2010ஆம் ஆண்டு பேச்சுக்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு - என்ன பேசினார்?

டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘அமைதியை சீர்குலைக்கும் வகையில்’ பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) பிரிவு 45 (1)-இன் கீழ் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை துணைநிலை ஆளுநர் எடுத்திருக்கிறார்.

தொடர்புடைய சம்பவத்தில் சுஷில் பண்டிட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 28.10.2010 அன்று வழக்குத் தொடரப்படப்பட்டது. முன்னதாக, 2023 அக்டோபரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A / 153B மற்றும் 505-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக இருவர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு (சி.ஆர்.பி.சி) 196-இன் கீழ் வழக்குப்பதிவு செய்ய துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கினார்.

எழுத்தாளர் அருந்ததி ராய் என்ன பேசினார்?

புதுடெல்லியில் எல்.டி.ஜி அரங்கில், 21.10.2010 அன்று 'ஆசாதி - தி ஒன்லி வே' (‘சுதந்திரம் தான் ஒரே வழி’) என தலைப்பிடப்பட்ட மாநாடு ஒன்றில் அருந்ததி ராய் மற்றும் ஷேய்க் ஹுசைன் இருவரும் 'அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்' பேசியதாகப் புகார் எழுந்தது.

இந்த மாநாட்டில், 'இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கும் வகையில்' பிரசாரம் செய்யும் விதமாக பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இந்த மாநாட்டில் சையது அலி ஷா கிலானி, எஸ்.ஏ.ஆர்.கிலானி (மாநாட்டைத் தொகுத்து வழங்கியவர் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவர்), அருந்ததி ராய், முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மற்றும் மாவோயிஸ்ட் ஆதரவாளர் வர வர ராவ், ஆகியோர் உரையாற்றினர்.

'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை' என்றும் 'இந்திய ஆயுதப் படையால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும்', 'இந்திய அரசிடமிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுதந்திரத்திற்காக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' எனவும் கிலானி மற்றும் அருந்ததி ராய் தீவிரமாகப் பிரசாரம் செய்யும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பேச்சுக்களின் பதிவுகளும் புகார் அளித்தவரால் வழங்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த, சுஷில் பண்டிட் சி.ஆர்.பி.சி பிரிவு 156 (3)-இன் கீழ், டெல்லி எம்.எம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, 27.11.2010 அன்று தேதியிட்ட உத்தரவின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கான வழிமுறைகளுடன் இந்தப் புகாரை நீதிமன்றம் முடித்துவைத்தது. அதன்படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

யார் இந்த அருந்ததி ராய்?

நாவலாசிரியரும், கட்டுரையாளருமான அருந்ததி ராய், தன்னுடைய ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ (சிறிய விஷயங்களின் கடவுள்) என்ற நாவலுக்காக, 1997-ஆம் ஆண்டு ஆங்கில நாவல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘புக்கர் பரிசை’ வென்றார்.

சூழலியல் ஆர்வலராக அறியப்படும் அருந்ததி ராய், சமூக ஆர்வலர் மேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். தொடர்ந்து, மாவோயிசம், காஷ்மீர் பிரச்னை ஆகிய சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

1989-ஆம் ஆண்டில் ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார். எனினும், 2015-ஆம் ஆண்டில், “மதச் சகிப்புத்தன்மை மற்றும் இந்தியாவில் வலதுசாரி குழுக்களால் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிராக,” அவர் அந்த விருதைத் திருப்பி அளித்தார்.

யு.ஏ.பி.ஏ வழக்குகள்

கடந்த சில ஆண்டுகளாக யு.ஏ.பி.ஏ வழக்குகள் அதிகளவில் பதியப்பட்டு வருகின்றன. கருத்து வேறுபாடுகளை முடக்குவதற்கு அரசாங்கம் இதனைப் பயன்படுத்துவதாக சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2018ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு யு.ஏ.பி.ஏ-இன் கீழ் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க ஊழியர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது, அவர்களில் பலர் இன்னும் சிறையில் உள்ளனர்.

அவர்களில் முக்கியமானவர்கள் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், சுதிர் தவாலே, ரோனா வில்சன், ஷோமா சென், மகேஷ் ரவுத், கவிஞர் வரவர ராவ், சமூக சேவகர் சுதா பரத்வாஜ், அருண் ஃபெரீரா, வெர்னான் கோன்சால்வ்ஸ், பத்திரிக்கையாளர் கவுதம் நவ்லகா, எழுத்தாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி, ஹெனி பாபு, சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர் மற்றும் ஜோதி ஜக்தாப் போன்றவர்கள்.

இவர்களில் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வழக்கு பிப்ரவரி 2020ஆம் அண்டு டெல்லி கலவரம். அவர்களில் முக்கியமானவர் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் உமர் காலித். 2019 முதல் சிறையில் இருந்து பல முறையீடுகள் செய்த போதிலும், அவரால் இன்னும் ஜாமீன் பெற முடியவில்லை.

சமீபத்திய வழக்கு நியூஸ்க்ளிக் (Newsclick) தொடர்பானது. கடந்த ஆண்டு அக்டோபரில், நியூஸ்க்ளிக் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அதன் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு தொடரப்பட்டது.

2020ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதும் யு.ஏ.பி.ஏ விதிக்கப்பட்டது, அவருக்கு இப்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2019க்கு இடையில், 5,922 வழக்குகள் 'யு.ஏ.பி.ஏ' இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2021ஆம் ஆண்டு அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில் இவர்களில் 132 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் யு.ஏ.பி.ஏ-இன் கீழ் 1,948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ராஜ்யசபாவில் தெரிவித்தார். அந்த ஆண்டு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால் 64 பேரை நீதிமன்றம் விடுவித்தது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2018ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், யு.ஏ.பி.ஏ-இன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 1,421 பேரில், நான்கு வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 68 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சட்டத்தின் கீழ், 2016 முதல் 2019 வரை கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சதவீதத்துக்கும் சற்றே அதிகமானவர்கள் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்துள்ளது.

யு.ஏ.பி.ஏ சட்டம் என்றால் என்ன?

யு.ஏ.பி.ஏ சட்டம் 1967இல் கொண்டுவரப்பட்டது. அதில் 2008 மற்றும் 2012இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் மேலும் கடுமையாக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, மோதி அரசாங்கம் 2019இல் இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, இன்னும் கடுமையாக்கியது.

யு.ஏ.பி.ஏ சட்டத்தின் 15வது பிரிவின்படி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத்தை பரப்புதல் அல்லது பயங்கரவாதத்தை தூண்டுதல், அல்லது அத்தகைய குற்றத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவது ஒரு 'பயங்கரவாதச் செயல்' என வரையறுக்கப்படுகிறது.

இந்த வரையறையில் குண்டு வெடிப்புகள் முதல் கள்ள நோட்டு வணிகம் வரை அனைத்தும் அடங்கும்.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகள் பற்றிய தெளிவான வரையறையை வழங்குவதற்கு பதிலாக, பிரிவு 15இல் கொடுக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதச் செயல்' என்பதன் வரையறையின்படியே அவற்றின் அர்த்தங்கள் இருக்கும் என்று மட்டுமே யு.ஏ.பி.ஏ சட்டம் கூறுகிறது.

சட்டப்பிரிவு 35இல், வழக்கு முடிவு செய்யப்படுவதற்கு முன்பே, எந்தவொரு நபரையும் அல்லது அமைப்பையும் 'பயங்கரவாதி'யாக அறிவிக்கும் உரிமை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)