“நல்ல கறி விலை அதிகம் அதனால் வேட்டையில் இறங்கினேன்” - பிடிப்பட்ட 80 வயது முதியவர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

கறிக்காக வேட்டை

தன்னால் அதிகம் செலவு செய்து தரமான காட்டுப்பமன்றி கறி வாங்க முடியாது என்ற காரணத்தினால், வேட்டையில் இறங்கிய 80 வயது ஓய்வூதியதாரி பிடிப்பட்டார். அந்த முதியவரால் வேட்டையாடப்பட்ட காட்டுப் பன்றி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவமானது பெர்லினில் நிகழ்ந்துள்ளது. போலீஸூக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து ரெயினிகிண்டோர்ஃப் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் அவரை கைது செய்தனர்.

சுறா தாக்கியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல சுற்றுலா தளத்தில் சுறா தாக்கியதில் ஒருவர் மரணித்தார். விட்சண்டே தீவில் உள்ள சிட் துறைமுகத்தில் இந்த நிகழ்வானது நிகழ்ந்துள்ளது. நண்பர்களுடன் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவமானது நிகழ்ந்ததாக போலீஸார் கூறுகின்றனர். இதே இடத்தில் செப்டம்பர் மாதம் இதே போல இருவரை சுறா தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.

சார்லி ஹெப்டோ தாக்குதல்

பட மூலாதாரம், AFP

பிரான்சின் நகைச்சுவை மற்றும் பகடி இதழான "சார்லி ஹெப்டோ"வின் அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் 2015 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பதினொரு பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்திலிருந்து தப்பிய பிரஞ்ச் இதழாளர் பிலிப்பி லான்கொன் மூன்றாண்டுகளுக்கு பின்பு முதல்முதலாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரின் புத்தகமான 'லி லாம்பியா'வுக்கு ஃபெமினா விருது வழங்கப்பட்டது. அதனை பெறுவதற்காக பாரீஸில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்றார்.

மெக்ஸிகோ நகரத்தில் குடியேறிகள்

பட மூலாதாரம், AFP

மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி சொன்று கொண்டிருக்கும் குடியேறிகள் ஊர்வலத்தை சேர்ந்த நபர் ஒருவர் மெக்ஸிகோ தலைநகரத்தை வந்தடைந்தார். இவர்தான் முதலாவதாக மெக்ஸிகோ நகரத்தை வந்தடைந்தவர் ஆவார்.

ஏறத்தாழ 5000 பேர் செல்லும் இந்த ஊர்வலமானது, 'குடியேறிகள் ஊர்வலம்' என அழைக்கப்படுகிறது. அக்டோபர் 12 ஆம் தேதி ஹோண்டியுரஸ் நாட்டிலிருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது. தங்கள் நாடுகளில் தங்களுக்கென எந்த பொருளாதார வாய்ப்பும் இல்லை. எப்படியாவது அமெரிக்கா சென்று விட்டால் வாழ்வு மாறும், வசந்தம் வரும், இதுவெல்லாம் நிகழாவிட்டாலும் தங்கள் குழந்தைகள் வன்முறையிலிருந்து தள்ளி இருப்பார்கள். இப்போது இருக்கும் வாழ்க்கையைவிட மேம்பட்ட வாழ்க்கை குறைந்தபட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஆவர்கள் அமெரிக்காவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.

வேகம் காட்டும் கருவியில் கோளாறு

பட மூலாதாரம், Reuters

இந்தோனீசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானிக்கு விமானத்தின் வேகத்தை சுட்டிக்காட்டும் கருவியில் கோளாறு இருந்தது விமானத்தின் கருப்புப்  பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.லயன் ஏர் விமான சேவையின் ஜேடி 610 எண் விமானம் 189 பயணிகளுடன் இந்தோனீசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து கிளம்பியவுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.திங்களன்று நடந்த கூட்டத்தில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் இந்தோனீசிய அதிகாரிகளை கோபமாக விபத்து குறித்த கேள்விகளை கேட்டனர்.இந்த விமானத்தின் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: