“டெல்டா மற்றும் ஒமிக்ரான் சேர்ந்து கோவிட் – 19 பேரலையை உருவாக்கி வருகிறது” – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் உள்ள பரிசோதனை மையம்

டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகள் ஒன்று சேர்ந்து, ஆபத்தான வகையில், கோவிட்-19 பேரலையை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், டெட் ரோஸ் அதானோம்  கெப்ரேசேயஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, ஐரோப்பாவின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாக, பிரான்ஸ் நாட்டில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல் படி,  கடந்த வாரத்தில் அமரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 427 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

டென்மார்க், போர்ச்சுகல், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும், கோவிட் அதிகப்படியான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

போலாந்து நாட்டில் புதன்கிழமையன்று கோவிட் காரணமாக நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 794 ஆக  பதிவாகியுள்ளது.  இது தொற்று காலத்தின் நான்காம் அலையில் அதிகப்படியான எண்ணிக்கையாகும்.  இவர்களுள்  நான்கில் மூன்று பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்.

டெல்டா  திரிப்பை விட சற்றே பாதிப்பு குறைவான  ஒமிக்ரான் திரிபு, பல நாடுகளில் விரைவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது; இது டெல்டா திரிப்பை விட அதிகம் பரவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த திரிபு, பாதிப்புகளை அதிகரிக்கின்றன என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து பேசிய பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் ஆலிவர்  வேரன், ஒமிக்ரான் பொருத்தவரையில், தான் அதனை அலை என்று கூறப்போவதில்லை அது பெருங்கடலின் அலை என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், டெட்ரோஸ் இது இரண்டு திரிபுகளின்,  இரட்டிப்பான அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளார். இதுதான் ஒட்டுமொத்த பாதிப்புகளின் தாக்கத்திற்கு பின்னால் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

"இது சோர்வுற்ற  சுகாதார பணியாளர்களையும், சரிவின் விளிம்பில் உள்ள சுகாதார அமைப்புகள் மீதும் பெரும் அழுத்தத்தை  தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது", என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும்  9 லட்சப் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி வருகின்றன என்று ராய்ட்ட ர்ஸ் செய்தி முகிமை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மக்கள் தொகையையும், அதன் தடுப்பூசி விகித்தையையும் கருத்தில் கொள்ளும் போது, அந்நாட்டில் ஜனவரி மாத இறுதியில் அதன் ஒமிக்ரான் தொற்று பாதிப்புகள்  உச்சத்தை எட்டக்கூடும்  என்று சிஎன்என்  செய்தி நிறுவனத்திடம் அமெரிக்காவின் சிறந்த தொற்றுநோய் நிபுணரான டாக்டர் அந்தோனி  ஃபெளசி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

உலகில் பல பணக்கார நாடுகள், கோவிட் தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை,  பூஸ்டர் டோஸ்களாக அறிமுகப்படுத்தியுள்ளன.  பிரிட்டனில், 12 வயதிற்கு மேல் உள்ள 57 சதவீத மக்கள் மூன்றாவது டோஸை தற்போது பெற்றுள்ளனர்.

ஆனால் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம்   பேசுகையில், பணக்கார நாடுகளின் பெரிய அளவிலான பூஸ்டர் டோஸ்கள் "தொற்றுநோயை நீடிக்க செய்ய  வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.  "ஏனெனில்,  அவை ஏழை மற்றும் குறைவாக தடுப்பூசி  செலுத்திக்கொண்டவர்கள் உள்ள நாடுகளிலிருந்து விநியோகங்களைத் திசை திரும்புகின்றன.  இது "வைரஸ் பரவுவதற்கும், பிறழ்வதற்கும்  அதிக வாய்ப்பை அளிக்கும்", என்று கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் "உலகில் உள்ள 70%   பேர் தடுப்பூசி செல்லுத்திக்கொள்ளும் விழிப்புணர்வை அனைவரும் புத்தாண்டு தீர்மானமாக எடுக்க கொள்ள வேண்டும்",  என்று அவர் கேட்டுக் கொண்டார்.  ஏறக்குறைய 100 நாடுகள் தங்கள் மக்கள் தொகையில் 40% பேருக்கு தடுப்பூசி செலுத்தும்  இலக்கை இன்னும் அடையவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பு செவ்வாய்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 26 ஆம் தேதிக்கு முந்தைய வாரத்தில் ஐரோப்பாவில் அனைத்து திரிபுகளின்,  புதிய கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 57 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மேலும், அமெரிக்காவில் 30% அதிகரித்துள்ளது.

புதன்கிழமையன்று மேலும் பதிவான அதிக எண்ணிக்கைகளுடன்,  இந்த எண்ணிக்கைகள்  ஏறுமுகமாகவே இருக்கிறது.

பிரான்சில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது; இதில் மேலும் 53 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்;  184 உயிரிழிப்புகளும் ஏற்பட்டுள்ளன.  

பிரிட்டனில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 37 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது;  57 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இத்தாலியின் புதிய தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையன்று 78 ஆயிரத்து 313-இல் இருந்து, புதன்கிழமையன்று  98 ஆயிரத்து 20-ஆக அதிகரித்துள்ளது.

டென்மார்க்கில் 23 ஆயிரத்து 228 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அவர்களுள், 1,205 பேர் முன்பு கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

போர்ச்சுகல் நாட்டில்  26 ஆயிரத்து 867 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுவே முந்தைய நாள் 17 ஆயிரத்து 172 ஆக பதிவாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் 18 ஆயிரத்து 241 பேருக்கு தொற்று பாதிப்பு  பதிவாகியுள்ளது. இது செவ்வாய்கிழமையன்று இருந்த 11 ஆயிரத்து 300 பாதிப்புகளிலிருந்து அதிகரித்துள்ளது.  

கிரீஸ் நாட்டிலும் 24 மணி  நேரத்தில்,  28 ஆயிரத்து 828 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக, அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சில புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நோய்த்தொற்றுகளின் விளைவின்  ஒன்றாக, சில அத்தியாவசிய சேவைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு  உள்ளது. காரணம்,  வைரஸ் பரவாமல் இருக்க மக்கள்  தங்கள் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர்.

பிரிட்டன் நாட்டின் லண்டனில்,  ஊழியர்கள் கொரோனா வைரஸுக்கு பாசிட்டிவ் என்று பரிசோதனை வந்தாலும், அவர்களை  தனிமைப்படுத்த வேண்டியிருந்ததாலும், தீயணைப்பு இயந்திரங்களில் மூன்றில் ஒரு பகுதி இந்த வார தொடக்கத்தில் கிடைக்கவில்லை  என்று அந்நாட்டின்  தீயணைப்பு படைகள் ஒன்றியம் கூறியுள்ளது.  

மேலும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்,  பல சிறார் தடுப்பு மையங்களில்  தேசியப் படையின் உறுப்பினர்கள் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.

ஸ்பெயின் நாட்டு, கடந்த பதினைந்து நாட்களில் ஒரு லட்சப் பேருக்கு 1,360 பாதிப்புகளை கண்டுள்ளது. இதனால்,  புதன்கிழமையன்று -பணியாளர்களின் சிரமங்களை குறைக்க அந்நாட்டில் தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களில் இருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா ஏற்கனவே தனிமைப்படுத்தும் காலத்தை குறைத்துள்ளது. அதே நேரத்தில், இரண்டு நாட்களுக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவு பெற்றவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து விலகப்படுவார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.  

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: