You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் தாக்குதலில் குவைத்தில் தமிழர் மரணம் - உடன் தங்கியிருந்தவர் கூறுவது என்ன?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்.
குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
ட்ரோன் தாக்குதலால் சுவர் இடிந்து விழுந்ததில் சந்தான செல்வம் சிக்கிக் கொண்டார் என அவருடன் குவைத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறுகின்றனர்.
அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் குவைத்தில் இந்தியர் உயிரிழந்ததையடுத்து இந்திய தூதர் பிரமிதா திரிபாதி குவைத் அதிகாரிகளை சந்தித்ததாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 'உயிரிழந்தவரின் உடலை இந்தியா கொண்டு வருவது' தொடர்பாக குவைத் அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
குவைத் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 'இரான் நடத்திய தாக்குதலால் நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்தது. இதில் இந்திய குடிமகனான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பாதுகாப்பற்ற பணிச்சூழல்"
சந்தான செல்வத்துடன் குவைத்தில் பணியாற்றும் பொய்யாமொழி என்பவர் பிபிசி தமிழிடம் இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இதன்படி, சந்தான செல்வம் கடல்நீரை நன்னீராக்கும் பிரிவில் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பணி முடிந்து கொண்டு தனது அறையில் இருந்தபோது, "ஃபில்டர் ஒன்றை மாற்ற வேண்டும் என அவசர அழைப்பு வந்தது" என்கிறார் பொய்யாமொழி.
மீண்டும் ஆலைக்கு சென்று பணியை முடித்து விட்டு, அறைக்கு திரும்புவதற்காக காத்திருந்த போது ட்ரோன் தாக்குதலுக்கு அந்த ஆலை இலக்கானதாகக் கூறுகிறார் பொய்யாமொழி.
சந்தான செல்வன் உயிரிழந்த இடம் தற்போது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், வெளிநபர்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்கிறார் அவர். சந்தான செல்வன் உடல் தற்போது குவைத்தின் 'மத்திய பிணவறை'யில் வைக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இரான் நடத்தும் தொடர் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல்களுக்கு நடுவே, தொடர்ந்து பணி செய்ய நேர்வதாகக் கூறுகிறார் பொய்யாமொழி.
"எங்கு திரும்பினாலும் குண்டு சத்தமாக இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் அறையை விட்டு வெளியே வருவதில்லை. கடந்த சில நாட்களாக தங்கும் விடுதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படவில்லை ஆனால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது குண்டுகள் வீசப்பட்டு வருகிறது" என்றார்.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக செயல்பாட்டாளர் அலிபாய் பிபிசி தமிழிடம் பேசுகையில்,"குவைத்தில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ட்ரோன் தாக்குதல் எதுவும் தற்போது நடைபெறவில்லை உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலானது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை தூதரகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. நாளை திருச்சி விமான நிலையத்திற்கு உடல் வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
சந்தான செல்வம் உயிரிழந்தது குறித்து திங்கள் கிழமை (மார்ச் 30) தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் அனிகுருந்தான் கிராமத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோனிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
36 வயதான சந்தான செல்வத்திற்கு திருமணமாகி ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குவைத்தில் உள்ள பொறியியல் பொதுவர்த்தகம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு மேலாக எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருவதாக அவரது மனைவி கௌசல்யா தெரிவித்தார்.
"உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்"
உயிரிழந்த சந்தான செல்வனின் மனைவி கௌசல்யா பிபிசி தமிழிடம் பேசுவையில் நேற்று இரவு 8 மணி அளவில் என் கணவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது திடீரென "கம்பெனியிலிருந்து போன் வருவதாக கூறி தொடர்பை துண்டித்தார். பிறகு என்னை தொடர்பு கொள்ளவில்லை." என்றார்.
"இன்று காலை என் கணவருடன் வேலை செய்யும் நபர் ஒருவர் அழைத்து என் கணவர் உயிரிழந்த செய்தியை தெரிவித்தார். உடனடியாக நான் மீண்டும் எனது கணவரின் செல்போன் என்னை தொடர்பு கொண்டேன் தொடர்பு கொள்ள முடியவில்லை." என்கிறார் கௌசல்யா.
தங்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் இருப்பதாகக் கூறும் கௌசல்யா, சந்தான செல்வனின் உடலை இந்தியா கொண்டு வர உதவி செய்வதோடு உரிய இழப்பீடு பெற்றுத்தர உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,"சந்தான செல்வனின் மனைவி கொடுத்த மனுவின் அடிப்படையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது." என்றார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து சந்தான செல்வன் குடும்பத்தினரின் தொடர்பு எண் மற்றும் அரசு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கேட்டதால், இதனை பகிர்ந்துள்ளதாகக் கூறினார். குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்து வருகிறோம் என்றும் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் ஆணையர் வள்ளலார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபர் சந்தான செல்வம்" என்றார்.
எனவே "குவைத் நாடு போரில் உயிரிழந்தோருக்கு வழங்கும் நிவராணத்துடன், சந்தான செல்வன் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
வழக்கமாக வெளிநாடுகளில் யாரேனும் உயிரிழந்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய வள்ளலார், இவர் போரால் உயிரிழந்ததால், அவருக்கான "அனைத்து நிவாரணம் மற்றும் காப்பீடு உள்ளிட்டவைகளை பெற்று" உடலை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு வாரிய உறுப்பினராக சேர்ந்திருந்தால் இழப்பீடு தொகையாக தமிழக அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
ஆனால் சந்தான செல்வம் உறுப்பினராக பதிவு செய்யவில்லை எனக் கூறும் வள்ளலார், "விதிகளின்படி அவருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க முடியாது" என்றார். இருப்பினும் அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம் என்றார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு