You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் போர்: அமெரிக்க ராணுவம் 4வது விமானத்தை இழந்தது - என்ன நடந்தது?
- எழுதியவர், கிளேர் கீனன்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
கேசி-135 விமானம் விழுந்து நொறுங்கியதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் அமெரிக்கா கூறியது.
முன்னதாக விமானத்தில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களில் இது ஒன்று என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று அமெரிக்கா கூறியது.
இரான் கூறியது என்ன?
போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள், நடுவானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டவை.
இவை அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. போர் விமானங்கள் பறக்கும் தூரத்தை அதிகரிப்பதற்காக முதல் வளைகுடா போரின்போது இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
கேசி-135 விமானத்தில் வழக்கமாக ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் விமானத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதியை இயக்குவதற்குப் பொறுப்பான ஒரு பூம் ஆபரேட்டர் (boom operator) என குறைந்தது மூன்று பணியாளர்கள் இருப்பார்கள்.
இந்த விபத்து நட்பு நாடுகளின் வான்பரப்பில் நடந்ததாக சென்ட்காம் விவரித்துள்ளது. இருப்பினும், இராக்கின் இந்தப் பகுதியில் இரான் ஆதரவு போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு கூட்டணி குழு ஏவுகணை மூலம் இந்த விமானத்தை இலக்கு வைத்ததாக இரானின் அரசுத் தொலைக்காட்சி கோரியுள்ளது.
இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் வெடித்ததில் இருந்து, இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய போரின்போது அமெரிக்க ராணுவம் இதுவரை குறைந்தது நான்கு விமானங்களை இழந்துள்ளது.
4வது விமானம்
இந்த மாத தொடக்கத்தில், குவைத் வான் பரப்பில் "தவறுதலான நட்பு நாட்டுத் தாக்குதலில்" மூன்று F-15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலிருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர்.
போயிங் நிறுவனம் 1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்திற்காக கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் விமானங்களைத் தயாரித்தது.
இது அமெரிக்க ராணுவத்தின் வான்வழி எரிபொருள் நிரப்பும் பிரிவின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. மேலும், போர் விமானங்கள் தரை இறங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நீண்ட தூரப் பணிகளை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு