You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொச்சி துறைமுகத்தில் இரான் போர்க்கப்பலுக்கு அடைக்கலம் தந்த இந்தியா - என்ன நடந்தது?
இரானின் ஐஆர்ஐஎஸ் லாவன் (IRIS Lavan) கப்பல், கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. 2026 சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்கேற்க இந்த கப்பல் இந்தியா வந்திருந்தது.
இலங்கையின் தெற்கில் இரானின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பே, ஐஆர்ஐஎஸ் லாவன் போர்க்கப்பலைப் பற்றி இரான் இந்தியாவிடம் உதவி கேட்டது என இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பிப்ரவரி 28 அன்று, அந்த கப்பலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கொச்சி துறைமுகத்தில் நிறுத்த இந்தியாவிடம் இரான் அனுமதி கேட்டது என்றும், மார்ச் 1 அன்று இந்தியா அந்த கோரிக்கையை அங்கீகரித்தது என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
''அதன்பின் அந்த போர்க்கப்பல் மார்ச் 4 அன்று கொச்சி வந்தது. அந்த கப்பலில் இருந்த 183 பணியாளர்கள் தற்போது கொச்சியில் உள்ளனர்.''
இரான் கப்பலுக்கு அனுமதி கொடுத்தது மனிதாபிமான ரீதியிலாக எடுக்கப்பட்ட முடிவு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்தார்.
லாவன் கப்பல் குறித்து வலைதளத்தில் செய்தி வெளியிட்ட தி இந்து, 'பழுதுபார்க்கும் பணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் வரை, அந்தக் கப்பல் கொச்சியில் சில காலம் இருக்க வாய்ப்புள்ளதாக வட்டாரம் தெரிவித்தது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (மார்ச் 7) காலை, மாட்டஞ்சேரி படகு துறைமுகம் அருகே உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர், இரான் கப்பலைப் பார்வையிடத் திரண்டிருந்தனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்க கடற்படை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐஆர்ஐஎஸ் லாவனை, 2500 டன் எடைகொண்ட ஹெங்காம் ரக தரையிறக்கக் கப்பல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய்ஷங்கர் கூறியது என்ன?
டெல்லியில் நடந்த 'ராய்சீனா டயலாக் 2026' (Raisina Dialogue) கருத்தரங்கில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், "இந்திய கடல் எல்லைக்கு அருகே இருந்ததாகக் கருதப்பட்ட ஒரு கப்பல் சில பிரச்னைகள் காரணமாக நம் துறைமுகத்துக்கு வரவேண்டும் என்று இரான் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த செய்தி 28-ம் தேதி (பிப்ரவரி) வந்தது என்று நினைக்கிறேன்.
''மார்ச் 1-ம் தேதி தாங்கள் அதற்கு அனுமதி கொடுத்தோம். ஒரு சில நாள் பயணத்துக்கு பின் அவர்கள் கொச்சி வந்தனர்''
மேலும் பேசிய அவர், "இந்த கப்பல்கள் இங்கு வந்த சூழ்நிலையே வேறானது. அவை, சர்வதேச கடற்படை அணிவகுப்புக்காக வந்தவை. பின்னர் நடந்த சூழ்நிலையில் அவை மாட்டிக்கொண்டன. ஒரு கடினமான சூழ்நிலையில் அவர்கள் இங்கே வரவேண்டும் என்று கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் அதுதான் சரியான முடிவு என்று நினைக்கிறேன். அந்த கொள்கையைத்தான் நாம் பின்பற்றியிருக்கிறோம்.
ஒரு கப்பல் இலங்கையில் அதே சூழ்நிலையில்தான் இருந்தது. இலங்கை அதற்கேற்ப ஒரு முடிவு எடுத்தது. இன்னொரு கப்பல்தான் துருதிருஷ்டவசமாக அந்த முடிவை எட்டியது. சட்டரீதியாக இல்லாமல் நாங்கள் மனிதாபிமான ரீதியாக யோசித்தோம். சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்" என்றும் தெரிவித்தார்.
மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் தேனா
மார்ச் 4, புதன்கிழமை அன்று அமெரிக்கா ஒரு வீடியோவை வெளியிட்டு, இந்தியப் பெருங்கடலில் இரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாகத் தெரிவித்தது.
பிபிசி சிங்கள மொழிச் சேவைக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதல் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தெற்கு இலங்கை நகரமான காலி அருகே நடந்தது.
மார்ச் 6 வரையிலான தகவலின்படி 32 மாலுமிகள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 84 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கூற்றுப்படி, இந்த கப்பலின் பெயர் 'தேனா'. இதில் சுமார் 130 மாலுமிகள் இருந்தனர்.
இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் வந்திருந்தது என்றும், எந்த எச்சரிக்கையும் இன்றி இது மூழ்கடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-ல் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , "ஆனால் பிரதமர் மோதியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த கோழைத்தனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோதியின் சமரசம் இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
முன்னாள் ராஜீய அதிகாரி கே.சி.சிங், அராக்சியின் பதிவைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் "மௌனம் என்பது ராஜீய நடவடிக்கை அல்ல. இந்தியா தொடர்ந்து மூலையில் தள்ளப்படுகிறது. இந்தியாவின் மறைமுக ஆதரவை அமெரிக்கா மதிக்கும் என்று பாஜக நினைத்தால், நேட்டோ அமெரிக்காவுக்கு ஒருபோதும் உதவவில்லை என்று டிரம்ப் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பல நேட்டோ உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானில் போரிட்டுத் தங்கள் வீரர்களை இழந்த பிறகும் இது சொல்லப்பட்டது," என்று எழுதியுள்ளார்.
"நமது 'மிலன்' பயிற்சியில் பங்கேற்க இரானியக் கப்பலை நாம் அழைத்திருக்காவிட்டால், அது அங்கு இருந்திருக்காது. இந்தப் பயிற்சியின் நெறிமுறைகளின்படி, கப்பல்கள் எந்த வெடிமருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இரானியக் கப்பல் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை. இரானியக் கடற்படை வீரர்கள் நமது குடியரசுத் தலைவர் முன்னிலையில் அணிவகுப்பு கூட நடத்தினர். இரானியக் கப்பல் பயிற்சியில் பங்கேற்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், லாவன் கப்பல் இந்தியாவில் நங்கூரமிட அரசு அனுமதி கொடுத்த செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.
இன்னொரு கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை
ஐஆர்ஐஎஸ் புஷெர் (IRIS Bushehr) என்ற இரானிய கப்பல், அதன் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்ததால் இலங்கையின் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த புதன்கிழமை (மார்ச் 4) அனுமதி கோரியிருந்தது.
பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு வடகிழக்கு துறைமுகம் ஒன்றில் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்தது, "மனிதநேயத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார தெரிவித்தார்.
அந்தக் கப்பலில் இருந்த சுமார் 204 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு