You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாரணாசியில் படகில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக 14 பேர் கைது ஏன்?
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில் ஒரு படகில் நடைபெற்ற இஃப்தார் விருந்தின் போது இறைச்சி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசினார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை வாரணாசியில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த புகாரை வாரணாசியில் உள்ள பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் நகரத் தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் அளித்தார்.
கோத்வாலி காவல் உதவி ஆணையர் விஜய் பிரதாப் சிங் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை என்ன சொன்னது?
விஜய் பிரதாப் சிங் ஊடகங்களிடம் கூறுகையில், "மார்ச் 16 அன்று ஒரு வீடியோ வைரலானது, அதில் புனித கங்கை நதி நீரில் ஒரு படகில் சிலர் இஃப்தார் விருந்து கொண்டாடுவது காணப்படுகிறது. இந்த வீடியோவில் அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது போல் தெரிகிறது." என்றார்.
''இது தொடர்பாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல குழுக்கள் அமைக்கப்பட்டு இதுவரை 14 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய நபர்களையும் தேடி வருகிறோம்.'' என்றும் அவர் தெரிவித்தார்.
புகார்தாரர் என்ன கூறினார்?
வாரணாசியில் உள்ள பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் நகரத் தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால், புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"சில இஸ்லாமிய இளைஞர்கள் பிந்து மாதவ் தர்ஹாரா கோவிலுக்கு முன்னால் கங்கையில் இஃப்தார் விருந்து என்ற பெயரில் அசைவ உணவு சாப்பிட்டனர்." என்று குற்றம் சாட்டினார்.
"இஸ்லாமிய இளைஞர்கள் இறைச்சி சாப்பிட்ட விதம் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்".
"இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். நிர்வாகத்திடம் வீடியோ ஆதாரங்களை வழங்கியுள்ளோம், அதில் அவர்கள் அசைவ உணவை உண்பதும், கங்கையில் எலும்புகளை அதில் வீசுவதும் தெளிவாகத் தெரிகிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரணாசியின் அஞ்சுமன் இன்தேஜாமியா மசூதியின் இணைச் செயலாளர் எஸ்.எம். யாசின், படகில் நோன்பு திறப்பதைக் கண்டித்துள்ளார்.
''சில இளைஞர்கள் படகில் நோன்பு திறப்பது தெரியவந்தது. இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. இது முற்றிலும் ஒரு மதம் சார்ந்த செயலே தவிர, சுற்றுலா அல்ல.'' என அவர் கூறியுள்ளார்
மேலும் பேசிய அவர், "நிச்சயமாக, இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று குற்றம் சாட்டினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு