'துயரத்தின் வாசல்' - ஹோர்மூஸ் நீரிணைக்கு அடுத்து செங்கடல் முக்கிய பாதையை இரான் மூடப்போகிறதா?

பாப் அல்-மண்டேப் நீரிணை சுமார் 36 கிலோமீட்டர் அகலம் கொண்டது.

பட மூலாதாரம், Gallo Images via Getty

படக்குறிப்பு, பாப் அல்-மண்டேப் நீரிணை சுமார் 36 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது.
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முக்கியமான செங்கடல் கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள், உலகளாவிய வர்த்தகத்தில் மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை எழுப்பியுள்ளன.

இரான் ஏற்கெனவே ஹோர்மூஸ் நீரிணையைத் திறம்பட மூடியுள்ளது, இதனால் பாரசீக வளைகுடாவில் கடல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்நிலையில், ஏடன் வளைகுடாவுக்கும் செங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள மற்றும் சூயஸ் கால்வாய்க்கு இட்டுச்செல்லும் பாப் அல்-மண்டேப் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தைத் தடுக்கப்போவதாக இரான் அச்சுறுத்தி வருகிறது.

அமெரிக்கப் படைகள் தரைவழியாக இறக்கப்பட்டால், போரில் ஓர் 'இரண்டாவது முன்னணியை' திறக்கக்கூடும் என்று இரான் கூறியுள்ளது.

"பாப் அல்-மண்டேப் நீரிணை உலகின் மூலோபாய நீரிணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதை அச்சுறுத்துவதற்கு இரானுக்கு யோசனை மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்ட திறனும் உள்ளது," என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் இரானிய ராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இரானின் கார்க் தீவைத் தாக்கினால், இந்த நீரிணையைத் தடுக்கப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது.

பாப் அல்-மண்டேப் ஏன் இவ்வளவு முக்கியமானது?

பாப்-எல்-மண்டேப் நீரிணை, செங்கடலின் அரேபியப் பகுதியில் உள்ள ஏமனுக்கும், ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவிற்கும் இடையே அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்கள், சூயஸ் கால்வாயை அடைய இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

115 கிலோமீட்டர் நீளமும் 36 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த நீரிணை, 1869-இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே குறுகிய தொலைவிலான கடல் வழியை வழங்கி, உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய இணைப்பாக மாறியது.

இந்தச் செங்கடல் பாதை தற்போது உலகின் பரபரப்பான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாக உள்ளது. இது உலகின் மொத்த கடல்சார் போக்குவரத்தில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கையாளுகிறது.

உலகின் 20 சதவீத எண்ணெயைக் கொண்டுசெல்லும் ஹோர்மூஸ் நீரிணை, போர் காரணமாக தற்போது இரானால் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது.

பாப் அல்-மண்டேப் நீரிணையும் மூடப்பட்டால், அது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மேலும் 12 சதவீதத்தைப் பாதிக்கும்.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின்படி, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு சுமார் 5 மில்லியன் பேரல் எண்ணெய் நாள்தோறும் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கிறது.

மேலும், உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதியில் சுமார் 8 சதவீதமும் இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. இது உலகின் எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு முக்கிய பாதையாக அமைகிறது.

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதிலிருந்து உலக வர்த்தகத்தில் செங்கடலின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமின்றி, பாப் அல்-மண்டேப் நீரிணை, கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான முக்கிய வர்த்தக இணைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. இதன் வழியாக நாள்தோறும் டஜன் கணக்கான சரக்குக் கப்பல்கள் கடந்து செல்கின்றன.

பட மூலாதாரம், Suez Canal Authority via European Pressphoto Agency

படக்குறிப்பு, இந்த நீரிணை மூடப்பட்டால், அதன் தாக்கம் 2021-ல் பனாமா கொடியுடன் கூடிய 'எவர் கிவன்' சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிய நிகழ்வைப் போலவே இருக்கும்.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமின்றி, பாப் அல்-மண்டேப் நீரிணை, கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான முக்கிய வர்த்தக இணைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.

இதன் வழியாக நாள்தோறும் டஜன் கணக்கான சரக்குக் கப்பல்கள் கடந்து செல்கின்றன.

இந்த நீரிணை மூடப்பட்டால், அதன் தாக்கம் 2021-இல் 'எவர் கிவன்' சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிய நிகழ்வைப் போலவே இருக்கும்.

இது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தி எண்ணெய் மற்றும் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியதுடன், விநியோகங்களையும் தாமதப்படுத்தியது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் பங்கு

பாப் அல்-மண்டேப் நீரிணை மீதான எந்தவொரு தாக்குதலும், ஏமனில் உள்ள இரானின் ஆதரவு பெற்ற அரசியல் மற்றும் ஆயுதக் குழுவான ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஹூத்தி தலைவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இரானுக்கு ஆதரவாக பாப் அல்-மண்டேப் நீரிணையை இலக்கு வைக்கத் தங்கள் குழு தயாராக இருப்பதாகக் கூறினார்.

ஹூத்திகள் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரான் உடனான தற்போதைய அமெரிக்க-இஸ்ரேலிய போரில் இது அவர்களின் முதல் தலையீடாகும். ஏமனில் இருந்து வந்த இரண்டு ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்தக் குழு ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், காஸா போரின் போது பாப் அல்-மண்டேப் நீரிணையில் செல்லும் கப்பல்களை குறிவைத்தது.

ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை ஹூத்திக்கள் தாக்கினர். இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன மற்றும் நான்கு மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

தனித்துச் செயல்பட்ட ஹூதிகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களைத் தாக்கினர். இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன மற்றும் நான்கு மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Houthi Military Media via Reuters

இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாங்கள் இலக்கு வைப்பதாக ஹூத்திகள் கூறினாலும், தாக்குதலில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள் தாக்கப்பட்டன என்றே விவரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய கப்பல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அந்தப் பகுதி வழியாகத் தங்கள் கப்பல்கள் செல்வதை நிறுத்தின.

ஹூத்திகள் சரணடைந்துவிட்டதாக அமெரிக்கா கூறியதற்கும், அமெரிக்கா பின்வாங்குவதாக ஹூத்திகள் பதில் கூறியதற்கும் மத்தியில், தாக்குதல்கள் இறுதியில் குறைந்தன.

ஆனால் அவை மீண்டும் தொடங்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலைப்படுகின்றனர்.

"போர் நீடித்தால், ஏமனின் ஹூத்திகள் இதில் ஈடுபடுவார்கள் என்பது எப்போதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்," என்கிறார் பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டூசெட்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "வடமேற்கு ஏமனில் ஹூத்திகளுக்கு ஆழமான செல்வாக்கு உள்ளது. பாப் அல்-மண்டேப் வழியாகப் போக்குவரத்தைத் தடுக்கும் தங்களின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை அவர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை." என்றார்.

அரபு மொழியில் பாப் அல்-மண்டேப் என்றால் "கண்ணீரின் வாசல்" அல்லது "துயரத்தின் வாசல்" என்று பொருள்.

பட மூலாதாரம், Getty Images

நெருக்கடியில் உள்ள உலகளாவிய கப்பல் போக்குவரத்து

அரபு மொழியில் பாப் அல்-மண்டேப் என்றால் "கண்ணீரின் வாசல்" அல்லது "துயரத்தின் வாசல்" என்று பொருள்.

இந்த பெயர், வலுவான நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத காற்று முதல் கடற்கொள்ளை மற்றும் மோதல்கள் வரை அங்கு நிலவும் ஆபத்துகளைப் பிரதிபலிக்கிறது.

2008 மற்றும் 2012-க்கு இடையில், பாப் அல்-மண்டேப் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஏராளமான கடற்கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இவை பெரும்பாலும் சோமாலிய குழுக்களால் நிகழ்த்தப்பட்டன, அவர்கள் கப்பல் ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்று பணயத்தொகை கேட்டனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, சர்வதேச சமூகமும் கப்பல் நிறுவனங்களும் இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தின.

இந்த வழித்தடம் மூடப்பட்டால், ஹோர்மூஸ் நீரிணையில் நிலவும் சூழலால் ஏற்கெனவே அழுத்தத்தில் இருக்கும் எரிசக்தி சந்தையின் நெருக்கடியை இது மேலும் ஆழமாக்கும்.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து இடையூறுகள், இந்த நெருக்கடிக்கு முன்பு ஒரு பேரல் சுமார் 70 டாலராக இருந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையை 115 டாலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளன.

நுகர்வோர் பொருட்கள் முதல் விவசாய பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களின் உலகளாவிய வர்த்தகமும் இதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை உணர்கிறது.

மற்றொரு கடல் வழியில் ஏற்படும் புதிய இடையூறுகள், விலைகளை மேலும் உயர்த்தக்கூடும் மற்றும் இரானுடனான மோதலின் பொருளாதாரத் தாக்கத்தை ஆழமாக்கக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு