ஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

'ஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு'

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று அங்கு வேலை பார்க்கும் நபர்களுக்கு அந்நாட்டில் அதிக நாள் தங்க ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது அந்நாட்டு அரசு.

அந்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தீக்கிரையான பண்ணைகளில் பணி செய்ய முன் வருபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். முன்பு வொர்க்கிங் ஹாலிடே விசாவில் செல்பவர்கள் ஆறு மாத காலம் பணி செய்ய முடியும்.

காட்டுத்தீயால் தீக்கிரையான பண்ணைகளில் வேலை செய்பவர்கள் 12 மாதங்கள் தங்க அனுமதி வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

நிரந்தர வேலை காரணமாக ஒரு நாட்டுக்குச் சென்று தங்க 'வொர்க் விசா' பெற்றிருக்க வேண்டும். விடுமுறையைக் கழிக்கச் சென்றவர்கள் சிறு சிறு வேலைகள் செய்து பொருளீட்ட 'வொர்க்கிங் ஹாலிடே' விசா போதுமானது.

முதியவர்களை எச்சரிக்கும் சீனாவின் முதல் ஆய்வு அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீன மருத்துவ அதிகாரிகள், 44,000 பேருக்கு அதிகமானோரின் தகவல்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் வயதானவர்களே ஆபத்தில் இருப்பதாகவும், 80 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது என்றும் சீன நாட்டின் தேசிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை வுஹான் நகரத்தில் முக்கிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட முதன்மை வழக்கு மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், முற்றுகைப் போராட்டம் நடைபெறுமா என்பது தெரியவில்லை.

கம்பாலா எருமை பந்தயம் - ஸ்ரீனிவாச கௌடாவின் சாதனையை முறியடித்த நிஷாந்த்

பட மூலாதாரம், PTI

ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிடப்பட்ட கம்பாலா வீரர் ஸ்ரீனிவாச கௌவுடாவின் வேகத்தையே விஞ்சியுள்ளார் நிஷாந்த் ஷெட்டி எனும் கம்பாலா எருமைப் பந்தைய வீரர். பிப்ரவரி 1 அன்று கர்நாடகாவில் நடந்த கம்பாலா எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

ராணுவத்தில் களத்தில் இறங்கி நேரடியாக சண்டையிடுதல் அல்லாத பணிகளில் (non combative roles) பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்தலாம் (permanent commission) என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை, ஓடும் ஆற்றில் வீசப்பட்ட ஒரு பெரும் பாறையைப் போலவே கருத வேண்டும்.

இது ஆற்றின் போக்கை மாற்றப் போவதில்லை என்றாலும் நீரோட்டத்தில் நிச்சயம் ஒரு பெரிய சலசலப்பை உண்டாக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: