மும்பையில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், RAHANGDALE

படக்குறிப்பு, தீவிபத்து நிகழ்ந்த கடை

மும்பை சாகிநாகா பகுதியில் கைரனி சாலையில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள 'பானு ஃபர்சான்' என்ற கடையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் இதுபற்றி தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூறப்பட்டுள்ளது.

பின்பு மூன்று தீயணைப்பு வாகனங்கள், நான்கு ஜம்போ டாங்கர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்ததையடுத்து , தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பட மூலாதாரம், RAHANGDALE

படக்குறிப்பு, மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள்

கடையில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் கோளாறு இருந்ததினால் இத்தீவிபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்டடத்தின் ஒருபகுதி முழுவதும் சேதமடைந்தது.

கட்டடத்தின் அடித்தளத்தில் ஆரம்பித்த தீ, மெதுவாக மற்ற இடங்களுக்கும் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயில் சிக்கிய 12 பேரை மீட்டு அங்குள்ள ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பே அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், RAHANGDALE

"தீவிபத்து நிகழ்ந்தபோது, கடையில் பத்திலிருந்து பதினைந்து ஊழியர்கள் வரை இருந்தனர். தீ மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகளவிலான புகையில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்" என தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :