இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் உறுதியான வெற்றி இருக்க வாய்ப்பில்லை - வாக்குப் பதிவுக்குப் பிந்திய கணிப்பு

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேல் பொதுத்தேர்தலில் யாரும் உறுதியான வெற்றியைப் பெற வாய்ப்பில்லை என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் மையவாத புளூ மற்றும் வெள்ளை கூட்டணி 36 அல்லது 37 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் லிகுட் கட்சி 33லிருந்து 36 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இருவருமே தாங்கள் வெற்றி பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய இரண்டு கருத்துக் கணிப்புகள் நேதன்யாஹுவுடன் கூட்டணி வைத்துள்ள வலது சாரிக் கட்சிகள் கூட்டணி அரசமைக்கலாம் என கணித்தன. ஆனால் மூன்றாவது கருத்துக் கணிப்பு ஒன்றில் கண்ட்ஸுடன் கூட்டணி வைத்துள்ள மத்திய மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அரசமைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் தாக்குதல்: பா.ஜ.க எம்எல்ஏ மற்றும் 4 சிஆர்பிஎஃப் படையினர் பலி

பட மூலாதாரம், BHIMA MANDAVI FACEBOOK

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி மீது குறிவைத்து நடந்த தாக்குதலில் அவரும், உடன்வந்த நான்கு சிஆர்பிஎஃப் படையினரும் பலியாகி உள்ளனர்.

ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை பிரிவின் டிஐஜியான சுந்தர்ராஜ் இந்த தகவலை தெரிவித்தார்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி பீமா மண்டவி மற்றும் அவரது 4 பாதுகாப்புபடை அதிகாரிகள் ஆகியோர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தண்டேவாடா-சுக்மா சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகுல்னார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்முவில் துப்பாக்கிசூடு: ஆர்எஸ்எஸ் தலைவரும், மெய்காவலரும் பலி

பட மூலாதாரம், MOHIT KANDHARI

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திரகாந்த் மீதும், அவரது தனது மெய்காவலர் மீதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மெய்காவலர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், சந்திரகாண்ட் அடைந்த படுகாயங்களால் இறந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுசெத் சிங் (பிராந்த் சங்க சாலாக்) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் எழுகின்ற தேசியவாத சமூகத்தின் குரலை அமைதியாக்குதவற்கான முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியோரை உடனடியாக கண்டுபிடித்து, பொது மக்களின் உயர்வான மனப்பான்மையை பாதுகாக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படியும் சாகிறார்கள் உழவர்கள் - முல்லை திணையின் கதை

விவசாய தற்கொலைகள் தமிழகத்திற்கு புதிதல்ல. கடன் தொல்லையால், வெள்ளாமை பொய்த்ததால் தமிழ் நிலத்தில் விவசாயிகள் பூச்சி மருந்து அருந்தி மரணித்து இருக்கிறார்கள். ஆனால், இப்போது பூச்சி மருந்து தெளிக்கும் போதும் இறக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனந்தி, "அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. பூச்சி மருந்து தெளிக்கும் போது காற்றில் பரவிய விஷத்தை சுவாசித்தாலேயே அவர் இறந்தார்." என்கிறார்.

தமிழ்நாட்டில் எஞ்சிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு

பட மூலாதாரம், AFP

தமிழ்நாட்டில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் போக மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர, உறுப்பினர் மரணம் போன்ற காரணங்களால் மேலும் சில தொகுதிகளும் காலியாக இருந்தன.

இவற்றில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாளிலேயே, அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :