எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை

பட மூலாதாரம், SPB/Facebook

படக்குறிப்பு, எஸ்.பி. பாலசுப்ரமணியம்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட தருணத்தில், தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு வீடியோ காட்சி மூலம் தெரிவித்தார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமையன்று மாலை 6 மணியளவில் அவரது உடல்நலம் குறித்து திரைத்துறையினர், அவரது ரசிகர்கள் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பலரும் அவரது பாடல்களைப் பாடி, அவரது உடல் நலத்திற்காக வேண்டினர்.

படக்குறிப்பு, மருத்துவ அறிக்கை

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாகவும் செயற்கை சுவாசக் கருவி, எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய, சர்வதேச மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அவரது உடல்நலக் குறியீடுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி நலம் பெற பிரபலங்கள் பங்கெடுத்த கூட்டுப்பிரார்த்தனை

காணொளிக் குறிப்பு, பாடகர் எஸ்.பி.பி நலம் பெற திரையுலகினரும் ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: