முதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்

பட மூலாதாரம், Vincent Buyssens

படக்குறிப்பு, முதல் உலகப் போரில் பெல்ஜியம் வீரர் ஒப்டாஷியஸ் பைசன்ஸ் உயிரைக் காத்த நாணயங்கள்.

மார்பை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த குண்டு, இதயத்துக்குள் நுழைந்து உயிரை மாய்க்காமல், சட்டை பாக்கெட்டில் இருந்த நாணயங்களில் பட்டுத் தெறித்து விழுகிறது. இலக்கு வைக்கப்பட்டவர் உயிர் பிழைக்கிறார். இது ஏதோ ஒரு தமிழ் சினிமாவின் காட்சியல்ல.

1914 முதல் 1918 வரை நடந்து முடிந்த முதல் உலகப் போரில் நடந்த ஓர் உண்மைக் கதை.

துப்பாக்கிக் குண்டினால் துளைக்கப்பட்ட இந்த நாணயங்களின் படத்தை வின்சென்ட் என்பவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்தார். அவை ஒரே 24 மணி நேரத்தில் 1.30 லட்சம் அப்-ஓட்டுகளை பெற்றன.

பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரைச் சேர்ந்த டிஜிட்டல் வல்லுநரான 28 வயது வின்சென்ட் இதுவரை இட்ட பதிவு எதுவும் இவ்வளவு பிரபலம் அடையவில்லை.

இந்த நாணயங்களால் முதல் உலகப் போரில் காக்கப்பட்டது தமது கொள்ளு தாத்தா ஒப்டாஷியஸ் பைசன்ஸ் என்பவரது உயிர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Vincent Buyssens

படக்குறிப்பு, முதல் உலகப் போரில் ஒரு சிப்பாயாகப் பங்கேற்றவர் ஒப்டாஷியஸ் பைசன்ஸ்.

உடல் நலக்குறைபாடு காரணமாக தொடக்கத்தில் ஒப்டாஷியஸ் பெல்ஜியம் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை; ஆனால், அவர் தன்னார்வ சிப்பாயாக படையில் சேர்ந்தார் என்றும் 1914-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி பெல்ஜியத்தின் லெப்பக்கே நகரில் சுடப்பட்டார் என்றும் வின்சென்ட்டின் தந்தையும், ஒப்டாஷியசின் பேரனுமான பிலிப் கூறுகிறார்.

"ஒப்டாஷியஸை சுட்ட ஜெர்மன் சிப்பாய், பிறகு அருகே வந்து அவரது தலையை எட்டி உதைத்தார். ஆனால், சமயோசிதமாக செயல்பட்ட ஒப்டாஷியஸ் இறந்துவிட்டதைப் போல நடித்ததால் பிழைத்தார். ஜெர்மன் சிப்பாய் அங்கிருந்து சென்ற பிறகு அவரும், காயமடைந்த அவரது சக சிப்பாய் ஒருவரும் அந்த இடத்தில் இருந்து ஊர்ந்து சென்று தப்பித்தனர்" என்கிறார் வின்சென்ட்.

பட மூலாதாரம், Vincent Buyssens

படக்குறிப்பு, இந்த நாணயங்களை ஒப்டாஷியஸ் தமது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தார்.

அவரது பாக்கெட்டில் கொத்தாக இருந்து அவரை துப்பாக்கிக் குண்டில் இருந்து காப்பாற்றியதாக காட்டப்பட்டுள்ள ஆறு நாணயங்களில் சிலவற்றில் துப்பாக்கிக் குண்டின் தடம் ஆழமாகப் பதிந்துள்ளது. சில நாணயங்கள் வளைந்துள்ளன. "அந்த ஆறு நாணயங்களில் மூன்று பெல்ஜியம் நாட்டு நாணயங்கள், மற்ற மூன்றும் பிரான்ஸ் நாணயங்கள்" என்கிறார் பிலிப்.

போருக்குப் பிறகு ஒப்டாஷியசுக்கு இருதய நோய் உண்டானது. ஆனால், அவர் 1958 வரை உயிருடன் இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :