'நேட்' புயல்: மத்திய அமெரிக்க நாடுகளில் 20 பேர் பலி

கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளில் 'நேட்' என்று பெயரிடப்பட்ட வெப்ப மண்டலப் புயலால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோஸ்டா ரிகாவில் புயலால் கரைபுரண்டு ஓடும் ஓர் ஆறு. இந்நாட்டில் உள்ள பல நகரங்கள் இப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்புயல் வலுவடைந்து ஒன்றாம் நிலை சூறாவளியாக மாறி, அமெரிக்காவின் தெற்குக் கடற்கரையை ஞாயிற்றுக்கிழமையைக் கடக்கும் என்று தட்பவெட்ப ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இந்தப் புயலால் கடும் மழை, நிலச்சரி, வெள்ளம் ஆகியவை ஏற்பட்டு வீடுகள், பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

கோஸ்டா ரிகாவில் சுமார் 5,000 மக்கள் அவசரகால முகாம்களில் உறங்குகின்றனர். அந்நாட்டில் எல்லா ரயில் பயணங்களும், ஏராளமான விமானங்களும் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோஸ்டா ரிகாவில் வீடுகளுக்கு பலத்த சேதம்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தேசியப் பூங்காக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நாட்டில் மூடப்பட்டுள்ளன.

நிகரகுவாவில் கட்டமைப்பு வசதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது இப் புயல்.

புயலின் பாதையில் அமைந்துள்ள தங்கள் தளங்களில் இருந்து ஊழியர்களை திரும்ப அழைத்துவருவதாக மெக்சிகோ வளைகுடாவில் இயங்கிவரும் பெட்ரோலிய நிறுவனங்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :