பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாகூரில் இருந்த ஜெயின் ஆலயம் 1992 டிசம்பர் எட்டாம் தேதியன்று இடிக்கப்பட்டது
    • எழுதியவர், ஷீராஜ் ஹஸன்
    • பதவி, பிபிசி

அயோத்தியில் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தபோது அதன் பாதிப்பும் தாக்கமும் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது அனைவரும் உணர்ந்ததே. ஆனால் பாபர் மசூதி வீழ்ந்ததின் எதிரொலியாக இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்த பல கோயில்கள் இடிக்கப்பட்டன.

இந்து மதத்தினர் சிறுபான்மையினராக இருக்கும் பாகிஸ்தானில் பிற மதத்தினரின் வழிபாட்டு தளங்களும், கோயில்களும் இருந்தது இயல்பானதே. ஏனெனில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்குமுன் பாகிஸ்தானும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்த்து.

ஆனால் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே பாகிஸ்தானில் அதன் எதிர்வினைகள் ஆக்ரோஷமாக வெளிப்பட்டன.

பட மூலாதாரம், Shiraz Hassan/BBC

படக்குறிப்பு, லாகூர் ஜெயின் ஆலயத்தின் தற்போதைய நிலை

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானில் சுமார் 100 கோயில்கள் தரைமட்டமாயின அல்லது அவற்றிற்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த கோயில்களில் பலவற்றில் தினசரி பூசைகள் நடைபெற்றதில்லை. 1947 இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் வந்த மக்களில் பலர் இந்த கோவில்களில் அடைக்கலம் பெற்றிருந்தனர்.

1992 டிசம்பர் எட்டாம் தேதியன்று லாகூரில் இருந்த ஜெயின் கோவில் ஒன்று இடித்து தள்ளப்பட்டது. தற்போது அங்கு வெறும் இடிபாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Shiraz Hassan/BBC

படக்குறிப்பு, பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியால் தாக்கப்பட்ட ராவல்பிண்டி கிருஷ்ணர் கோவில் விமான கலசம்

இந்த கோவில்களில் வசிக்கும் சிலருடன் நான் பேசினேன். 1992 டிசம்பர் எட்டாம் தேதியன்று கோயிலை தாக்க திரண்டுவந்த கும்பலிடம், கோயிலை விட்டுவிடுங்கள் என்று நாங்கள் கெஞ்சினோம்.

"இது எங்கள் வீடு, எங்களை தாக்காதீர்கள்" என்று கைகூப்பி கெஞ்சினோம்.

ராவல்பிண்டி கிருஷ்ணர் கோயிலில் இன்றும் இந்து மக்கள் பூசைகளையும், வழிபாடுகளையும் செய்கின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு இந்த கோயிலும் இடித்து தள்ளப்பட்டது.

அரசு மனது வைத்தால் இந்த கோயிலின் விமானக் கலசம் மீண்டும் நிறுவப்படலாம்.

பட மூலாதாரம், Shiraz Hassan/BBC

படக்குறிப்பு, ராவல்பிண்டி கல்யாண் தாஸ் கோயில்

இது ராவல்பிண்டியில் உள்ள கல்யாண் தாஸ் கோயில் புகைப்படம். தற்போது இங்கு பார்வையிழந்த குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் செயல்படுகிறது.

1992இல் ஒரு கும்பல் இங்கிருந்த கோயிலை தாக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கட்டடத்தை காப்பாற்ற முடிந்தது என்று பள்ளி அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Shiraz Hassan/BBC

படக்குறிப்பு, ஜேலமில் உள்ள பாழடைந்த கோயில்

பாகிஸ்தானின் ஜேலமில் உள்ள பாழடைந்த கோவில் இது. இந்தக் கோயிலை பற்றிய மக்களின் நம்பிக்கை ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.

இந்த கோயிலுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுத்த முயற்சி செய்தவர்களுக்குதான் இழப்பு நேரிடும் என்பது நிதர்சனமான உண்மை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஒன்று அவர்கள் பலத்த காயமடைவார்கள் அல்லது அகால மரணமடைவார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, இந்தக் கோயிலையும் இடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் தலையில் கோயின் கோபுரத்தின் பகுதி விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு இந்தக் கோயிலை இடிக்கவோ சேதப்படுத்தவோ யாரும் முயற்சிக்கவில்லை என்பது உள்ளூர் மக்களின் கூற்று.

பட மூலாதாரம், Shiraz Hassan/BBC

படக்குறிப்பு, லாகூர் பன்ஸிதார் கோயில்

லாகூரின் அனார்கலி கடைவீதியில் அமைந்திருக்கும் பன்ஸிதார் கோயில் 1992 பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு பகுதியளவு சேதப்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Shiraz Hassan/BBC

படக்குறிப்பு, லாகூர் ஷீத்லா தேவி கோயில்

லாகூரில் அமைந்துள்ள ஷீத்லா தேவி கோயிலின் புகைப்படம் இது. மத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியபின், அதன் பின்விளைவாக பாகிஸ்தானில் இருந்த மத வெறியர்களால் இடித்துத் தள்ளப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று.

இந்த கோயிலின் ஒரு பகுதி தாக்கப்பட்டு பெருத்த சேதமடைந்தது. பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்து வந்த அகதிகளின் குடும்பங்கள் தற்போது இங்கு வசிக்கின்றனர்.

காணொளிக் குறிப்பு, பாபர் மசூதி இடிப்பு: பிரச்சனை தொடக்கம் முதல் இன்று வரை

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :