விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது? தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் மற்றும் பிற பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், dmdk party

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்தியில், அவர் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அக்டோபர் 2ஆம் தேதி அவர் வீடு திரும்பினார்.

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

"விடுதலைப்புலிகள்" பிரபாகரன் மகன் சிறுவர் படை தளபதியா?

பட மூலாதாரம், JDS NOFIREZONE

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவரது இளைய மகன் பிரபாகரன் பாலச்சந்திரன் வரையான குடும்பத்திலுள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதியும் எம்.பியுமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆதிக்கம்: 'குவாட்ரிலேட்டரல் இனிஷியேடிவ்'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானின் புதிய பிரதமர் யோஷீஹிடே சுகாவும் (நடுவில்) இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஜப்பான் தலைநகர் டோக்யோவில் தொடங்கியுள்ளது.

இக்குழு 'குவாட்ரிலேட்டரல் இனிஷியேடிவ்' என்று அழைக்கப்படுகிறது.

ஹாத்ரஸ் வழக்கு

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண் எரியூட்டப்பட்ட இடம்

இந்தியாவையே உலுக்கிய உத்தர பிரதேச ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் நடந்ததாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த வழக்கில் சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை அடங்கிய விவரத்தை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படுமென சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இத்தொகை ஒரே முறை ஒட்டுமொத்தமாக வழங்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :