கொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? - முட்டாள்தனம் என்று கூறும் ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனாவுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா?

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் 5ஜி இணையத்துக்கும் தொடர்பு உள்ளது என வேகமாகப் பரவும் தகவல்களை 'முட்டாள்தனமானது' என்கிறார்கள் ஆய்வாளர்கள். 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால்தான் வைரஸ் உருவானது. இதனால்தான் பரவுகிறது எனப் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், யு-ட்யூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

இப்படியான தகவல்களை உண்மையென நம்பி பிரிட்டனில் செல்ஃபபோன் டவர்களை தாக்கி, தீயிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களையும் தாக்கி உள்ளனர். இதனை அடுத்து களத்தில் இறங்கிய பிரிட்டன் அரசு, இவ்வாறான தகவல்கள் பொய்யானவை என்றும், இப்படியான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தங்கள் தளத்தில் உள்ள இவ்வாறான தகவல்களை நீக்கத் தொடங்கி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: 571ஆக உயர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் இன்று (மார்ச் 5) ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதால், மாநிலத்தில் தற்போது கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 86 பேரில் 85 நபர்கள் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்வில் பங்குபெற்றவர்கள் என்றும் ஒருவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பியவர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்: டெல்லி சமய நிகழ்வில் பங்கேற்ற 8 மலேசியர்கள் கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,662ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 179 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா கிருமித் தொற்றால் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கை 1,005 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 90 பேர் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ்: மின் விளக்குகளை அணைத்து, அகல் விளக்கை ஒளிர செய்த மக்கள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் மோதி கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்ற மக்கள் அதை நாடு முழுவதும் செயல்படுத்தினர்.

வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்த மக்கள், பிறகு அகல் விளக்குகளையும், டார்ச் விளக்குகளையும் ஒளிர செய்தனர்.

கொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் இருந்து 1,200 கி.மீ தூரம் நடைபயணமாக தமிழகம் வந்த இளைஞர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏழு இளைஞர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு நடந்தே வந்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட அவர்கள், நேற்று (சனிக்கிழமை) மதியம் திருச்சி வந்தடைந்தனர். பின்னர் திருச்சியிலிருந்து அரசு உதவியுடன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: