உகாண்டாவுக்கு வரும் தெற்கு சூடான் அகதிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது

தெற்கு சூடானில் நிலவும் வன்முறை சூழலால் அங்கிருந்து உகாண்டாவுக்கு தப்பிச்செல்லும் அகதிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள்) அமைப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 'உகாண்டாவுக்கு வருகைபுரியும் அகதிகளில் 85 சதவீதத்துக்கும் மேலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்'

இது தொடர்பாக உடனடியாக கூடுதல் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், குறைந்தது 10 லட்சம் அகதிகள், சூடான், எத்தியோப்பியா, கென்யா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து நடந்த பல அட்டூழியங்களால் மூண்ட உள்நாட்டுப் போரால், தெற்கு சூடான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், AFP

2013-ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில், தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், நாட்டின் துணை அதிபரான ரெய்க் மச்சாரை பதவிநீக்கம் செய்தார்.

மேலும், அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், ரெய்க் மச்சார் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதனை, ரெய்க் மச்சார் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், இவ்விரு தரப்பினருக்கும் ஆதரவான படையினர் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

தங்கள் நாட்டுக்கு வருகைபுரியும் அகதிகளை வரவேற்று அவர்களுக்கு ஆதரவளிக்கும் உகாண்டாவின் செயலை ஐ.நா. அமைப்பு மற்றும் மற்ற சர்வதேச நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டில், உலகில் வேறு எந்த நாட்டையும்விட உகாண்டாவுக்கு அதிக அகதிகள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :