ஹாங்காங்கில் ஒற்றை சட்டத்திற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் - நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஹாங்காங்கில் இன்று நடந்த போராட்டத்தில் போலீஸார் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images

அரசாங்க அலுவலகத்திற்கு அருகே உள்ளே முக்கிய வீதிகளை மறித்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஏன் போராட்டம்?

அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images

அதன் தொடர்ச்சியாக இன்றும் போராட்டம் நடைபெற்றது.

ஹங்காங் மேற்கொள்ள இருக்கும் இந்த சட்ட திருத்தமானது ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கிறது.

ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியது.

கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தாய்வான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட திருத்தம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் மூலமாக அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் கருதுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ஹாங்காங் நீதித்துறையிடம்தான் முழு அதிகாரம் இருக்கும். அரசியல், மத ரீதியான குற்றங்கள் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என ஹாங்காங் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உறுதியாக இருக்கும் ஹாங்காங்

போரட்டம் தீவிரமாக நடந்தாலும் இந்த சட்ட திருத்தை மேற்கொள்ள ஹாங்காங் தீவிரமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அதே நேரம், இரண்டாவது முறையாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ஹாங்காங் சட்டமன்றம் இதனை தாமதப்படுத்தி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

சீன ஆதரவு சட்டப்பேரவை, புதன்கிழமை நடப்பதாக இருந்த கூட்டத்தை நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

முதல் முறையாக ரப்பர் குண்டு

ஹாங்காங்கில் பல தசாப்தங்களில் முதல்முறையாக மக்கள் மீது ரப்பர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர், அரச அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகளை முற்றுகையிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

ஒரு தொலைக்காட்சி தரும் நேரலை செய்தியின் படி, கண்ணீர் புகை குண்டு எச்சரிக்கை மக்களுக்கு விடுக்கப்பட்டது தெரிகிறது.

ஆனால், போராட்டக்காரர்கள் முன்னேறி சென்று, கைகளில் கிடைக்கும் பொருட்களை எடுத்து வீசி உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

சட்டமன்ற அலுவலக வளாகத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கேப்ரியல், ஒரு அதிகாரி காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கிறார்.

இது போன்ற செயல்களில் ஈடுப்படுபவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என காவல் ஆணையர் ஸ்டீஃபன் அறிவித்ததாக சவுத் சீன மார்னிங் போஸ்ட் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியதாக சவுத் சீன மார்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

முகத்தை கறுப்பு துணியால் மூடிக் கொண்டு பேசிய ஓர் இளம் போராட்டக்காரர், "இந்த சட்டத்தை குப்பையில் வீசாதவரை நாங்கள் ஓயப்போவதில்லை" என ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறி உள்ளார்.

ஹாங்காங்கின் கதை

எப்படியாக இருந்தாலும் ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. பின் ஏன் இந்த சட்ட திருத்தமென சந்தேகம் ஏற்படலாம். அதற்கு ஹாங்காங் குறித்து அடிப்படையான சில தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டப் பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஹாங்காங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹாங்காங் மக்களுக்கு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹாங்காங் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை போட்டுள்ளது. ஆனால், அது போன்ற சட்ட ஒப்பந்தமும் சீனாவுடன் இல்லை. இருபது ஆண்டுகளாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சீனாவுடன் இந்த சட்ட ஒப்பந்தம் எட்டப்படாததற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சீனாவில் உள்ள மோசமான சட்டப்பாதுகாப்புதான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :