பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பா.ஜ.கவுக்கும் கவலைதான்: அமித் ஷா

முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பிரச்சனைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டுவரும் என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றை கண்டு மத்திய அரசும், பா.ஜ.கவும் கவலையடைந்துள்ளது. உலகளவில் நடைபெறும் சில நிகழ்வுகளே இதற்கு காரணம்.

அதாவது, அமெரிக்கா, சீனா இடையே நடைபெறும் வர்த்தக போர், அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகளே பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - நீதிபதி காலிபணியிடங்களை நிரப்ப 15 ஆண்டுகள் ஆகலாம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் 24 உயர் நீதிமன்றங்களில் தற்போதுள்ள 427 நீதிபதி காலிபணியிடங்களை நிரப்ப 15 ஆண்டுகள் ஆகலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 75 - 85 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர்.

மொத்தமுள்ள 1,079 உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 652 இடங்கள் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர்.

அதிக காலிபணியிடங்கள் அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் ஒரு கவலையாகவே இருந்து வருகிறது. உயர் நீதிமன்றங்களில் சுமார் 39 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 2 சதவீத வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் என்று மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தினமலர் : குட்கா தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

குட்கா தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், குட்கா ஊழிலில் சிக்கியுள்ள, இன்ஸ்பெக்டர் சம்பத்குமாரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே சென்னை - செங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் உள்ள குட்கா குடோன்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தற்போது, குட்கா தயாரிப்பு மற்றும் பாக்கெட் செய்யும் இயந்திரங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :