வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அலுவலகங்களை திறக்க முயற்சி - உணர்த்துவது என்ன?

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, ஆங்காங்கே அவாமி லீக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கட்சி அலுவலகங்களுக்குள் நுழைய முயல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் அவர்கள் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் கட்சியின் உத்தரவின் பேரில் இவ்வாறு செய்கிறார்களா அல்லது தன்னிச்சையாகச் செய்கிறார்களா, அல்லது இதன் பின்னணியில் ஆளும் பிஎன்பி ஜமாத்-இ-இஸ்லாமி அல்லது வேறு எவருடனாவது ஏதேனும் ஒப்பந்தம் உள்ளதா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

2024 ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட பிறகு, பேராசிரியர் முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம் அவாமி லீக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. இதனால், அண்மையில் நடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியவில்லை.

இருப்பினும், தேர்தல் முடிந்த உடனேயே டாக்கா உள்ளிட்ட பல இடங்களில் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவாமி லீக் அலுவலகங்களைத் திறந்தனர் அல்லது அவற்றுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

சில இடங்களில், அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கு எதிர்வினையாக தாக்குதல்களும் நடைபெற்றன. இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது தலைமறைவாக இருக்கும் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் ஏ.எஃப்.எம். பஹாவுதீன் நசீம், "கட்சி அலுவலகத்திற்குத் தடை விதிக்கப்படவில்லை அல்லது பறிமுதல் செய்யப்படவில்லை, எனவே கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று கருதுகிறார்.

"இதில் எந்த உத்தரவோ அல்லது உடன்பாடோ இல்லை. தொண்டர்களும் ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்திற்குச் செல்வது இயல்பானது. முகமது யூனுஸின் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறிய பிறகு, நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், அனைவருக்கும் சாதாரண அரசியல் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருக்கும் என்றும் நம்பி தொண்டர்களும் ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்திற்குச் செல்கிறார்கள் அல்லது செல்ல விரும்புகிறார்கள்," என்று அவர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

கட்சியின் அறிவுறுத்தலா அல்லது சொந்த முயற்சியா?

"சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (வங்கதேசம்) வங்கதேச அவாமி லீக் மற்றும் அதன் அனைத்து இணை அமைப்புகள், சார்பு நிறுவனங்கள் மற்றும் சகோதர அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதான விசாரணை முடியும் வரை, வங்கதேச அவாமி லீக் மற்றும் அதன் அனைத்து இணைப்பு அமைப்புகள் மற்றும் சகோதரத்துவ அமைப்புகளின் வெளியீடுகள், பிரசாரங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன" என்று அவாமி லீக்கை தடை செய்யும் அறிவிப்பு கூறுகிறது.

இருப்பினும், யூனுஸ் அரசாங்கத்தின் போது கூட, டாக்கா உட்பட பல்வேறு இடங்களில் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அவ்வப்போது 'திடீர் ஊர்வலங்களை' நடத்தினர்.

கூடுதலாக, கட்சி உறுப்பினர்கள் பலரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர் அல்லது பிரசாரம் செய்கின்றனர்.

13-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, சமூக ஊடகங்களில் அவர்கள் மேற்கொண்ட 'நோ போட், நோ வோட்' பிரச்சாரமும் பலரது கவனத்தை ஈர்த்தது.

சத்ர லீக் (அவாமி லீக்கின் மாணவர் அமைப்பு) தொண்டர் ரிஹான் சர்தாரால் ஆகஸ்ட் 2024 முதல் தனது சொந்த மாவட்டத்தில் வசிக்க முடியவில்லை.

அதன்பிறகு டாக்காவில் தனது சொந்த முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட திடீர் ஊர்வலங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக அவர் கூறினார்.

கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகவும், அதில் நாடு முழுவதும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கட்சி அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அனைவரையும் அவர் வலியுறுத்தியதாகவும் ரிஹான் சர்தார் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

"அடிப்படையில், அன்றிலிருந்து இந்த முயற்சி எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது. அது தனிப்பட்டதாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கு ஏற்ப இதற்குப் பங்களிக்கின்றனர்" என்று அவர் கூறுகிறார்.

பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தி அடிமட்டத் தலைவர்களுடன் ஷேக் ஹசீனா நடத்தும் வழக்கமான கலந்துரையாடல்களின் போது, அலுவலகங்களுக்குச் செல்வது தொடர்பாக இந்த ஆலோசனையை வழங்கியதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாக்கா பல்கலைக்கழக சமூகவியல் துறைப் பேராசிரியர் ஏ.கே.எம். ஜமால் உதீன், பிப்ரவரி 15 அன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தாக்கப்பட்டார். ஆனால் இது தொண்டர்களுக்குச் சற்றே ஊக்கமளித்துள்ளதாக ரிஹான் சர்தார் நம்புகிறார்.

இது குறித்து கேட்டபோது, கட்சி அலுவலகத்திற்குச் செல்ல எந்தத் தடையும் இல்லாததால், ஒரு கட்சியாகத் தாங்கள் தொண்டர்களை ஊக்குவிப்பதாக பஹாவுதீன் நசீம் கூறினார்.

"அவாமி லீக் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி, அலுவலகத்திற்குச் செல்வது கட்சித் தொண்டர்களின் அரசியல் உரிமையாகும்," என்று அவர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

பஞ்ச்கர் பகுதியில் தொடங்கிய நடவடிக்கைகள்

தேர்தலுக்கு அடுத்த நாள், பஞ்சகர் பகுதியில் உள்ள அவாமி லீக் கட்சி அலுவலகம் உள்ளூர் பிஎன்பி தலைவரின் முன்னிலையில் திறக்கப்படும் வீடியோ வைரலாகி, சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது.

இருப்பினும், பஞ்சகர் சதர் உபாசிலா பிஎன்பி தலைவர் அபு தாவூத் பிரதான், அந்த அலுவலகம் அவாமி லீக்கிற்குச் சொந்தமானது என்பது தமக்குத் தெரியாது என்று பின்னர் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் சந்த்பூர், தாகுர்கான், சத்கிரா, பர்குனாவில் உள்ள பெடகி, பதுகாளியில் உள்ள தசமினா மற்றும் குல்னா ஆகிய இடங்களில் உள்ள துணை மாவட்ட அலுவலகங்களுக்கு வெளியே அவாமி லீக் தலைவர்களும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நாராயணகஞ்ச், ஷரியத்பூர், நோகாலி, ஜமால்பூர் ராஜ்பாரி மற்றும் பல பகுதிகளில், மாவட்ட, துணை மாவட்ட மற்றும் வட்டார அளவில் மூடப்பட்டிருந்த சில அலுவலகங்களை மீண்டும் திறந்த பிறகு சுத்தம் செய்து, முழக்கங்களை எழுப்பினர் என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சில இடங்களில் அலுவலகங்களைத் திறந்த பிறகு, எதிர்க்கட்சித் தொண்டர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய அல்லது அலுவலகங்களை மூடிய சம்பவங்களும் நடந்துள்ளன.

வியாழக்கிழமையன்று மைமென்சிங்கின் தாராகண்டாவில் அவாமி லீக் கட்சி அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர், பாகுபாடு எதிர்ப்பு மாணவர் இயக்கம் மற்றும் தேசிய குடிமக்கள் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அலுவலகத்திற்குள் கார் டயர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்று உள்ளூர் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, டாக்காவில் உள்ள கட்சியின் மத்திய அலுவலகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அவாமி லீக் மற்றும் அதன் இணை அமைப்புகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டன அல்லது தீ வைக்கப்பட்டன.

வங்கதேசத்தின் நிறுவனத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'தன்மோண்டி 32' இல்லமும் இடிக்கப்பட்டது.

தாக்குதல்களுக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள தனது கட்சி அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாக பஹாவுதீன் நசீம் கூறுகிறார். இடைக்கால அரசு பதவி விலகியதும் அந்த ஆக்கிரமிப்பாளர்களும் வெளியேறியதாக அவர் நம்புகிறார். அதனால் தற்போது அலுவலகங்களை மீண்டும் கைப்பற்றும் நிலைமை உருவாகியுள்ளது என அவர் கூறுகிறார்.

பிப்ரவரி 14 அன்று, வங்கதேசப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, சில அவாமி லீக் தலைவர்களும் தொண்டர்களும் கட்சியின் மத்திய அலுவலகத்தின் முன் சிறிது நேரம் நின்று தேசியக் கொடியை அசைத்தனர்.

பிப்ரவரி 20 அன்று, தன்மோண்டியில் உள்ள கட்சித் தலைவரின் அரசியல் அலுவலகமாகப் பயன்படுத்தப்படும் கட்டிடத்தின் முன்னால், சில பெண் தொண்டர்கள் தேசியக் கொடியை அசைத்து முழக்கங்களை எழுப்பும் வீடியோ ஊடகங்களில் வெளியானது.

தேர்தலுக்குப் பிறகு அவாமி லீக் அலுவலகங்கள் திறக்கப்பட்டது குறித்துத் தகவல்கள் வெளியான பல இடங்களில், உள்ளூர் பிஎன்பி தலைவர்களின் ஒத்துழைப்பு குறித்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் சுபைதா நஸ்ரின் கூறுகிறார்.

மேலும், "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது, இப்போது அவர்களுக்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். முந்தைய அரசாங்கம் அவாமி லீக்கை தேர்தலிலிருந்து விலக்கி வைத்திருந்தது. கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் நாட்டிலேயே உள்ளனர், அவர்களில் பலர் சிறையில் உள்ளனர்," என்று கூறினார்.

மேலும், "அரசியல் நிலைத்தன்மையின் நலன் கருதி கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டாலோ அல்லது சாதாரண அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டாலோ அது ஒட்டுமொத்தமாக நேர்மறையான நடவடிக்கையாக இருக்கும்," என்றும் அவர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

டாக்கா பல்கலைக்கழகப் பேராசிரியரும் மற்றொரு ஆய்வாளருமான முகமது முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அலுவலகங்களைத் திறப்பதன் மூலம் அவாமி லீக்கின் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் செயல்முறை தொடங்கியிருக்கும் என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "முந்தைய அரசாங்கம் அவாமி லீக்கின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது மற்றும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆனால் இதற்காக அந்த கட்சி எப்போதும் தடை செய்யப்பட்டே இருக்கும் என்று அர்த்தமல்ல" என்றும்,

"அவாமி லீக் இடைக்கால அரசாங்கத்தை ஏற்கவில்லை, ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் நிராகரிக்கவில்லை. மேலும், பல்வேறு கட்சிகள் சாதாரண அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிஎன்பி வாய்ப்புகளை வழங்கிய உதாரணங்கள் உள்ளன," என்றும் அவர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு