நிர்பயா வல்லுறவு குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ம் தேதி தூக்கு - டெல்லி நீதிமன்றம் ஆணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி பாட்டியாலா இல்ல நீதிமன்றம்.

2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா ஆகிய நான்கு பேருக்கும் இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கில் இடப்படுவதை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களில் ஒவ்வொருவராக தங்களுக்கு முன் உள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி மரண தண்டனையில் இருந்து தப்ப முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இவர்களில் நான்காவது குற்றவாளியான பவன் குப்தாவுக்கு சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கும், கருணை மனு தாக்கல் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தண்டனை நாளுக்கு முன்பாக இவற்றில் ஒன்றை அவர் பயன்படுத்துவார் என்று இந்த வழக்கை கூர்ந்து நோக்குகிறவர்கள் கணிக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் தூக்கில் இடுவதற்கு ஏற்கெனவே இரண்டு முறை தேதி குறிப்பிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சட்டக் காரணங்களுக்காக இரண்டு முறையும் தூக்கு ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான்கு குற்றவாளிகளுக்கும் ஒன்றாகவே தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :