You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மடப்புரம் அஜித் குமாரை தொடர்ந்து மானா மதுரையில் மற்றொரு காவல் மரணமா?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
மானா மதுரையில் விசாரணை கைதி ஆகாஷ், போலீசார் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மானா மதுரையில் மடப்புரம் அஜித் குமார் போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு வழக்கில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி ஆகாஷ் டெலிசன் மற்றும் கோபி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்
பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஆகாஷ், தப்ப முயன்ற போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை கூறுகிறது. மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் டெலிசன், திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
போலீசார் விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
'போலீசார் எலும்பை உடைத்தனர்'
''என் மகன் பிஎஸ்சி கணினி அறிவியல் படித்திருக்கிறான். இரண்டு சாதி இளைஞர்கள் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக எனது மகனை பிடித்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர். என் மகன் பாலத்தில் இருந்து தப்ப முயற்சித்து குதித்த போது கால் உடைந்தது என போலீசார் சொல்வதில் உண்மை இல்லை. போலீசார் அவனை சிவகங்கை மாவட்டத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று எலும்பை உடைத்ததாக அம்மாவிடம் கூறியுள்ளான்'' என பிபிசி தமிழிடம் கூறினார் உயிரிழந்த ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன்.
இரண்டாவது நாளாக சாலை மறியல்
போலீசார் தாக்கியதால் தான் ஆகாஷ் உயிரிழந்ததாக கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் மானாமதுரையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, அவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஆகாஷ் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.
சிவகங்கை காவல்துறை விளக்கம்
''மாவு கட்டு போடுவது, குற்றவாளிகளை சுட்டு பிடிப்பது மட்டுமே போலீசார் கவனத்தை செலுத்தி வருவதால் மோசமான நிலையை நோக்கி தமிழகம் செல்கிறது.'' என மக்கள் கண்காணிப்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கூறுகிறார்.
''காவல்துறை சித்திரவதை, காவல் நிலைய மரணம் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் காவலர்கள் கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு கண்காணிக்கத் தவறியதால் ஆகாஷை போன்ற இளைஞர்கள் தொடர்ந்து காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்'' என்கிறார் அவர்.
''ஆகாஷ் டெலிசனை கைது செய்யும் போது பாலத்தில் இருந்து விழுந்து அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மார்ச் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்'' என செய்தி குறிப்பு வாயிலாக சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது
போலீசார் தாக்கியதால் ஆகாஷ் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருவது தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத்திடம் பிபிசி தமிழ் பேசியபோது, ''காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க செய்தி குறிப்பு தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது'' என கூறினார்
தமிழ்நாடு தேர்தல் 2026 - உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்தத் தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு