சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை: விசாரணை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

சபரிமலையில் பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் வழிபட அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீதான மறுசீராய்வு மனு குறித்து பெரிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று இந்த மேல் முறையீட்டு மனுமீதான வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக இருந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மாதவிடாய் ஏற்படும் வயதினர் என்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வயது வேறுபாடு இல்லாமல் எல்லா வயதுப் பெண்களும் இந்தக் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

பட மூலாதாரம், Getty Images

இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீது, இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக இருந்தது.

இந்நிலையில் மறு சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவை வெளியிட்டுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் இந்தக் கோயில் தொடர்புடையது மட்டுமல்ல. பெண்களை மசூதிகளில் அனுமதிப்பதையும் உள்ளடக்கியது என்று பெரும்பான்மை தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அது இறுதியானது. எல்லோரையும் கட்டுப்படுத்தக்கூடியது. ஒருங்கிணைந்த முறையில் தீர்ப்பை மீற செய்யப்படும் முயற்சிகள் உறுதியாக முறியடிக்கப்படவேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு" என்று தமது உத்தரவில் தெரிவித்துள்ளார் நாரிமன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :