ஹூவாவே - அமெரிக்கா மோதல்: தொழில்நுட்ப யுக்திகளை திருடியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட பல தசாப்தக் காலங்களாக ஹூவாவே முயற்சி செய்து வருகிறது என மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க நிறுவனங்களிடம் கூட்டணி நிபந்தனைகளை ஹூவாவே மீறிவிட்டதாகவும், ரோபோட் தொழில்நுட்பம் மற்றும் சோர்ஸ் கோட் (Source code)போன்ற வர்த்தக ரகசியங்களை திருடியதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் ஹூவாவே நிறுவனத்தின் மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

அதில் ஹூவாவே அமெரிக்க கட்டுப்பாடுகளை மீறுவதாகவும், (T series) அலைப்பேசியிலிருந்து தொழில்நுட்பத்தை திருடியவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனம் மறுக்கிறது.

உலகின் மிகப்பெரிய அலைப்பேசி தயாரிப்பாளர்களாக இருக்கும் ஹூவாவே நிறுவனம், தங்களின் விரிவாக்கம் அமெரிக்க வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அமெரிக்கா தங்களை இலக்கு வைப்பதாக தெரிவித்துள்ளது.

'இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்

பட மூலாதாரம், Getty Images

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற நாடுகளில் நிதியமைச்சர் என்று சொல்லப்படும் பதவிக்கு இணையானது. இந்தப் பதவியில் இருந்து வந்த சஜித் ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்வலைகளை உருவாக்கினார். அவருடைய உதவியாளர் குழுவை பதவி நீக்கும்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். இதையடுத்து, "சுயமரியாதையுள்ள எந்த அமைச்சரும் இந்த நிபந்தனையை ஏற்க முடியாது" என்று கூறி தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

நான்கு வாரத்தில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.

இந்தியா - சீனா போரால் முறிந்த ரத்தன் டாட்டாவின் காதல் ரோஜா

பட மூலாதாரம், HOB/FB

சமூக வலைத் தளத்தில் அதிகம் பேசப்படுபவர்களில் ஒருவராக இருக்கிறார் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. ஹுமன்ஸ் ஆஃப் பாம்பே என்னும் வலைத்தளத்துடனான அவரது உரையாடலின்போது ரத்தன் டாடா தன் மிகவும் அந்தரங்கமான வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவருக்கு ஏற்பட்ட காதல், அந்த காதல் திருமணம் வரை சென்றது மற்றும் அவரது பெற்றோரின் மண முறிவால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் என சில விஷயங்கள் குறித்து கூறியுள்ளார்.

இத்துடன் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் வாங்க முடியுமா?

பட மூலாதாரம், ANI

டெல்லியில் நடைபெற்ற 15வது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், உள்நாட்டைச் சேர்ந்த மகிந்த்ரா கார் தயாரிப்பு நிறுவனம் eKUV100 என்ற மினி SUV மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.25 லட்சம் அல்லது 11,600 டாலருக்கும் சற்று அதிகம்.

தனிநபர்களுக்கான மிகவும் குறைந்த விலையிலான மின்சார காராக இது உள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Nexon EV வாகனம் ரூ.14 லட்சம் அல்லது 20,000 டாலர் என இதற்கடுத்த நிலையில் குறைந்த விலை மின்சார காராக உள்ளது.

ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் தயாரிப்பதற்கான உரிமையை வைத்திருக்கும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், தன்னுடைய மின்சார கார்கள் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறது.

பின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம்: கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு

பட மூலாதாரம், ANADOLU AGENCY / GETTY IMAGES

படக்குறிப்பு, துருக்கியில் காவல் பணியில் 11 ஆண்டுகள் இருந்து ஓய்வு பெற்ற பெல்ஜியன் மலீன்வா வகை நாய். (கோப்புப்படம்)

அல்-கய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவின் 'சீல்' படையினருக்கு உதவிய நாய் இனத்தை கொல்கத்தா மாநகர காவல்துறை தங்கள் மோப்ப நாய்கள் குழுவில் சேர்க்கவுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது பி.டி.ஐ செய்தி நிறுவனம்.

பாகிஸ்தானில் உள்ள அபோத்தாபாத்தில் அமெரிக்க படைகளால் ஒசாமா பின் லேடன் 2011இல் கொல்லப்பட்டார்.

பெல்ஜியன் மலீன்வா என்னும் வகையைச் சேர்ந்த இந்த நாய்கள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: