இறந்தது நிலநடுக்க மீட்புப் பணியில் உதவிய நாய் - நெகிழ்ச்சி பகிர்வு

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

கதாநாயகனாக மாறிய நாய்

பட மூலாதாரம், Fabiano Ettore

இத்தாலியில் 2016 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் போது மீட்புப் பணியில் உதவிய கெஒஸ் எனும் பெயருடைய நாய் விஷத்தின் காரணமான இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார் அதன் உரிமையாளர் ஃபேபியானொ. ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த இந்த கெஒஸ் நிலநடுக்க மீட்புப் பணியின் கதாநாயகானாக கருதப்பட்டது. அந்த நாய் குறித்த பேஸ்புக் பதிவானது பலரால் 60,000-க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டு இருக்கிறது.

சந்திக்க விரும்புகிறேன்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த முன் நிபந்தனகளும் இன்றி இரான் அதிபர் ஹசன் ரூஹானியை சந்திக்க விரும்புவதாக கூறி உள்ளார். அவர்கள் விரும்பும் நேரத்திலேயே இந்த சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்தித்த டிரம்ப், "நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன். எனக்கு உரையாடல்களில் நம்பிக்கை உள்ளது" என்று கூறி உள்ளார்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்பு

பட மூலாதாரம், Travel_Nerd

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பு தஜிகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் ஒன்றுக்கு பொறுப்பேற்று உள்ளது. தஜிகிஸ்ஹான் தலைநகரிலிருந்து தென் கிழக்கே 70 கி.மீ தொலைவில் உள்ள டன்காரா மாவட்டத்தில் ஒரு கார் மிதிவண்டி வீரர்கள் மீது மோதியதில் இரண்டு அமெரிக்கர்கள், சுவிஸ் தேசத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் டச்சு தேசத்தை ஒருவர் என நான்கு பேர் மரணமடைந்தனர்.மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தஜிகிஸ்தானில் இதுவே ஐ.எஸ் அமைப்பின் முதல் தாக்குதலாகும். ஆனால், இது குறித்த எந்த ஆதாரங்களையும் ஐ.எஸ் அமைப்பு பகிரவில்லை.

கண்காணிக்கும் வான் நிர்வாகம்

பட மூலாதாரம், Getty Images

பயணிகளை ரகசியமாக கண்காணிப்பது தொடர்பாக கடும் கண்டனங்களை அமெரிக்க போக்குவரது பாதுகாப்பு நிர்வாகம் சந்தித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் எந்த குற்றப்பிண்ணனியும் இல்லாத பயணிகளையும் கூட கண்காணிப்பதற்காக யாருக்கும் தெரியாத வழிமுறைகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இனவாத வகைபாட்டுடன் இந்த கண்காணிப்பை மேற்கொள்ள கொள்ளவில்லை. ஒது இயல்பான நடைமுறை என்றுள்ளது அமெரிக்க போக்குவரது பாதுகாப்பு நிர்வாகம்.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பணயக்கைதிகளாக தென் மேற்கு சிரியாவில் பிடித்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் சுவைடா மாகாணத்தில் நடந்த பயங்கர சண்டையின் போது அவர்கள் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :