You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் & லோர்னா கார்டன்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து ஏறக்குறைய முடங்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இரான் மற்றும் ஓமனுக்கு இடைப்பட்ட அந்த குறுகிய கடல் பகுதியைத் கடப்பதற்காகக் காத்திருக்கும் 2000 கப்பல்களில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மாலுமிகளின் நிலை குறித்து மிகக் குறைவாகவே அறியப்படுகிறது.
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது 21 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் கடல் பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் உள்ளனர். மாலுமிகள் குறைந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள், அதீத சோர்வு மற்றும் கடுமையான மன அழுத்தத்துடன் போராடி வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறுகிறது.
அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்செனியோ டோமிங்குவேஸ், "இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையற்ற நடவடிக்கைகள் இனிப் போதாது" என்று தெரிவித்தார்.
மேலும் இதற்கு ராஜீய ரீதியிலான உதவிகள் தேவை என அவர் கூறினார்.
'ஹோர்மூஸ் தலைவலி'
இந்தப் போர் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்படுத்தியுள்ள குளறுபடிகளைச் சரிசெய்வது என்பது, அவசியமான அதே வேளையில் மிகவும் நுணுக்கமான மற்றும் சிக்கலான பணியாகும்.
ஹோர்மூஸ் நீரிணைக்கு எதிரே உள்ள கடற்கரையின் பெரும்பகுதியை இரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதாவது, கப்பல்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்துவதற்காக எத்தனை குறைவான தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களையும் அந்த நாடு நினைத்தால் அங்கு மறைத்து வைக்க முடியும்.
கடற்படைகள் தங்கள் போர்க்கப்பல்களை அந்தக் கடற்கரைக்கு மிக அருகில் அனுப்ப விரும்புவதில்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் தாக்கப்படுவோம் என்று பயப்படுகிறார்கள்.
எனவே, நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ராணுவ பலம் மட்டுமே வேலை செய்யாது என்பதில் பெரும்பாலான ராணுவ ஆய்வாளர்கள் உடன்படுகிறார்கள்.
இது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சாத்தியமாகும், ஒருவேளை பாகிஸ்தான் போன்ற மூன்றாம் தரப்பு நாடு வழியாக இது நடக்கலாம். இறுதியில் இதற்கு இரானிடமிருந்து பச்சைக்கொடி காட்டப்படவேண்டும்.
இது இரானின் எதிரிகளுக்கு விழுங்க முடியாத ஒரு கசப்பான மாத்திரையாக இருக்கும்.
ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 34 நாட்கள் பேரழிவுகரமான வான்வழித் தாக்குதல்களால் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த முடியவில்லை. அந்த நாடு ஒவ்வொரு நாள் தப்பிப்பிழைப்பதும் அதன் உறுதியை இன்னும் ஆழப்படுத்துகிறது.
எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இரான் தயாராக இல்லாத நிலையில், அனைத்துக் கப்பல்களும் மீண்டும் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிப்பதற்கு முன்னதாக நிதி ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ அதிக விலையை அது கோரக்கூடும்.
இரானுக்கு சாதகமான நிலவியல்
உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளது.
நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது.
இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு