இரானின் கை ஓங்குவதாக இஸ்ரேலில் சிலர் கருதுவது ஏன்? இரு போர் நிறுத்தங்களும் நிரந்தர அமைதி தருமா?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, இடம்பெயர்ந்த மக்கள் தெற்கு லெபனானில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.
    • எழுதியவர், பால் ஆடம்ஸ்
    • பதவி, ராஜீய விவகாரங்கள் செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் ஒன்று அல்ல, மாறாக இரண்டு போர் நிறுத்தங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், இரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனைகளுக்கு களம் இப்போது தயாராகியுள்ளதா?

இரான் மற்றும் லெபனானில் நடைமுறையில் உள்ள போர் நிறுத்தங்கள் இரண்டும் 'நிலையற்றவை' என்றே விவரிக்கப்படுகின்றன (பொதுவாகவே போர் நிறுத்தங்கள் அப்படித்தான் இருக்கும்); ஆயினும், போரின் இரைச்சல் மீண்டும் ஓய்ந்துவரும் இவ்வேளையில், இது வாய்ப்புகள் நிறைந்த, அதே சமயம் ஆபத்துகளும் நிறைந்த ஒரு தருணமாகத் திகழ்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கையில், இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா ஆயுதக் குழுவுக்கும் இடையிலான சண்டையில் 10 நாட்கள் இடைநிறுத்தம் குறித்து வியாழக்கிழமை இரவு வெளியான அறிவிப்பு, இரானுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும்.

தெஹ்ரானில் உள்ள ஆட்சி லெபனானில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வந்தது, அது இல்லாமல் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுவதை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தது.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

இப்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹோர்மூஸ் நீரிணை "முழுமையாக திறக்கப்படும்" என இரான் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தை உணர்த்தியது போல, லெபனானில் சண்டை தொடர்ந்து கொண்டிருந்த போதிலும், இஸ்ரேல் பெய்ரூட் மீதான மேலதிக தாக்குதல்களை தவிர்த்த நிலையில், உண்மையில் முன்னேற்றம் சாத்தியமானதாகவே இருந்தது. ஆனால், லெபனானும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என, இரானும் பாகிஸ்தானும் வலியுறுத்தின.

இப்போது அது நடைபெற்றுள்ள நிலையில், வடக்கு எல்லைக்கு அருகே வாழும் இஸ்ரேலியர்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர். ஏனெனில், ஹெஸ்பொலா இனி ஒருபோதும் மற்றொரு ராக்கெட்டை தங்கள் நாட்டின் மீது ஏவாது என்பதை உறுதி செய்வதற்கு பதிலாக தங்களின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து விட்டதாக அவர்கள் கோபத்தில் உள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள சிலரைப் பொறுத்தவரை, போர் நிறுத்தம் இரானின் கைகளையே ஓங்கச் செய்கிறது; இதன் மூலம், இஸ்ரேலின் பரம எதிரி நிகழ்வுகளின் போக்கை நிர்ணயிக்கும் வாய்ப்பைப் பெறுகிறது.

"இந்த போர் நிறுத்தம், இஸ்ரேல் தவிர்க்க முயன்று வந்த அதே சூழலுக்கு, நடைமுறையில் அதற்கு ஒப்புதல் அளிக்கும் சூழலிலேயே நிறுத்துகிறது: இது இரானுக்கும் இஸ்ரேலின் லெபனான் நடவடிக்கைகும் இடையே தொடர்பு இருப்பதாக சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுதல்," என்று பிரபல வலதுசாரி செய்தித்தாளான இஸ்ரேல் ஹேயோம்-இல் ஷிரித் அவிடான் கோஹென் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லெபனானில் இடம்பெயர்ந்த பலரும் தங்கள் இடங்களுக்குத் திரும்புகின்றனர்

"நேற்று, ஹெஸ்பொலா மட்டுமின்றி லெபனானும் கூட, தங்கள் எஜமானர் இப்போதும் கட்டுப்பாட்டைத் தன் கையில் வைத்திருப்பதாகவும், இப்பிராந்தியத்தில் நிகழ்பவற்றைத் தொடர்ந்து தீர்மானித்து வருவதாகவும் இறுதியான உறுதிப்படுத்தலைப் பெற்றது."

உண்மையில், ஒன்றோடொன்று தொடர்புள்ள இம்முரண்பாடுகளில் அனைத்துத் தரப்பினரும், சமீபத்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏதோ ஒன்றைப் பெறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் தலைமை, போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்கு பெருமை கோருகின்றனர்.

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இன்னும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதையும், அதேவேளையில் லெபனான் அரசாங்கம் பல மாத முயற்சிகளுக்குப் பிறகு தற்போது இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதையும் நெதன்யாகு சுட்டிக்காட்டலாம்.

பட மூலாதாரம், Adnan Abidi / Reuters

படக்குறிப்பு, லெபனானில் சிலர் போர்நிறுத்த அறிவிப்பைக் கொண்டாடினர்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

போர் நிறுத்தத்தை மதித்து நடப்பதாகக் கூறும் (அதேவேளை, தாங்கள் முற்றிலும் தயாராகவே இருப்பதாக வலியுறுத்தும்) ஹெஸ்பொலா, தான் தோற்கடிக்கப்படவில்லை என்றும், ஆயுதங்களைக் கைவிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

"முறையான, உண்மையான போர் நிறுத்தம் ஏற்படும் வரை, இஸ்ரேல் ராணுவம் திரும்பப் பெறப்படும் வரை, கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு முன், இடம்பெயர்ந்த மக்கள் திரும்புவதற்கு முன் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன், ஹெஸ்பொலாவின் ஆயுதங்கள் குறித்துப் பேசுவது சாத்தியமல்ல" என மூத்த ஹெஸ்பொலா தலைவர் வாஃபிக் சாஃபா வியாழக்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார்.

லண்டனை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சாதம் ஹவுஸ் (Chatham House) எனும் சிந்தனை மையத்தை சேர்ந்த லீனா கதிப் கூறுகையில், இந்த போர் நிறுத்தம் இஸ்ரேல் மற்றும் லெபனான் தங்களின் நேரடி பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு வழிவகை செய்துள்ளதாகவும் ஆனால், இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான தடைகள் பெரிதளவில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

"இந்த பிரச்னை மிகவும் சிக்கலானது." என்கிறார் அவர். "இது எல்லை நிர்ணயம், ஹெஸ்பொலாவின் ஆயுதங்களை களைதல் மற்றும் லெபனான் நிலப்பரப்பிலிருந்து இஸ்ரேலின் விலகல் ஆகியவற்றுடன் தொடர்புடையது."

இஸ்ரேலும் லெபனானும் 1948-ஆம் ஆண்டிலிருந்து போர்ச்சூழலிலேயே உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவுகள் இல்லை.

ஆனால், இப்பிராந்தியம் முழுவதும் இரானின் நிலையை வலுப்படுத்துவதற்கு மாறாக, வாஷிங்டனில் இந்த வாரம் இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்களுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள், லெபனானை இரானின் பிடியிலிருந்து விடுவிக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக லீனா கதிப் வாதிடுகிறார்.

"இந்த பிராந்தியத்தின் அதிகார சமநிலை இரானிடமிருந்து விலகிச் செல்கிறது," என்கிறார் அவர். "இனிமேல், இரானால் லெபனானை ஒரு பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்த இயலாது."

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானுடனான ஓர் ஒப்பந்தம் "மிக நெருக்கத்தில்" இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான மற்றொரு ராஜீய ரீதியிலான செயல்பாட்டில் என்ன நிகழ்கிறது என்பதையே இன்னும் பலவும் சார்ந்திருக்கின்றன.

இஸ்லாமாபாத்தில் பரவலாக எதிர்பார்க்கப்படும் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால், மத்திய கிழக்கு முழுவதும் இரான் மேற்கொள்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதும் தீய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது வாஷிங்டனின் நோக்கங்களில் இடம்பெறும்.

குறிப்பாக இஸ்ரேலுக்கு ஹெஸ்பொலா, ஹமாஸ் மற்றும் யேமனில் ஹூதி ஆயுதக் குழுக்களுக்கு இரான் தரும் ஆதரவை கட்டுப்படுத்துவது அவசியமாகும். இதன் மூலம், இரானின் 'எதிர்ப்பு கூட்டணி' (Axis of Resistance) அமைப்பானது யூத அரசை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வந்த பல தசாப்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பிராந்திய செல்வாக்கிற்கான ஒரு முக்கியக் கருவியாகத் தான் கருதுவதை, இரான் அவ்வளவு எளிதில் கைவிடாது.

ஆனால், இது எதிர்வரும் கடுமையான சவால்களில் ஒன்று மட்டுமே.

இரானின் அணுசக்தி திட்டத்தின் விதி மற்றும் ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலம் உள்ளிட்டவற்றுக்கு இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

எப்போதும் போலவே, தான் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, டிரம்ப் முழு முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்; இரானுடனான ஒப்பந்தம் "மிகவும் நெருக்கத்தில்" இருப்பதாகக் கூறுவதுடன், நிலவரம் "மிகச் சிறப்பாக" முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். கடந்த ஆண்டு குண்டுவீசித் தாக்கப்பட்ட இஸ்ஃபஹானில் உள்ள ஒரு தளத்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருப்பதாகக் கருதப்படும் சுமார் 440 கிலோ (970 பவுண்டு) அளவிலான, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க இரான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுவிட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகேய் இதனை மறுத்து, அரசு தொலைக்காட்சியில் கூறுகையில், "அமெரிக்காவுக்கு யுரேனியத்தை மாற்றுவது ஒரு தெரிவாக முன்வைக்கப்படவில்லை. இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரானின் மண்ணைப் போலவே எங்களுக்கும் புனிதமானது; எத்தகைய சூழ்நிலையிலும் அது வேறு எங்கும் மாற்றப்படாது" என்றார்.

பட மூலாதாரம், Reuters

அணுசக்தி விவகாரம் தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்துக்கும், அணு ஆயுதத்தை ஒருபோதும் உருவாக்கப்போவதில்லை என்ற இரானின் உறுதிமொழியும், அணுசக்தி செறிவூட்டலை எவ்வளவு காலத்துக்கு நிறுத்திவைக்க அது தயாராக உள்ளது என்பது குறித்த உடன்பாடும் தேவைப்படும்.

இரானின் மற்றொரு ஆயுதம் ஒன்று உள்ளது, அது அந்நாட்டின் ஆயுதக் கிடங்கில் எப்போதும் இருந்த போதிலும், மிகச் சமீபத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது: அதுவே ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாகும்.

அந்தக் குறுகிய நீர்வழித்தடம் வழியாக நடைபெறும் கடல்வழி போக்குவரத்தை நெறிப்படுத்த, புதிய விதிமுறைகளை விரும்புவதாக இரான் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தற்போதுள்ள தனது இறுக்கமான கட்டுப்பாட்டு முறையை மாற்றிவிட்டு, வளைகுடாவுக்குள் எவை நுழைகின்றன மற்றும் எவை வெளியேறுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் தனது இறையாண்மை உரிமையை ஓமனுடன் இணைந்து அங்கீகரிக்கும் ஒரு சட்டக் கட்டமைப்பை அது நிறுவ முற்படுகிறது.

இதற்கிடையில், லெபனானில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை வரவேற்ற இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலப்பகுதி முழுவதும்" அதாவது, அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த நீரிணை "முழுமையாகத் திறந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு நிபந்தனை உள்ளது: அராக்சி குறிப்பிட்டவாறு, "இரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட வழித்தடத்தையே" கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, போருக்கு முன்பு பயன்பாட்டிலிருந்த எதிரெதிர் திசையில் செல்லும் கப்பல்களைப் பிரித்து வைக்கும் இரண்டு கடல் வழிப்பாதைகளுக்கு வடக்கே, இரானிய நிலப்பகுதிக்கு மிக அருகில் செல்லும் புதிய வழித்தடங்களையே குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

வளைகுடாவுக்குள் சிக்கிக்கொண்ட கப்பல்களால் ஏற்பட்ட முடக்கத்தை இது எவ்வளவு விரைவாகத் தணிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரம்ப் தனது வழக்கமான உறுதியான பாணியில், அந்த நீரிணை "முழுமையாகத் திறந்திருப்பதாகவும், முழுமையான போக்குவரத்துக்குத் தயாராக இருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்; சந்தைகளும் இதற்குச் சாதகமாகவே பதிலளித்திருப்பதாகத் தெரிகிறது. எனினும், கப்பலின் கேப்டன்கள் இப்போதும் ஒருவித எச்சரிக்கையுடனே பின்னோக்கிப் பார்த்துச் செல்லக்கூடும்; இரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை இப்போதைக்குத் தொடரும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தச் சாதகமான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பேச்சுவார்த்தையாளர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்றே உறுதியாகக் கூறலாம்.

இரானுடனான கடைசியாக மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தமான, 2015-ஆம் ஆண்டின் 'கூட்டு விரிவான செயல் திட்டம்' (JCPOA), பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்பட சுமார் 20 மாதங்கள் எடுத்துக்கொண்டது; இது அணுசக்தி சார்ந்த விவகாரத்தை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது. 2018-ஆம் ஆண்டில் டிரம்ப் அமெரிக்காவை இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக்கொண்டார்; இது அந்த ஒப்பந்தம் சிதைந்துபோக வழிவகுத்தது.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

டிரம்ப், விரைவாக ஒப்பந்தங்களை முடிப்பவர் எனும் பிம்பத்தைத் திட்டமிட்டு முன்னிறுத்த விரும்புகிறார்; ஆனால், தனது ஒப்பந்தங்கள் உண்மையில் எதைச் சாதித்தன அல்லது எதையாவது சாதித்தனவா என்பதை அவர் பார்க்க மாட்டார்.

2018–19 காலகட்டத்தில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடனான தனது இரண்டு உச்சிமாநாடுகளைச் சுற்றி எழுந்த பெரும் ஆரவாரங்கள் அனைத்தையும் மீறி, உண்மையில் அந்தச் சந்திப்புகள் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை. வட கொரியா தனது அணுசக்தித் திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

ஆனால், கடந்த ஆறு வாரங்களாக நிகழ்ந்த கொந்தளிப்பான சம்பவங்களுக்குப் பிறகு, ஒரு வகையான ராஜீய செயல்முறை தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது; லெபனானில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, இச்செயல்முறைக்கு மேலும் ஒரு உத்வேகம் கிடைத்திருக்கும்.

இறுதியில் மீண்டும் போர் மூள்வதைத் தடுக்க இது போதுமானதா? அது டிரம்புக்குக் கூடத் தெரியாது.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு