இலங்கை குண்டுவெடிப்பு: மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி போலீசார் கூறினர்.

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தாயார் லத்தீபா பீவி, சகோதரர் நிப்றாஸ் மற்றும் மாமா இக்பால் ஆகியோர் இன்று சனிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு

காத்தான்குடியைச் சேர்ந்த மேற்படி தற்கொலைக் குண்டுதாரி, கல்முனை முதலாம் பிரிவில் திருமணம் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியின் தயாருடன், குண்டுதாரியின் சகோதரர் மற்றும் மாமா ஆகியோரை, இன்று காலை காத்தான்குடி பெருங்குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரியான உதவிப் போலீஸ் பரிசோதகர் முகம்மட் மற்றும் சார்ஜன் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள, தற்கொலைக் குண்டுதாரியின் தலையை அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் சென்றனர்.

இதன்போது, சட்ட மருத்துவ அதிகாரி ஜயசூரிய முன்னிலையில், தற்கெலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தயார், சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் சந்தேகத்துக்கு இடமின்றி முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என அடையாளம் காட்டினர்.

சமூக சேவைகளில் ஈடுபட்ட சஹ்ரான் தடம் மாறியது எப்போது?

காணொளிக் குறிப்பு, சஹ்ரான் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தார்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :