டெங்கு கட்டுப்பாட்டுக்கு 256 கோடி ரூபாய் கோருகிறது தமிழ்நாடு

தமிழகத்தில் பெருமளவில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடமிருந்து ரூ. 240 கோடி ரூபாயை கோரியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிலவரத்தை ஆராய மத்திய அரசைச் சேர்ந்த மருத்துவர் குழுவினர் இன்று சென்னை வந்து ஆய்வு நடத்தினர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் ஐந்து மருத்துவர் கொண்ட குழு இன்று சென்னையில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கொசுவைக் கட்டுப்படுத்தவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசிடம் 256 கோடி ரூபாய் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மத்திய குழுவினர் தமிழகத்தில் 2-3 நாட்கள் தங்கியிருந்து டெங்கு நோய் பரவல் குறித்து ஆராய்வார்கள் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

செய்தியாளர்களிடம் பேசிய ஆசுதோஷ் பிஸ்வாஸ், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் டெங்கு பரவியிருப்பதற்குக் காரணம், தண்ணீர் தேங்குவதுதான் என்றும் நோயின் பரவலுக்கு மாநில அரசைக் குற்றம்சாட்ட முடியாது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் டெங்கு நோய்க்கு இதுவரை சுமார் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்