும் பொம்மன் பெள்ளி

பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.
"ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது பொம்மன் நெகிழ்ந்து கூறினார்.
தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.
நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியுளது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.
காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும் அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.
தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு, இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.
யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM
பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள். இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது.
ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும்போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.
ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றபோது பொம்மன், பெள்ளியிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் அவர்களை தொடர்புகொண்டபோதும் பொம்மன் யானையுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தார். `நேரம் ஆகிருச்சு சீக்கிரம் கிளம்பு` என்று பெள்ளியின் குரல் மட்டும் பிண்ணனியில் ஒலித்தது.
யானையுடன் சென்றுகொண்டே பொம்மன் நம்மிடம் பேசியபோது, “இந்த ஆவணப்படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்டநாட்களாக தெரிந்தவர்தான். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க துவங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போதுதான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறி இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பை அவர்கள் ஆரம்பித்தனர்,” என்று கூறினார்.

பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM
“இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பை மேற்கொண்டனர். ஒவ்வொரு முறை வரும்போது வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்கள் வருவார்கள். அவ்வபோது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறுது நேரம் என படப்பிடிப்பைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து வந்தவர்கள் என நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சர்வதேச அளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ஆஸ்கற் தற்போது இந்த ஆவணப்படத்திற்குக் கிடைத்துள்ளது.
அதுகுறித்துப் பேசியவர், “அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில் நாங்கள் அதை மிகவும் சாதாரணமாகத்தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையைப் பார்த்துவந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்கச் செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,” என்று நெகிழ்கிறார் பொம்மன்.
ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்துப் பேசிய பொம்மன், “என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆஸ்கர் விருதைப் பெறும் என்று எதிர்பாக்கவே இல்லை. மிக மகிழ்ச்சியாக உள்ளது.
ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பதும் சிறிது வருத்தமாக உள்ளது,” என்றார்.
இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தனது விருது ஏற்புரையில், “இன்று நான் இங்கு நிற்கிறேன். நமக்கும் நமது இயற்கை உலகுக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பழங்குடி சமூகங்களின் மரியாதைக்காகவும் மற்ற உயிரினங்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் பச்சாதாபத்திற்காகவும் இறுதியாக சகவாழ்வுக்காகவும் பேசுகிறேன்,” என்று கூறினார்.
தயாரிப்பாளர் குணீத் மோங்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெற்றிச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய தயாரிப்புக்கான முதல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ். இதற்கு முன்பு 1969இல் வெளியான தி ஹவுஸ் தட் ஆனந்தா பில்ட், 1979இல் வெளியான ஆன் என்கவுன்டர் வித் ஃபேசஸ் ஆகிய இரண்டு படங்கள், சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்திய மக்கள் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் வெற்றியைப் பாராட்டி வருகின்றனர்.
“நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்,” என்று ஒரு பயனர் பாராட்டியுள்ளார். மற்றொருவர், “இந்த விருதை தனது தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணித்ததற்காக” இயக்குநரை பாராட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































