You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்ணின் மூளையில் தனித்துவமான மாற்றங்களை ஏற்படுத்தும் 'இரண்டாவது கர்ப்பம்'
- எழுதியவர், கேட்டி பௌவி
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரண்டாவது முறை கர்ப்பம் தரிப்பது ஒரு தாயின் மூளையை "தனித்துவமான" வழிகளில் மாற்றியமைப்பதாகவும், இது அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுவதாகவும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
முன்பு, ஒரு பெண்ணின் மூளை முதல் கர்ப்பத்தின்போது தாய்மைக்குத் தயாராவதற்கான மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
சமீபத்திய ஆய்வு, இலக்கு சார்ந்த கவனம் மற்றும் பணிசார்ந்த தேவைகள் உள்ள பெண்களுக்கு இரண்டாவது கர்ப்பத்தின் போது ஏற்படும் குறிப்பிட்ட சில மாற்றங்கள் உதவக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
கர்ப்ப காலத்தில் அல்லது அதற்குப் பிறகு சில பெண்கள் உளவியல் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வு முடிவுகள் உதவக்கூடும்.
பெரும்பான்மை பெண்கள் தங்களது வாழ்வில் கர்ப்ப காலத்தை அனுபவிக்கிறார்கள். 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 2.3 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
முன்னதாக, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவமனை மையத்தில் உள்ள கர்ப்பகால மூளை ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், ஒரு பெண் முதல்முறையாக கர்ப்பமாகும்போது, தன்னைப் பற்றிச் சிந்திக்கவும், குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும் அவரது மூளையின் பகுதி மாற்றமடைவதைக் கண்டறிந்தனர். இந்த மாற்றங்கள் அவர் தனது குழந்தையைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள உதவுகின்றன.
சமீபத்திய ஆய்வில், ஆய்வாளர்கள் 110 பெண்களைக் கண்காணித்தனர். அதில் சிலர் முதல்முறை தாயானவர்கள் மற்றும் சிலர் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுப்பவர்கள். இவர்கள் போக, குழந்தை இல்லாமல் இருந்தவர்களும் அந்தக் குழுவில் இருந்தனர்.
பெண்களின் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட மூளை ஸ்கேன்கள், எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைச் சரியாகக் கண்டறிய உதவின.
அதன்படி, இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த பெண்களிடையே, கேட்கும் மற்றும் உணரும் திறன்களில் கவனம் செலுத்தவும் எதிர்செயலாற்றவும் உதவும் பகுதிகளில் அவர்களின் மூளை அதிக மாற்றங்களைக் காட்டியது.
"ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய சூழலில் இந்தச் செயல்முறைகள் நன்மை பயக்கும்," என்று தரவுகளைப் பகுப்பாய்வு செய்த ஆய்வாளர் மிலோ ஸ்ட்ராதோஃப் விளக்குகிறார்.
கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஆய்வு எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால், மூளையில் நிகழும் முதன்மையான மாற்றங்கள் கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உளவியல் ஆரோக்கியத்தின் மீதான பாதிப்புகள்
முதல் மற்றும் இரண்டாவது கர்ப்பங்களில் ஏற்படும் மூளை மாற்றங்களுக்கும் தாயானவர்கள் அனுபவிக்கும் உளவியல் பிரச்னைகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
உலகளவில் சுமார் 10% கர்ப்பிணிகளும், புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களில் 13% பேரும் உளவியல் பிரச்னைகளை, குறிப்பாக மனச்சோர்வை அனுபவிக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு பெண்ணின் மூளையுடைய மேல் பகுதியான பெருமூளையின் வெளிப்புற அடுக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு, கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய பிரசவ மனச்சோர்வுடன் தொடர்பு இருப்பதாக ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவமனை மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு, இந்த மூளை மாற்றங்கள் பிரசவத்திற்குப் பிறகான அவர்களின் உளவியல் ஆரோக்கியத்துடன் தெளிவான தொடர்பைக் கொண்டுள்ளன.
ஆனால், இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு, இந்த மூளை மாற்றங்கள் கர்ப்ப காலத்திலான அவர்களின் உளவியல் ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
"முதல் கர்ப்பத்தின் போது மட்டுமல்ல, இரண்டாவது கர்ப்பத்தின் போதும் மூளையில் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நாங்கள் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளோம்," என்று பல்கலைக்கழக மருத்துவமனை மையத்தில் உள்ள கர்ப்பகால மூளை ஆய்வகத்தின் தலைவர் எல்செலின் ஹோயெக்ஸெமா கூறுகிறார்.
மேலும் விவரித்த அவர், "முதல் மற்றும் இரண்டாவது கர்ப்ப காலங்களின்போது, தாய்மார்களின் மூளை, ஒரே மாதிரியான மாற்றங்களையும் தனித்துவமான மாற்றங்களையும் ஒருசேர எதிர்கொள்கின்றன. ஒவ்வொரு கர்ப்பமும் பெண்ணின் மூளையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை விட்டுச் செல்கிறது," என்றார்.
இதுகுறித்து மேலதிக ஆய்வுகள் தேவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த முடிவுகள், பிரசவத்திற்குப் பிறகு சில பெண்களுக்கு மனச்சோர்வு ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவக்கூடும். அதோடு, இது தாய்மார்களுக்கான பராமரிப்பை மேம்படுத்த உதவும்.
"ஒரு பெண் தாயாகும் போது, அவரது மூளை எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்" என்கிறார் ஹோயெக்ஸெமா.
தேர்தல் 2026: சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு