இரான் மீதான போரின் நோக்கங்கள் "நிறைவடையும் நிலையில் உள்ளன" - டிரம்ப் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Reuters
இரான் போர் குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானின் கடற்படை அழிந்துவிட்டது. அவர்களின் விமானப்படை தகர்க்கப்பட்டுவிட்டது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர்," என்று கூறினார்.
வெள்ளை மாளிகையில் புதன்கிழமை இரவு (இந்திய நேரப்படி வியாழன் காலை 6.30 மணி) பேசிய டிரம்ப் இதனை தெரிவித்தார்.
மேலும், விமானப்படை மற்றும் ஏவுகணை உற்பத்தித் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை அச்சுறுத்தும் அல்லது தங்கள் எல்லைகளுக்கு அப்பால் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் இரான் ஆட்சியின் திறனை, அமெரிக்கா "முறையான வகையில் தகர்த்து வருகிறது" என்று டிரம்ப் கூறுகிறார்.
"இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் இலக்குகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Reuters
போரில் உயிரிழந்த 13 அமெரிக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவே, தான் 'டோவர்' (Dover) விமானப்படைத் தளத்திற்குச் சென்றதாக அவர் கூறினார். "நாம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்; இப்போது, அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்வதன் மூலம் நாம் அவர்களைக் கௌரவிக்க வேண்டும்."
இரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலைக்கு மிக நெருக்கமாக வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமாக இருந்தது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தப் போரின் நோக்கம் எட்டப்பட்டுவிட்டது என்று டிரம்ப் கூறினார்.
"இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த எங்கள் பிற நட்பு நாடுகளின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
எந்தவிதத் தூண்டுதலும் இன்றி இந்நாடுகளின் மீது இரான் நடத்திய தாக்குதல், இப்பிராந்தியத்திற்கு இரான் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்பதை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவுக்கும் உலகுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு "எபிக் ஃப்யூரி" (மாபெரும் சீற்றம்) ஏன் இன்றியமையாதது என்பதை விளக்குவதற்காகவே தான் இந்த உரையை ஆற்றுவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். இரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு "Epic Fury" என்று பெயரிட்டுள்ளது.
கடந்த 47 ஆண்டுகளில், இரானோ அல்லது அந்நாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்களோ எண்ணற்ற பயங்கரவாதத் தாக்குதல்களையும் பிற நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இரான் ஆட்சியமைப்பை அவர் "கொலைகார ஆட்சி" என்று வர்ணித்தார். அந்நாட்டில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்; அந்த நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இத்தகைய தலைவர்கள் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது என்று அவர் கூறினார். "அப்படி நடக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்." என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை