ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் விண்ட்சர் கோட்டைக்கும் உள்ள சிறப்புத் தொடர்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மேற்கே 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள விண்ட்சர் கோட்டை, அரச மாளிகை மட்டுமின்றி சிறந்த சுற்றுலா பகுதியாகவும் திகழ்கிறது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை காலையில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விண்ட்சர் கோட்டையில் குடும்பச் சேவையுடன் நிறைவடைந்தது.

இந்த அரச அரண்மனை ராணியின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்த ஒரு கட்டடமாக விளங்கியது. அத்துடன் அவர் வேலை செய்யும் இடமாகவும் தனிப்பட்ட வெற்றிகளை கொண்டாடிய நினைவையும் தாங்கி நிற்கிறது.

விண்ட்சர் கோட்டையுடன் ராணியின் சிறப்பு தொடர்பு, அவர் மழலைக் காலம் முதலே தொடங்கியது.

அப்போது இளவரசியாக இருந்தார் எலிசபெத். அவரது குடும்பத்தினர் இந்த அரச மாளிகையான விண்ட்சர் எஸ்டேட்டில் ஒரு மாளிகையை நிறுவி அதை தங்களுடைய வார இறுதி நாட்களை கழிக்கும் ஓய்விடமாக மாற்றினர்.

ஒரு நெருங்கிய உறவாக வளர்ந்த இவர்களின் குடும்பம், 1930கள் முழுவதும் அவரது தந்தை அரியணை ஏறியவுடன் ஐரோப்பா உலக போரில் இறங்கிய காலகட்டத்தில் தனது சகோதரியுடன் இங்குதான் இளவரசி எலிசபெத் தமது தனிமையை ரசித்து ஆடிப்பாடி விளையாடினார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, இரண்டாம் உலக போர் காலத்தில் விண்ட்சர் கோட்டையில் இருந்தபடி தேசத்துக்கு செய்தி சொல்லும் இளவரசி எலிசபெத்

ராணிக்கு அப்போது 14 வயது. இரண்டாம் உலகப் போரின் பெரும்பகுதி காலத்தில் அவர் மார்கரெட்டுடன் சேர்ந்து இந்த கோட்டைக்கே அனுப்பப்பட்டார், அதே நேரத்தில் லண்டனில் உள்ள அவரது வீடு நாஜி ஜெர்மனியால் குண்டு வீசப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் இருந்தபடி வானொலி உரை நிகழ்த்தினார் எலிசபெத். போரினால் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிச்சயமற்ற மற்றும் தொந்தரவான நேரங்களை எதிர்கொண்டு வந்த இளம் வயதினருக்கு துணிச்சலை ஊட்ட, அந்த ஒலிபரப்பை அவர் பயன்படுத்தினார்.

கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளாக இந்த கோட்டையில் 40 மன்னர்கள் தொடர்ந்து வசித்து வந்தனர்.

தனக்கு முன் சென்றவர்களைப் போலவே, இளம் இளவரசி எலிசபெத் தனது மிகவும் சவாலான அரச கடமைகளில் சிலவற்றை மேற்கொள்வதற்கான அமைப்பாகவும் தான் ரசித்த இடமாகவும் இந்தக் கோட்டை இருப்பதைக் கண்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்ட்சர் கோட்டையில் ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன.

தனது 16வது பிறந்தநாளின் காலையில், மைதானத்தில் நடந்த அணிவகுப்பின் போது ராணுவப் படைப்பிரிவை முதன் முதலாக எலிசபெத் ஆய்வு செய்தார்.

ஆனால் அவரது புதிய கடமையில் இருந்து சற்றே விலகி வர, இந்த கோட்டை அவருக்கு ஒரு பிரியமான வீடாக இருந்தது.

1,000 அறைகள், 13 ஏக்கர் (ஐந்து ஹெக்டேர்) மைதானம் மற்றும் கோதிக் (12-16 நூற்றாண்டு) கால கட்டடக்கலைக்கு மத்தியில் இந்த கோட்டையின் எல்லா இடங்களும் அதன் வளமான வரலாற்றை நினைவூட்டுகிறது. இதனால் ராணி இந்த இடத்தை ஒரு சரணாலயமாக பார்த்ததில் ஆச்சரியமில்லை.

இது அவரது ஆளுகை காலம் முழுவதும் வெளிநாட்டு மன்னர்கள், பல நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் மற்றும் பிரதமர்களுக்கு விருந்தளித்து கெளரவித்தது.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 2008இல் விண்ட்சர் கோட்டையில் ஆடம்பர அரசு முறையிலான விருந்துகளை நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத்.

அந்த விருந்தினர்கள் வழக்கமாக நான்காம் ஜார்ஜ் நுழைவாயில் வழியாக குதிரைகள் பூட்டிய சாரட்டில் கோட்டைக்குள் அழைத்து வரப்படுவார்கள். பின்னர் 160 விருந்தினர்களுக்கான இருக்கையுடன் 55.5 மீ (182 அடி) பெரிய மேஜையில் அமர்ந்து அவர்கள் ராணியின் விருந்து உபசரிப்பில் களிப்பார்கள்.

விண்ட்சர் கோட்டையின் மகத்துவமும், அரச ஆடம்பரத்தையும் பாரம்பரியத்தையும் பேணுவதில் அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உலகப் புகழ்பெற்றது.1992ஆம் ஆண்டு நவம்பரில் இந்த கோட்டையில் இருந்து பல மைல் தூரத்துக்கு புகை கிளம்பியபோது அது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ராணி, எப்போதும் உணர்ச்சியை அடக்கிக் கொள்வதில் நிகரற்றவராக அறியப்படுபவர். ஆனால், அன்றைய தினம் அவர் ஆதரவற்றவராக எரியும் தமது வீட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 1992 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது வீடு எரிவதை நிராதரவாகப் பார்த்து கவலைப்படும் ராணி இரண்டாம் எலிசபெத்.

அரச குடும்பத்துக்கு அமைதியற்ற ஒரு வருட துக்கமாக அது இருந்தது. ராணி தனது பிள்ளைகள் கொண்டிருந்த பல்வேறு உறவுகள் மற்றும் திருமண பிரச்னைகளால் வருத்தமடைந்திருந்தார். அவர்களைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் விரிவாக வெளிவந்த காலகட்டம் அது.

பல வாரங்களுக்குப் பிறகு, தனது நாற்பது வருட ஆளுகையைக் குறிக்கும் ரூபி ஜூபிலி உரையின் போது, "1992ஆம் ஆண்டு தாம் மகிழ்ச்சியுடன் திரும்பிப் பார்க்கும் ஆண்டு அல்ல" என்று ராணி பேசினார்.

"எனது மிகவும் அனுதாபம் மிக்க நிருபர்களில் ஒருவரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அது ஒரு வருடாந்திர கொடூரமாக மாறிவிட்டது," என்று ராணி அழைத்தார். லத்தீன் குறிப்பில் ராணி குறிப்பிட்ட வார்த்தைக்கு "பயங்கரமான ஆண்டு" என்று பொருள். ராணி பொதுவில் அரிதாகக் காட்டிய நேர்மை மற்றும் உணர்ச்சியின் ஒரு வெளிப்பாடாக அந்த நிகழ்வு அமைந்தது.

படக்குறிப்பு, இந்த கோட்டையை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆயின

உலகின் மிகப்பெரிய மக்கள் வசிக்கும் கோட்டைக்கு ஏற்பட்ட சேதம் விரிவானது. பல வருடங்கள் கழித்து அது முழுமையாக பழைய நிலைக்கு திரும்பியது.

எவ்வாறாயினும், அது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகத் தொடர்ந்தது. 2011இல், ராணி மீண்டும் கோட்டையை தனது முக்கிய வசிப்பிடமாக மாற்ற முடிவு செய்தார்.

வெகு சமீபமாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த கோட்டையை தமது நிரந்தர வீடாகவே ராணி மாற்றியிருந்தார். விண்ட்சர் கோட்டை இருந்துதான், போர் காலத்தில் ராணி நாட்டுக்கு உரையாற்றுவார். இங்குதான் தமது வாழ்நாள் முழுவதும் அதிக நேரத்தை அவர் செலவிட்டார். அதுவே இப்போது அவருக்கு நிரந்தர இறுதி ஓய்வு இடமாக இனி இருக்கும்.

சுமார் 800 விருந்தினர்கள் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் கடைசி பிரியாவிடை சேவைக்காக கூடினர்.

"வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகளை விட சிறிய அளவில் இந்த சேவை நடந்தாலும் இது மிகவும் நெருக்கமானது" என்று விண்ட்சர் கோட்டையில் இருந்து பிபிசியின் அரச விவகாரங்கள் தொடர்பான செய்திகளை வழங்கும் செய்தியாளர் டேனிலா ரெல்ஃப் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்ட்சர் கோட்டை ஒரு டஜனுக்கும் அதிகமான அரசர்கள் மற்றும் ராணிகளின் நிரந்தர துயில் கொள்ளும் இடமாக விளங்குகிறது.

"சமீப ஆண்டுகளில், செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் அவர் கோட்டையில் வாழ்ந்த ஆண்டுகளில் ஸ்காட்லாந்தின் குயின்ஸ் பாரிஷ் தேவாலயத்திற்கு நிகராக மாறிப்போனது.

இங்குதான் அவர் ஈஸ்டரில் பிரார்த்தனை செய்தார். தமது ஆளுகையின் போது பலருக்கும் ஞானஸ்நானம், உறுதிப்படுத்தல் மற்றும் திருமணங்களைக் கொண்டாடினார். கணவர் இளவரசர் ஃபிலிப்பிற்கு இங்குதான் அவர் இறுதி பிரியாவிடை கொடுத்தார்.

சஸ்ஸெக்ஸ் கோமகன் மற்றும் சீமாட்டியான இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோரின் திருமணம் 2018இல் இங்குதான் நடைபெற்றது.

கடைசியாக, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் ஒரு பகுதியான நான்காம் ஜார்ஜ் நினைவு தேவாலய அரச பெட்டகத்தில் ராணி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், மறைந்த கணவர் எடின்பரோ கோமகனும் ராணியுடனேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்டுரை எழுதியவர்: டோபி வேடி, பிபிசி நியூஸ் ஆன்லைன்.

காணொளிக் குறிப்பு, ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டிக்கு காவல் நின்ற இளவரசர்கள்