பிக்பாஸ் விமர்சனம்: தமிழக முதல்வர் பழனிசாமிக்கு ட்விட்டரில் பதில் அளித்த கமல்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகரா எங்களை கேள்வி கேட்பது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த விமர்சனத்துக்கு எம்ஜிஆர் பாடல் வரிகள் மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.." என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார் கமல். ஆனால், அதில் தமிழக முதல்வரின் ட்விட்டர் பக்கத்தையோ எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் முகவரியையோ அவர் டேக் செய்யவில்லை.

அதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு அவர் பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில் தான் வழங்கி வரும் பிக்பாஸ் தொடர்பான முதல்வர் பழனிசாமியின் விமர்சனத்துக்கு "முதல்வரும் பிக்பாஸ் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கமல் கூறியுள்ளார்.

முன்னதாக, குடும்பங்கள் பார்க்க முடியாத வகையில் உள்ள பிக்பாஸ் தொடரை நடத்தி வரும் கமல்ஹாசனா எங்களை பார்த்து கேள்வி கேட்பது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூருக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு ரூ. 36.73 கோடி மதிப்பிலான 33 நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய 14 திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

பிறகு மாவட்டத்தில் நடந்து வரும் கொரோனா வைரஸ் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

"மக்கள் அரசை தேடி வந்த நிலை மாறி, முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் மூலம் அரசே மக்களை தேடி வருகிறது" என்று அந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரை தொடர்பாக கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "வயதான காலத்தில் ஓய்வு பெற்று 70 வயதில் அரசியலுக்கு வந்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த வயதில் அவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பமும் கெடும். அதைப் பார்க்கும் குழந்தைகளும் கெடுவார்கள். அப்படிப்பட்டவர் அரசியலுக்கு வந்தால் என்னவாகும். அவர் போய் எங்களை கேள்வி கேட்பதா?" என்று கேள்வி எழுப்பினார்.

"தொலைக்காட்சிகளில் விவசாயிகள் திட்டங்களை காட்டுங்கள், குழந்தைகள் திட்டங்களை காட்டுங்கள். நல்ல விஷயங்களை காட்டுங்கள். ஆனால், பிக்பாஸ் என்ற தனியார் நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்."

"எம்ஜிஆர் வேடம் போட்டால்தான் மக்களை ஈர்க்க முடியும் என்பதை கமலே ஒப்புக்கொள்கிறார். தனக்கென சொந்த செல்வாக்கு அவருக்கு இல்லை. ஆனால், எம்ஜிஆர் எவ்வளவு நல்ல கருத்துகளை தனது படங்கள் மூலம் வெளிப்படுத்தினார். எத்தனை நல்ல பாடல்களுக்கு நடித்திருக்கிறார். அப்படியா கமல்ஹாசன் செய்தார்? அவர் நடத்தும் பிக்பாஸ் தொடரை பார்த்தாலே அந்த குடும்பம் காலி" என்று கடுமையாகச் சாடினார் எடப்பாடி பழனிசாமி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :