2வது சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் - ஆப்கன் தோற்றாலும் குர்பாஸை கொண்டாடும் ரசிகர்கள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

புதன்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவு மிகவும் பரபரப்பாக இருந்தது.

ஆமதாபாத் நரேந்திர மோதி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி ஆறு விக்கெட்டுகளுக்கு 187 ரன்கள் எடுத்தது.

20 ஓவர்கள் முடிவதற்கு இரண்டு பந்துகள் மட்டுமே இருந்த நிலையில், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் அணியும் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவரை எட்டியது.

ஆனால் முதல் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் தென்னாப்பிரிக்க வென்றது

முதல் சூப்பர் ஓவர்

முதல் சூப்பர் ஓவரில், ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆப்கானிஸ்தான் அணிக்காக பேட்டிங் செய்ய வந்தனர்.

சூப்பர் ஓவரை லுங்கி நிகிடி வீசனார். முதல் பந்தில் அஸ்மத்துல்லா ஒரு பவுண்டரி அடித்தார்.

இரண்டாவது பந்தில் அஸ்மத்துல்லா ஒரு சிக்ஸரும், மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிளும் அடித்தார்.

பின்னர் குர்பாஸ் ஸ்ட்ரைக் செய்து ஒரு சிங்கிள் எடுத்தார். ஐந்தாவது பந்தில், அஸ்மத்துல்லா ஒரு பவுண்டரி அடித்தார்

கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் ஒரு ரன் எடுத்தது. அஸ்மத்துல்லா 5 பந்துகளில் 16 ரன்களும், குர்பாஸ் ஒரு ரன்னும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவிற்கு 18 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. பின்னர் தென்னாப்பிரிக்காவுக்காக டெவால்ட் பிரெவிஸ் மற்றும் டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஃபசல்ஹாக் ஃபரூக்கி பந்து வீசினார்.

டேவிட் மில்லர் முதல் பந்தில் ஒரு சிங்கிள் அடித்தார்.

அடுத்த பந்தில் டெவால்ட் பிரெவிஸ் ஒரு சிக்ஸர் அடித்தார்.

ஆனால் மூன்றாவது பந்தில் டெவால்ட் பிரெவிஸ் அவுட் ஆனார். பின்னர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்துக்கு வந்தார். நான்காவது பந்தில் அவர் ஒரு பவுண்டரி அடித்தார். இருப்பினும், ஐந்தாவது பந்தில் ஸ்டப்ஸ் ஒரு ரன் கூட எடுக்கத் தவறிவிட்டார்.

கடைசி பந்தில் ஸ்டப்ஸ் ஒரு சிக்ஸர் அடித்தார், சூப்பர் ஓவரும் டை ஆனது.

இரண்டாவது சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?

இரண்டாவது சூப்பர் ஓவரில், தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

இந்த முறை, ஸ்டப்ஸ் முதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். இரண்டாவது பந்தில் அவர் ஒரு சிங்கிள் எடுத்தார். பின்னர் டேவிட் மில்லர் வந்தார்.

மூன்றாவது பந்தில் அவர் இரண்டு ரன்களை எடுத்தார்.

நான்காவது, ஐந்தாவது பந்தில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை அடித்த அவர், கடைசி பந்தில் 2 ரன்களை எடுத்தார்.

இதன் மூலம், தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு 24 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் முகமது நபி ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்கினர். கேசவ் மகாராஜ் பந்து வீசினார்.

முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காத நபி இரண்டாவது பந்தில் அவுட்டானார்.

பின்னர் குர்பாஸ் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை விளாச, முழு மைதானத்திலிருந்தும் கைதட்டலைப் பெற்றார்.

கேசவ் மகாராஜின் அடுத்த பந்து வைட் ஆனது. ஆனால் குர்பாஸ் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

இதனால் ஆப்கானிஸ்தான் சூப்பர் ஓவரில் தோற்றது.

சமூக ஊடகங்களில் குர்பாஸுக்கு பாராட்டு

சமூக ஊடகங்களில் பலர் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் குர்பாஸைப் பாராட்டி வருகின்றனர். சிலர் இதை இதுவரை இல்லாத சிறந்த டி20 போட்டி என்றும் அழைக்கின்றனர்.

அபிஜித் கோஷ் என்ற பயனர் எக்ஸ் தளத்தில், "நாங்கள் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த டி20 போட்டியை இதுதான்" என்று எழுதினார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பிரதிகா ராவல், எக்ஸ் பதிவில் "குர்பாஸுக்காக நான் வருத்தப்பட்டேன். அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தார், ஆனால் ஆப்கானிஸ்தான் தோற்றுவிட்டது.'' என குறிப்பிட்டுள்ளார்.

ராஜேஷ் குமார் என்ற பயனர் இந்தப் போட்டி திரைப்படங்களை விட அதிக சஸ்பென்ஸைக் கொண்டிருந்தது என்று எழுதினார்.

'இன்றைய போட்டியில் குர்பாஸ் ஆப்கானிஸ்தானின் 'ஒன் மேன் ஆர்மி'-யாக இருந்தார்' என்று ஹெதன்ஷ் தேசாய் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு