வீட்டில் இருந்து வேலை பார்ப்பது பாரபட்சத்தை அதிகரிக்கலாம் - புதிய ஆய்வு எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

வீட்டில் இருந்து வேலை பார்ப்பது தற்போது பரவலாக இருக்கும் நிலையில், இனவெறியும் பாரபட்சமும் அதிகரிக்கலாம் என புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

தவறான எண்ணங்களை உடைப்பது, வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் நண்பர்கள் தான் என வூல்ஃப் நிறுவனத்துக்கான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆய்வு பரிந்துரைக்கிறது.

பலரும் வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பது, அவர்கள் மீண்டும் அவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட உலகிற்கு சென்று விடும் அபாயம் உள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் எட் கெஸ்லர் தெரிவித்தார்.

சமூக உறவுகளை மேம்படுத்த முக்கியமான இடங்களாக அமைந்திருக்கும், அலுவலகங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆய்வில் 11,701 பேர் கலந்து கொண்டனர்.

முஸ்லிமான ஹதியா மசையா, பழமைவாத யூதரான சாமுவேல் ரொசென்கார்டுடன் நெருங்கிய நண்பராகியது, வேலை பார்க்கும் இடத்தில்தான்.

இனவெறி அல்லது முஸ்லிம்களை கண்டு பயம் ஏதும் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் குறித்த "தவறான எண்ணங்கள்" இருந்ததாக சாமுவேல் கூறுகிறார்.

"ஹாதியாவை பார்த்த பிறகு பல விஷயங்கள் எனக்கு புரிய வந்தது" என்று அவர் தெரிவித்தார்.

பணியிடம் காரணமாக இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

பட மூலாதாரம், HADIYA MASIEH

"எங்கள் இலக்குகள் மற்றும் ஆசைகள் ஒன்றாக இருந்தது. அதனால் எங்களுக்கு இயற்கையான நட்புறவு வளர்ந்தது" என்று ஹதியா தெரிவித்தார்.

"எங்கள் இருவரின் பின்புலமும் முற்றிலும் வேறு. இஸ்ரேல் பாலத்தீன பிரச்சனை குறித்து சூடான விவாதம் நடக்கும். ஆனால், ஒருவரை ஒருவர் நாங்கள் புரிந்து கொண்டு இதனை விவாதிக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

சாமுவேல் மேலும் கூறுகையில், "கொரோனாவுக்கு முன்பு வரை இதுபோன்ற பல விவாதங்கள் வழக்கமாக எங்களுக்குள் நடக்கும். அதோடு முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான சில கலாசார பண்புகளை அடையாளம் காண்போம். பல இடங்களில் ஒரு கருத்துக்கு ஒத்துப் போனால், ஒரு சில கருத்துகள் ஒத்துப் போகாமல் இருக்கும்" என்கிறார்.

"ஹதியாவும் நானும் அலுவலகத்தில் திடீரென சந்தித்து பேச ஆரம்பித்து, அப்படியே காஃபி குடிக்க செல்வோம். ஆனால், இப்போது அப்படியெல்லாம் இல்லை"

பகிரப்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் 76 சதவீதம் பேர், இன ரீதியாக வேறுபட்ட ஒரு அமைப்பில் இருந்தனர்.

இதுவே வேலையின்றி இருக்கும் மக்களின் நட்பு வட்டமான 37 சதவீதம், தங்களது சொந்த இனத்திலேயே இருக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் பன்முகத்தன்மை குறித்த மக்களின் கருத்தும் கேட்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வில் கலந்துகொண்ட கருப்பினத்தவர் அல்லாத, ஆசியர்கள் அல்லாத முக்கால்வாசி பேர் தங்கள் உறவினர் ஒரு கறுப்பினத்தவரையோ (74%) அல்லது ஆசிய நபர் ஒருவரையோ (70%) திருமணம் செய்து கொள்வதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.

44 சதவீதத்திற்கும் குறைவான மக்கள், தங்கள் நெருங்கிய உறவினர் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்துகொள்வதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

'பாகிஸ்தானி' என்கிற வார்த்தையை விட 'முஸ்லிம்' என்கிற வார்த்தை அதிக எதிர்மறை உணர்வை தருவதாகவும், இந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: