நாசா & ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பிய ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், NASA

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த மனிதர்கள், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ராக்கெட் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று விண்வெளிக்கு கிளம்பினர்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக காப்சூல் வடிவில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் தொடங்கி வைத்துள்ளனர்.

கசிவு, அழுத்தம் மற்றும் வெப்பநிலை சோதனைகளுக்கு பிறகு, இந்த விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் பயணித்த டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் வரவேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று கிளம்பிய பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், பில்லியனரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ரஷ்யாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவரும் என்று கருதப்படுகிறது.

கொரோனா தொற்று அதிகரிக்கும் போது இந்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் தரவுகள் காட்டுகின்றன. எனினும் ஊரடங்கை இந்திய அரசு தளர்த்தியிருப்பது ஏன்?

இதுகுறித்து விரிவாக எழுதுகிறார் பிபிசி செய்தியாளர் அபர்ணா அல்லூரி.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ஊரடங்கை மீறி வலுக்கும் போராட்டங்கள், எதிர்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் இறந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடைகள் சேதப்படுத்தப்பட்டு கார்கள் எரியூட்டப்பட்டு போராட்டங்கள் தீவிரமாகிவருகின்றன.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

கொரோனா வைரஸ்: போக்குவரத்து, உணவகம், இ பாஸ் - தமிழகத்தில் அமலாகும் தளர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை ஜூன் 30 வரை தளர்வுகளுடன் மாநில அரசு நீடித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி பொது முடக்கத்தை நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதிக பாதிப்புள்ள சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற இந்திய மாணவர்களின் கனவு இனி நனவாகுமா?

பட மூலாதாரம், Getty Images

உலகின் தலை சிறந்த வணிக கல்லூரியில் ஏம்.பி.ஏ படிக்க வேண்டுமென்ற ஆசைக்காக இரண்டு ஆண்டுக்கு முன்னாள் உழைக்கத் தொடங்கினார் 29 வயதான ரௌணக் சிங்.

2020 ஜனவரியில் கலிஃபோர்னியாவில் இருக்கும் யூசி பெர்க்லி ஹாஸ் வணிக கல்லூரியில் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றார். பல்கலைக்கழகம் அவரது விண்ணப்பத்துக்கு வலு சேர்க்க சில தகவல்களைக் கேட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: