இலங்கை: மாவீரர் தின அனுசரிப்பில் பிரபாகரன் படத்தை பயன்படுத்தியவர்கள் மீது விசாரணை

பட மூலாதாரம், STR

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி மாவீரர் தினத்தை அனுசரித்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

படக்குறிப்பு, அமைச்சர் ருவன் விஜேவர்தன

வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி மாவீரர் தினத்தை அனுசரித்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் பல பகுதிகளில் நேற்று (திங்கள்கிழமை) மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.

இவ்வாறு நடைபெற்ற நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :