மகளை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற செய்ய 10 லட்சம் லஞ்சம் வழங்கிய ஹாலிவுட் நடிகைக்கு சிறை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

கல்லூரி சேர்க்கை தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிரபல ஹாலிவுட் நடிகை பெலிசிட்டி ஹப்மானுக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தனது மகள் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை ரகசியமாக எழுத வைத்து, அதிக மதிப்பெண்கள் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறைரீதியிலான அதிகாரிகளுக்கு 15,000 அமெரிக்க டாலர்கள் பெலிசிட்டி ஹப்மானால் கையூட்டாக வழங்கப்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி, பெலிசிட்டி 14 நாட்கள் சிறையில் கழிக்க வேண்டுமென்றும், 250 மணிநேரங்கள் சமுதாய சேவையில் ஈடுபடுவது மட்டுமன்றி, 30,000 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென்றும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters

"என்னுடைய செயற்பாட்டிற்கு எவ்வித சாக்குப்போக்கு அல்லது நியாயப்படுத்தல்களை முன்வைக்க விரும்பவில்லை. இந்த தருணத்தில் நான் மீண்டும் எனது மகள், கணவர், குடும்பத்தினர் மற்றும் கல்வித்துறையை சேர்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

எனது செயலை தெரிந்துகொண்ட என் மகள், 'நீங்கள் என்னை நம்பவில்லையா? என்னால் சாதிக்க முடியுமென்று நீங்கள் நினைக்கவில்லையா?' என்று கேட்டார். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை" என்று பெலிசிட்டி ஹப்மான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஆணை தெரிவிக்கிறது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் தேர்வாகாத மாணவர்களுக்கு தேர்வு முடிவான நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் வழிவகை செய்யப்பட்டது.

பேனர் விபத்தில் பறிபோன உயிர், நொறுங்கிப் போன குடும்பம்

பட மூலாதாரம், Facebook

பேனர் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ, பெற்றோருக்கு ஒரே பெண். மேல் படிப்பிற்காக கனடா செல்லத் திட்டமிட்டிருந்தவர். அவரது மரணம், அவரது குடும்பத்தை நொறுக்கியிருக்கிறது.

சென்னை குரோம்பேட்டைக்கு அருகில் உள்ள நெமிலிச்சேரி பவானி நகரில், உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருக்கிறது சுபஸ்ரீயின் வீடு. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சுபஸ்ரீயின் சடலம் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது, அவரது தாயின் கதறல் அந்தப் பகுதியையே உலுக்கியது.

பிக்பாஸ்: மனஅழுத்தமும், விமர்சனங்களும் - காரணம் என்ன?

பட மூலாதாரம், VIJAY TV

பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களின் நடவடிக்கைகள் வெளியிலிருந்து நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இம்மாதிரி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நடவடிக்கைகள் ஏன் அப்படி அமைகின்றன?

இந்தியாவில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிவருகிறது. வங்காளம், மலையாளம் தவிர, பிற மொழிகளில் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

"மனித உணர்வுகளை எங்கே micro management செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அப்போதே அது மோசமான விஷயமாகிவிடுகிறது. ஒரு மனிதரை ஒரு கேமராவுக்கு முன்பாக இயல்பாக இருக்கச் சொன்னாலே இருக்க முடியாது. இத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி இயல்பாக இருக்க முடியும்? இது மிகப் பெரிய மன அழுத்தத்தை பங்கேற்பாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் ஏற்படுத்தும்" என்று பிக்பாஸ் குறித்த தனது கருத்தை தெரிவிக்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான ராஜன் குறை.

பெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்

பட மூலாதாரம், Getty Images

ஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறார் என்பது உள்பட தனிநபர்களின் அந்தரங்க தரவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படுவதாக 'பிரைவேசி இன்டர்நேஷனல்' (PL) நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்துடன் என்னென்ன தகவல்கள் பகிரப்படுகின்றன என்று ஆராய்வதற்காக பெண்களின் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் செயலிகளில் இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :