காண்டாமிருக உறுப்பு வர்த்தகம் - சீனா எடுத்த முடிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காண்டாமிருகம், புலி இரண்டுமே அழிவின் விளிம்பிலுள்ள வனவிலங்குகளாகும்.

புலிகளின் எலும்புகள் மற்றும் காண்டாமிருகங்களின் கொம்புகளின் வர்த்தகத்தின் மீதான தடையை நீக்குவதை ஒத்தி வைப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.

காண்டாமிருகம், புலிகள் இரண்டுமே அழிவின் விளிம்பிலுள்ள வனவிலங்குகளாகும். இவற்றின் வர்த்கத்தை 1993ம் ஆண்டு சீனா தடை செய்தது.

ஆனால், கடந்த அக்டோபர் மாதம் இந்த விலங்குகளின் உடல் உறுப்புகளை அறிவியல், மருத்துவ மற்றும் கலாசார நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை அனுமதிப்பதாக சீனா அறிவித்தது.

சமீபத்தில் நடத்திய ஆய்வுக்கு பின்னர் இந்த நடவடிக்கையை ஒத்திப்போடுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Lulama Zenzile/Foto24/Gallo Images/Getty Images

படக்குறிப்பு, காண்டாமிருகம், புலிகளின் உறுப்புகள் விற்பனை தடையை தளர்த்துவதை ஒத்திவைத்தது சீனா

பாரம்பரிய சீன மருத்துவத்தில், புலி மற்றும் காண்டாமிருக உடல் பாகங்கள் அதிக மதிப்பு பெறுகின்றன.

காய்ச்சல், யூரிக் அமில வளர்சிதைமாற்றப் பாதிப்பு, தூக்கமின்மை மற்றும் மூளையிலும், தண்டுவடத்திலும் வீக்கம் உள்பட பல்வேறு நோய்களுக்கு இந்த விலங்குகளின் உறுப்புகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றால் ஏற்படும் பயன்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

உலகில் எஞ்சியுள்ள ஒற்றை காண்டாமிருகம்

காணொளிக் குறிப்பு, உலகில் எஞ்சியுள்ள ஒற்றை காண்டாமிருகம்

சமீபத்தில் நடத்திய ஆய்வுக்கு பின்னர், முந்தைய தடையை மாற்றுவதற்காகு அறிவித்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சீன செயலதிகார கவுன்சிலின் துணை பொது சொயலாளர் டிங் சுயேதொங் தெரிவித்துள்ளார்.

ஒத்திப்போடப்பட்டுள்ளதற்கு எந்தவொரு காரணத்தையும் வழங்காத டிங் சுயேதொங், எவ்வளவு நாள் இந்த நிலை நீடிக்கும் என்பதை அறிவிக்கவில்லை. இந்த காலத்தில் பழைய தடையே நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ROBERTO SCHMIDT/AFP/Getty Images

படக்குறிப்பு, காண்டாமிருகம், புலிகளின் உறுப்புகள் விற்பனை தடையை தளர்த்துவதை ஒத்திவைத்தது சீனா

நீண்ட காலமாக வனவிலங்கு பாதுகாப்பதில் சீனா அக்கறை காட்டி வருகிறது. அதனுடைய சாதனைகள் உலக நாடுகளால் பாராட்டப்பட்டுள்ளன.

நேர்மறை பதில்

காண்டாமிருக கொம்பு மற்றும் இறந்த புலிகளின் எலும்புகளின் பொடியை தகுதியான மருத்துவமனைகள், தகுதி வாய்ந்த மருத்துவர்களை கொண்டு பயன்படுத்துவதை சீன தேசிய கவுன்சில் அனுமதிக்கும் என்று கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி அறிவித்தது.

சீன அரசின் இந்த முடிவுக்கு வனவிலங்கு பாதுகாப்பு குழு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பேரழிவு மிக்க விளைவுகள் ஏற்படும் என்று இயற்கைக்கான உலக நிதியகம் கருத்து தெரிவித்தது.

பட மூலாதாரம், Brendon Thorne/Getty Images

சீனாவின் முடிவை ஒத்தி வைத்திருப்பது சர்வதேச எதிர்வினைகளால் எழுந்த நேர்மறையான பதில் நடவடிக்கை என இந்த இயற்கைக்கான உலக நிதியகம் கூறியுள்ளது.

"சிறைப்பிடிக்கப்பட்ட விலங்குகளின் வர்த்தகங்களை அனுமதிப்பதுகூட, கண்டாமிருகம், புலிகளின் எண்ணிக்கையில் பெரும் பாதிப்புக்களை கொண்டு வரலாம்" என்று இது குறிப்பிடுகிறது.

"புலிகள் மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அவற்றின் உறுப்புகளைவிட அதிக மதிப்பு மிக்கது என்கிற வலுவான செய்தியை வழங்க வேண்டியது முக்கியமானது" என்று இந்த நிதியம் தெரிவிக்கிறது.

அழிவின் விளிம்பில் இருக்கும் 5 வன விலங்குகள்

காணொளிக் குறிப்பு, அழிவின் விளிம்பில் இருக்கும் 5 வனவிலங்குகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: