எகிப்து மம்மி: 3000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக்கப்பட்ட பூசாரியின் குரல் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், LEEDS MUSEUMS AND GALLERIES

எகிப்திய பூசாரி ஒருவரின் மம்மியைக் கொண்டு, அவரது குரலை 3,000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

நெஸ்யமன்னின் என்னும் அந்த பூசாரியின் குரல் செயற்கை குரல் வளையங்கள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மதகுரு கி.மு 1099 - 1069 காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகள் செய்ய அவரின் குரல் வலிமையானதாக இருந்திருக்கும்.

நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.

செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கினர்.

"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்"

பட மூலாதாரம், Getty Images

மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு மியான்மரில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்க தேசத்துக்கு தப்பிச்சென்றனர்.

"யாரிடமிருந்தும் எதையும் பறிக்க வேண்டிய அவசியமில்லை" - குருமூர்த்தி

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட் ஒன்றில், சோ குடும்பத்திடமிருந்து துக்ளக் பத்திரிகையை குருமூர்த்தி பறித்துக்கொண்டதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து துக்ளக்கின் தற்போதைய ஆசிரியரான குருமூர்த்தி நீண்ட விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்திருக்கிறார்.

இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள்

பட மூலாதாரம், Getty Images

மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கைதிகளின் கருணை மனுக்களை கையாளும் போது இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய ஆண்டுகல் 44 மனுக்களில் 40 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 2013க்குப் பிறகு 3 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு, 32 மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நிராகரித்தார்.

காமன்வெல்தில் தங்கம் வென்றதற்கு பரிசாய் கிடைத்த காளை

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் நெருங்க முடியாத அளவில் களத்தில் கெத்து காட்டிய காளைதான் ராவணன். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியில் ராவணன் காளை இரண்டாவது பரிசு வாங்கியது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ராவணன் காளையே அதன் உரிமையாளர் அனுராதாவிற்கு கிடைத்த பரிசுதான் என்பது அதிகம் அறியப்படாத ஒன்று.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: