ஹாங்காங் போராட்டம்: ஆயுதமேந்தி ரயில் நிலையத்திற்குள் புகுந்து தாக்கிய முகமூடி கும்பல் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

முகமூடி அணிந்து தடியுடன் ஹாங்காங் யாங் லாங் ரயில் நிலையத்திற்குள் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட மர்ம மனிதர்கள் அங்குள்ள மக்களை ஆக்ரோஷமாக தாக்கினர்.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், வெள்ளை நிற டி சர்ட் அணிந்து ரயில் நிலயத்தில் மற்றும் ரயிலுக்குள் உள்ள மனிதர்களை ஆக்ரோஷமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

யார் இந்த கும்பல்? ஏன் மக்களை தாக்கினார்கள்? என தெரியவில்லை. ஆனால், போரட்டம் முடிந்து திரும்பிய மக்கள் மற்றும் பயணிகளை இவர்கள் தாக்கி உள்ளனர்.

ஹாங்காங் போலீஸ், "யங் லாங் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர். பலர் மோசமாக காயமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலானது உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது.

மக்கள் போராட்டம்

ஜனநாயகத்திற்கான போராட்டக்காரர்கள் ஊர்வலமாக் சென்று ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் இருந்த பகுதியின் மீது அவர்கள் பொருட்களை வீசியதால், அந்த மக்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images

ஊர்வலமாக சென்ற மக்கள் வான் சாய் பகுதியில் தடுக்கப்பட்டனர். அவர்கள் அரசாங்க அலுவலகங்கள் இருக்கும் ஹாங்காங் மத்திய பகுதிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

ஏறத்தாழ 4,000 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மக்கள் குடிமை உரிமை முன்னணியை சேர்ந்த போனி, "மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்" என்று ஹாங்காங் தலைவர் கேரி லேமை வலியுறுத்தி இருந்தார்.

சீனா

ஹாங்காங்கில் போராட்டத்திற்கு காரணமான குற்றவாளி என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் முதலில் போராட்டம் தொடங்கியது. பின் இந்த போராட்டம் பிற கோரிக்கைகளை முன்வைத்தும் தொடர்ந்து நடந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போராட்டட்தில்தான் போலீஸார் போராட்டக்காரர்களை தாக்கினர். போராட்டம் நடந்த பகுதியில், "அமைதி போராட்டம் பயனற்றது என்று எங்களுக்கு உணர்த்தி வருகிறீர்கள்" என்ற வாசகம் காணப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

காவல் நிலையத்தில் இருந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தனர்.

சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத்தில் 1,03,000 பேர் கலந்து கொண்டனர் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால், 3 லட்சம் பேர் கலந்து கொண்டதாக போராட்ட அமைப்புகள் கூறுகின்றன.

ஹாங்காங்கின் கதை

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டப் பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஹாங்காங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹாங்காங் மக்களுக்கு உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :