இளம் யுக்ரேனியர்களை குறிவைக்கும் ரஷ்ய ஆதரவாளர்கள் - இணையத்தில்  நடக்கும்  ட்ரோல்கள்

படக்குறிப்பு, மகிழ்ச்சியாக தன் விடுமுறை நாட்களில் இருக்கும் கேத்ரின். ரஷ்யாவின் ஊடுருவலுக்கு பின், தன் சமூக ஊடகத்தில் போலியான பதிவுகள் பகிரப்படுவதை அவர் கண்டறிந்தார்.
    • எழுதியவர், மரியன்னா ஸ்பிரிங்
    • பதவி, சிறப்பு உண்மை கண்டறியும் நிருபர்

சமூக ஊடகத்தில், குழப்பங்களும், தவறாக தகவல்களும் பரவும் சூழ்நிலையுடன், போர்க்காலத்தை எதிர்கொள்ளும் இளம் யுக்ரேனியர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

24 வயதான கேத்ரின் கடந்த வியாழன்கிழமையன்று கீயவில் வெடிகுண்டு சத்தம் கேட்டு எழுந்தார். விரைவில் அவரது சமூக ஊடகம் சோகமான பதிவுகளால் மூழ்கியிருப்பதைக் கண்டார்.

"நாங்கள் செய்ய வேண்டியிருந்த முதல் விஷயம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அடித்தளத்திற்கு செல்வதுதான்," என்று அவர் கூறுகிறார். இப்போது வீவ்(Lviv) நகருக்கு வெளியே உள்ள தனது சிறிய சொந்த ஊரில் தன் காதலர், பக்கத்து வீட்டினர் மற்றும் அவர்களின் நாய்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.

"ஆனால் நாங்கள் கீழே சென்ற உடனே, நான் இன்ஸ்டாகிராமைப் பார்க்க தொடங்கினேன். எனது இன்ஸ்டாகிராம் பதிவுகளும் ஸ்டோரிகளும் இருந்தன."

அச்சுறுத்தக்கூடிய உண்மையாக பதிவுகளை மட்டும் அவர் பார்க்கவில்லை. ஆனால் போலியான தகவல்களையும் கண்டார். இதில் இந்த போர் உண்மையானதல்ல; இது ஒரு புரளி என்று டிக்டாக் செயலியில் இயங்கும் கணக்குகளில் இருந்து பதிவுகள் வந்துக்கொண்டிருந்தன.

"நான் ஒரு கணக்கை ப்ளாக் செய்தவுடன், மற்றொரு பெண்ணின் புகைப்படம் கொண்ட மற்றொரு கணக்கு தோன்றுகிறது. அவர் ரஷ்ய மொழியில் எனக்கு எழுதுகிறார்", என்று கேத்ரின் கூறுகிறார்.

இந்த ட்ரோல்கள் ஏராளமாக உள்ளன. யுக்ரேனின் உள்ள இளம் பெண்களுடன் அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

டெலிகிராமில் பரவும் வதந்திகள்

யுக்ரேனின் தென்கிழக்கின் சபோரிஸ்ஸியா பகுதி வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட இருப்பதாக ரஷ்ய மொழியில் இருந்த பதிவுகளைப் பார்த்த , 18 வயதாகும் அலினா மிகவும் பதற்றம் அடைந்தார். ஆனால், இவை புரளி.

படக்குறிப்பு, அலினாவின் நகரம் நிச்சயம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் என்று போலியாக ரஷ்ய மொழியில் இருக்கும் குறுஞ்செய்திகளில் ஸ்கிரீன்ஷாட்.

அலினா தன் படுக்கையறையில் இருந்து பேசினார். வான்வழி கண்காணிப்புகளிலும், அடைக்கலம் புகுவதிலும் கழிந்த இரவுகளால் அவர் சோர்ந்து போய் இருந்தார். பதற்றத்தை வெளிப்படையாக உருவாக்க நினைப்பவர்களால், டெலிகிராம் செயலியில் இந்த புரளிகள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன என்று அவர் கூறுகிறார்.

"எங்களின் சாட்களை கண்டறிந்து, ரஷ்யர்கள் எங்களை பதற்றம் அடைய செய்யவே எதையாவதை எழுதுகின்றனர். இந்த பகுதியில் வெடிகுண்டு இருக்கும் சமிக்ஞை இருப்பதாக யாரோ ஒருவர் எழுதுகிறார். மற்றவர்கள் அந்த தகவலை மறுக்கின்றனர்", என்று அவர் கூறுகிறார்.

படக்குறிப்பு, யுக்ரேனில் கடந்த கோடைக்காலத்தில் எடுக்கப்பட்ட அலினாவில் புகைப்படம்

அவரது சொந்த ஊரிலுள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பதாக டெலிகிராம் செயலியில் மற்றொரு வீடியோ ஒன்றை அவர் பார்த்தார். ஆனால், அது மேரியோபோலுக்கு அருகே உள்ள நகரில் நடத்திருக்கும் வேறொரு வெடிக்குண்டு தாக்குதல் சம்பவம்.

படக்குறிப்பு, அலினாவின் சொந்த ஊரில் வெடிக்குண்டு தாக்குதல் நடந்ததாக தவறான தகவலுடன் பகிரப்பட்ட வீடியோ

2020 ஆம் ஆண்டு பெய்ரூட் நகரில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு உட்பட பிற தாக்குதல்களின் பழைய வீடியோ காட்சிகளும் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. டிக்டாக் செயலி உட்பட பலவற்றில் இந்த வீடியோ பதிவுகள் மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளன.

மார்ட்டாவுக்கு 20 வயது; போர் தொடங்கியபோது, அவர் நண்பர்களைப் பார்க்க பிரிட்டனில் சிக்கிக் கொண்டார். சிரியா மற்றும் ஈராக்கிற்கு தொடர்புடைய வீடியோக்களை பார்த்ததாக அவர் கூறுகிறார்.

"ஆனால் அவர்கள் அவற்றை 'யுக்ரேன்' என்று குறிப்பிட்டு பதிவிடுக்கின்றனர்'," என்று அவர் கூறுகிறார்.

வீடியோ-பகிர்வு பயன்பாட்டின் முக்கிய நுழைவாயிலாக இருக்கும் டிக்டாக்கின் 'ஃபார் யூ' பக்கத்தில் உள்ள வீடியோக்கள், தன்னை அச்சுறுத்துகின்றன என்றும், கோபம் கொள்ள வைக்கின்றன எனவும் அவர் கூறுகிறார். தன் சொந்த ஊரில் இருக்கும் குடும்பத்தை பற்றியும், நண்பர்கள் குறித்தும் அவர் கவலை கொள்கிறார்.

ட்ரோல்களை எதிர்கொள்ளுதல்

மூன்று பெண்களும் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிடும் கணக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

படக்குறிப்பு, யுக்ரேனில் நடந்த போரைப் பற்றிய தவறான தகவல்களை ஊக்குவித்து, ரஷ்யாவுக்கு ஆதரவான கணக்குகளில் ஒன்றான ஜெஸ் வெளியிட்ட காணொளிகள்

"அவர்களில் சிலர் வீடியோக்களை பதிவிட தொடங்கினர். அவர்கள் யுக்ரேனை 'பொய் கூறுபவர்கள்' என்று அழைக்கத் தொடங்கினர்," என்று மார்ட்டா கூறுகிறார்.

சிலர் வன்முறை காரணமாக யுக்ரேன் மீது குற்றம் சாட்டி, "ரஷ்யாவுக்கு புகழ்" (Glory to Russia) என்று எழுதுகின்றனர். மற்றவர்கள் எப்படியோ போர் நடத்தப்பட்டதாக தவறான தகவல்களைக் கூறினர்.

"ஒவ்வொரு முறையும் நான் அந்தக் கணக்குகளைப் பார்க்கும்போது, அவற்றில் பின்தொடர்பவர்கள், லைக் செய்தவர்கள், அந்த கணக்கு பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருக்கிறது. சுயவிவரப் படத்தில் ரஷ்ய கொடி போன்று ஏதாவது இருக்கும்" என்று மார்ட்டா கூறுகிறார்.

படக்குறிப்பு, மார்ட்டா ஆன்லைனில் ரஷ்யாவுக்கு ஆதரவான ட்ரோல்களை எதிர்கொண்டு வருகிறார்

பெண்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட பல டிக்டாக் கணக்குகள் இணையத்தில் மற்ற கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களாக தெரிகிறது. மார்ட்டா சொல்வது போல், அவர்களுக்குப் பின்தொடர்பவர்கள் குறைவு அல்லது யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் அவர்கள் தங்கள் உண்மையான பெயர்களைப் பயன்படுத்துவதில்லை - அல்லது பொதுவான பயனர்பெயர்களைப் பயன்படுத்துவதில்லை."ஜெஸ்" என்ற பெயரைப் பயன்படுத்தும் கணக்கை பார்த்தேன். அவருக்கு ஒரே ஒரு பின்தொடர்பவர் மட்டுமே இருந்தார். கணக்கில் உள்ள வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டவை மட்டுமே. இது அந்த கணக்கு சமீபத்தில் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அந்த கணக்கில் பகிர்ந்து இருந்த கிட்டத்தட்ட எல்லா வீடியோக்களிலும் நீக்கப்பட்ட மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன: ரஷ்ய தாக்குதலின் போது காயமடைந்த ஒரு பெண் நடிகை என்றும், அதன் செய்தி சேகரிப்பில் பழைய தாக்குதல்களின் காட்சிகளால் நிரம்பியுள்ளது, மேலும் போர் எப்படியோ நடக்கவில்லை என்றும் அது தெரிவிக்கிறது. .

டிக்டாக்கில் கேட்ரின் ஒரு கணக்குடன் வாக்குவாதத்தில் முடிந்தது. அந்த கணக்கில் சில பின்தொடர்பவர்கள் மட்டுமே இருந்தனர். அதன் சுயவிவரப் படம் ஒரு கொரிய பெண்ணின் பின்இன்டரஸ்ட் (Pinterest) பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நான் அவர்களை தொடர்பு கொள்வதற்காக முயற்சி எடுத்தேன். அதற்கு எந்த கணக்குகளும் பதிலளிக்கவில்லை. எனவே அவற்றை யார் இயக்குகிறார்கள் என்று சொல்வது கடினம். செய்திகளைத் தள்ளுவதற்கும் பிரிவினையை விதைப்பதற்கும் ரஷ்யா இதற்கு முன் நம்பத்தகாத கணக்குகளை உருவாக்கியுள்ளது. ஆனால் தவறான கூற்றுகளை நம்பும் உண்மையான நபர்களால் கணக்குகள் இயக்கப்படுவதும் சாத்தியமே.

சமூக ஊடக கொள்கைகள்

சமூக ஊடக நிறுவனங்கள் சில காலமாக எதிர்கொண்டு வரும் ஒரு பிரச்சனை தவறான தகவல். இப்போது அவர்களின் கொள்கைகள் புதிய ஆய்வுக்கு உட்பட்டுள்ளன.

ட்விட்டர் மற்றும் கூகுளுடன் இணைந்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நடத்தும் தாய் நிறுவனமான மெட்டா, யுக்ரேனில் போர் குறித்த தவறான தகவல்கள் மற்றும் பிரச்சாரங்களைச் சமாளிப்பதற்கான உறுதிமொழிகளை அறிவித்துள்ளன.

ஆனால், டெலிகிராம் மற்றும் டிக்டாக் போன்றவை இளம் யுக்ரேனியர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன - இந்த தவறான தகவல்கள் தொடர்ந்து பெருகி வருகின்றன.

டிக்டாக் பிபிசியிடம், "வளர்ந்து வரும் போக்குகளுக்கு பதிலளிப்பதற்கும், தீங்கு விளைவிக்கும் தவறான தகவல் மற்றும் வன்முறையை ஊக்குவிப்பது உட்பட, அதனை மீறும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கும் அதிக வசதிகள் உள்ளன" என்று கூறியது. கருத்து கேட்பதற்கு விடுக்கப்பட்ட எங்கள் கோரிக்கைக்கு டெலிகிராம் பதிலளிக்கவில்லை.

இணையத்தில் நடப்பது நிஜ உலகில் இன்னும் அதிக பீதியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

"இந்த போலியான தகவலை உருவாக்குபவர்களால் நாங்கள் பயப்படுகிறோம்," என்று அலினா என்னிடம் கூறுகிறார், விமானத் தாக்குதல் சைரன் ஒலிக்கும்போது மீண்டும் அடித்தளத்திற்குச் செல்லத் தயாராக இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: