கீழடி அகழாய்வு: கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடு, எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள்

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

மே 20ல் அகரம், கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மணலூரில் மே 22ம் தேதி, கொந்தகையில் 27ம் தேதி முதல் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறுது.

கொந்தகையில் நடந்த அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகளும், ஆறு சிறிய மண்பானைகளும் கண்டறியப்பட்டதால், கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும், என மதுரை காமராசர் பல்கலை கழகம் மற்றும் உயிரியல் துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

கொந்தகையில் குறைந்த பட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் முடிவு செய்து அந்த பகுதியில் அகழாய்வு நடத்தி வரும் நிலையில் நேற்று (05.06.2020) அந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் தென்னை கன்றுகள் நடுவதற்காக இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் போது முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து நில உரிமையாளர் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர்.

பின்னர் அவை தொல்லியல் ஆய்வாளர்கள், மரபணு ஆய்வாளர்கள் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது

பண்டைய காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்து உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது.

முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்தான் இவற்றின் காலம் பற்றி அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில் அதிகமாக நத்தை கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நத்தைகளில் இருவகை உண்டு, நன்னீரில் வளரும் நத்தைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவார்கள். கடல் நீர் நத்தைகளை அழகு பொருளாக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அகரத்தில் கிடைத்த நத்தை கூடுகள் அனைத்துமே நன்னீர் நத்தை கூடுகள். பண்டைய தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உடல் உபாதைகளுக்கு தீர்வு கண்டறிந்த நிலையில், நத்தைகளை மருத்துவ ரீதியாக பயன்படுத்தினார்களா அல்லது உணவு பொருளாக பயன்படுத்தினார்களா என்பது ஆய்வின் முடிவில்தான் தெரிய வரும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கிடைத்து வரும் நத்தைகளை அதன் அளவுக்கு ஏற்ப தரம் பிரித்து ஆவணப்படுத்தி வருகிறோம். முழுமையான அளவில் கிடைத்த நத்தைகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நத்தைகளை சமைத்து சாப்பிட்டால் சளி, இருமல் சிறு குழந்தைகளுக்கு உமிழ் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும், ரத்தகட்டுக்கு நத்தையை அரைத்து ரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்டுப்போட்டால் விரைவில் குணமடையும். நத்தை ஓடுகள், மூலம் நோய்க்கு சிறந்த மருந்து. நத்தையின் சதை, விந்து எண்ணிக்கையை உயர்வடைய செய்யும் என்பதால், அகரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக நத்தை கூடுகள் கிடைத்திருப்பதால் அங்கு சமையல் கூடமாக இருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியான அகழாய்வு மூலம் இதன் பயன்பாடு தெரிய வரும்" என சித்த மருத்துவர் வெங்கட்ராமன் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: